ஞானப் பதக் கீர்த்தனைகள்

வேதநாயக சாஸ்திரி

கிறிஸ்து பிறப்பின் பாட்டுகள்

 

13

 

வெண்பா

ஆற்றுமமேயித்தனையா யன்பாயுனக்கிரங்கி

வேற்றுமை சற்றேனும் விரும்பாமல்- தோற்றவிங்கே

யந்தோமனுடவதாரமாய் முன்னணைக்குள்

வந்தார் திருக்குமாரன்.

 

பல்லவி

திருக்குமாரன் வந்தார் மனுடவதாரமாய்ச்

செகத்திலே பிறந்தார்.

 

அனுபல்லவி

பெருக்கவான் பரஞ்சோதியனாதி

பேசப் பிரஸ்தாபப் பொருளேசுக் கிறிஸ்தா முத்தம.

திருக்

 

சரணங்கள்

1.சிங்காரத் தோட்டத்திலாத மேவாளன்று

தேவனின் கட்டளை மீறியே யவர்

சங்கரமாகும்படி கனிதின்ற அச்

சாபத்தின் தீவினையேறியே

பங்காக மேவக் கணங்களடங்காது தாவ வதினுட

பாரத்ததி கோரத்துயர் தீரத்தவி தூரிற் சிறு

பால சீல கோல மேலப்

படருமடவியிலிடையர் குடிலிடை

அடையுவிடைமுனமடியரடி பெறத்,

திருக்

 

2. திட்டமாய்ப் பெத்தலே மூர்க்கருகாகச்

சிறந்தபுன்மீது வனத்திலே வெகு

இஷ்டமாய்த் தாவீதின் கோத்திரமாமரி

யென்ற கனியுதரத்திலே

துட்டங்களோடச் சுரர்சவ

வட்டஞ் செய்தாட ஏவாளைமுன்

சோதித்த பிரேதக் கணம் வதைப்பட நீதத் தொடு

தூதர் வேதகீத மோதத்

தொகுத்து முனிவர்கள் பகுத்து மறைதனில்

வகுத்தப்படிதயை மிகுத்த பரனுட.

திருக்

 

3. தற்பரனாதி பராபர வஸ்துவின்

தற்சுயரூப சொரூபன் மரியிடத்

தற்புதமாகவே யுற்பவித்த ஒரு

ஆச்சரியப் பிரஸ்தாபன்

நற்புறுவாகன் மகாகன விற்பன யூகன் யேசு

ராஜன் மெச்சுப தேசனர்ச் செயர்

நேசன் மெய்ச்சருவேசனுச்சித

ஞானி தானி மானி மேனி

நற்றவத்துயா முத்தொழிற் றிரு

சொற்றிருத்துவ கத்தனித்திய.

திருக்

 

4. தேவசகாயன் தரும் வேதநாயகன்

சிங்காரப் பாட்டிற்கு நேயன்றினம்

ஆவலுடன் தொழும் பேர்களனைவருக்கும்

அன்பு செய்யும் நற்சகாயன்

தேவர்க்கபிடேகன் சதாநித்திய ஜீவப்பிரவடிகன் தவீதெனும்

சிங்கத்துரை துங்கப்பிர சங்கக்கலையங்கத்துடன்

தேக யோக வாக ராகச்

சிறந் தவம்பரன் அறைந்தவும்பர்கள்

பறந்து பண்பிடு நிறைந்த சம்பிரமன்.

திருக்

(1830 - வரு.)

 

(சேர்ப்பு: - பெரிய ஐரோப்பிய யுத்தத்தில் கர்த்தர் சமாதானத்தைக் கட்டளையிட அவரை நோக்கிச் செய்த விண்ணப்பக் கவி - 1917.)

 

5. பத்தொன்பா நூற்றுப் பதினேழாம் ஆண்டிதில்

மெத்தவுனின் பதம் நாடி தயை

வைத்தெங்கள் காலமதிற் சமாதானந்தந்

தத்தனை அன்பு செய் நீடி

யுத்தங்கள் ஓய மருட்கணை

முற்றுமே மாய பயமற

வெற்றிப் பிரவாகப் புவியிற் கணற்புதமாய்க்கனி

பாலனாகத் தோணலான

பிறந்த பாலகன் வரங்களருடற

நிறைந்த நேசமதுறைந்து நிலைபெற

 

-----------------------------------

 

14

 

வெண்பா

மன்னன் றவிது மரபனைத்தும் வாழ்கவே

இந்நிலத் தோரியாவரு மீடேறவே-கன்னி கேற்பத்

தந்தரமாய் வானிருந்திங் கானாரே மெய்யான

சுந்தரஞ் சேர் தந்தை சுதன்.

 

(இராகம்: செஞ்சுருட்டி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

தந்தை சுதன் வானிருந்

திங்கே வந்தார் திவிய.

 

சரணங்கள்

1.மைந்தரைத் தேடி சிந்தையிலுறவாடி

மன்னவன்றவீது திருக் கன்னி கர்ப்பம் நீடி.(திவிய)

தந்தை

 

2. காரணக் கிருபா சனத்தி னானன்மை

கதித்த திருமறை வசனத்தினான் றிவ்விய.

தந்தை

 

3. பாக்கிய மகிமைப் பெருக்கத்தான் முற்றும்

பாவிகள் மேல் மன உருக்கத்தான் றிவ்விய.

தந்தை

 

4. சித்திர அபரஞ்சி சிரத்தினா னொரு

தேவ பிதாவுட சுந்தரத்தினான் றிவ்விய.

தந்தை

 

5. சீயோன் மகள் மணவாளனெனவே கானான்

தேசத்திலே பரஞ் சோதி மின்னவே றிவ்விய.

தந்தை

 

6. பக்தரைக் கண்டு பரமநெறி விண்டு

பாராட்ட மானிடவதாரங் கொண்டு.(திவிய)

தந்தை

 

7. பன்னிரு குலத்திசராவேலர் நாடவே

பரமசேனைகள் வந்து பணிந்து கொண்டாடவே.(திவிய)

தந்தை

 

8. வேதநாயகன்பா வடிபடவே யந்த

வேதாளச் சர்ப்பம் பொடிபடவே.(திவிய)

தந்தை

(1827 - வரு.)

-----------------------------------

 

15

 

வெண்பா

வானத்தைவிட்டு மகத்துவமெலாந் துறந்து

ஞானத் தோடெம்மை யங்கே நாட்டவே-கானத்தி

லந் தோ வறுமை யா மாக் கொட்டகத்திலே

வந்தார் பூலோக ரட்சகர்.

 

பல்லவி

பூலோக ரட்சக பூபதி வந்தார் கன

பூலோக ரட்சக பூபதி வந்தார்.

 

சரணங்கள்

1.மேலோகத்தி லிருந்து மெய்யான தெய்வமே ஒகோ

மேசியா யேசு ராஜ மனுவேலா ஓ.

பூலோக

 

2. பரமண்டலங்களினிற் கெம்பீரம் ஓ

பாவிகளுக்கன்றோ இந்நேரம் ஓ.

பூலோக

 

3. பேரின்பவாரி பிரதானாசாரி ஓ

ஆரும் பணிந்தி றைஞ்சுமசரீ ரீ

ஓ.

பூலோக

 

4. ஒப்பிலா நேசம் உன்னதவிலாசம் ஓ

உச்சித மெஞ்ஞானப் பிரகாசம். ஓ.

பூலோக

 

5. மனமிரங்கித் தானே வலிய தம்பிரானே ஓ

மைந்தனை தந்தாரிதோ சீயோனே ஓ.

பூலோக

 

6. தேவாட்டுக் குட்டிக்குக் கலியாணம் ஓ

சீயோன் மலையின் ஞாயப் பிரமாணம். ஓ.

பூலோக

 

7. மானிடர் சென்மமே தோணீரோ ஓ

மாட்டுக் கொட்டிலைக் கிட்டிக் காணீரோ ஓ.

பூலோக

 

8. வேதநாயகன் விந்தைப் பாட்டாரே ஓ

மேசியா தள்ளி விட மாட்டாரே

ஓ.

பூலோக

(1831 - வரு.)

-----------------------------------

 

 

16

 

வெண்பா

நித்திய ஜீவனிலைத்ததே பாவிகளுக்

கித்தனை சம்பத் தெல்லா மெய்திற்றே-சத்தியகிரு

பாசன்னா மன்னா பரம வானத்தின் மன்னா

வோசன்னா அல்லேலூயா.

 

(தீரசங்கராபரணம்)

(ஏகதாளம்)

 

பல்லவி

அல்லேலூயா சந்தோடம் அல்லேலூயா வென்றைக்கும்

அல்லேலூயா பரனுக்கனந்த தோத்திரமாக.

 

சரணங்கள்

1.எல்லாவஸ்து மீடேற சல்லாப தேவதிரித்துவ

வல்லாளன் மைந்தனுரு வில்லான் மனுவதானார்.

அல்

 

2. பூலோகத்தை ரட்சிக்க சாலோக பதங்கட்கும்

மேலாகிய தெய்வீக மேலோகாதிபன் வந்தார்.

அல்

 

3. பாவ வினையகல மூவுலகுமகிழ

ஆவலதாக வேக தேவசுதன் பிறந்தார்.

அல்

 

4. பேசரிதான ஞான தேசுலாவிய தேவ

மேசியா வெனும் ராஜ யேசுநாதர் பிறந்தார்.

அல்

 

5. எம்மானிலமுந் தொழ இம்மானிலமும் வாழ்க

எம் மாலிவ் வேஷமாக இம்மானுவேல் பிறந்தார்.

அல்

 

6. சாதியெல்லா மீடேற ஓதும் வாசகமதாய்

நீதி நெறி தவறா வேதநாயகர் வந்தார்.

அல்

 

7. மோட்சத்தின் நன்மையெல்லாம் சூட்சத்திலே யடைய

ஆச்சரியமானவர் காட்சியாகப் பிறந்தார்.

அல்

 

8. மதி சேர் மெய்ஞானி மார்கள் துதிசேர் பெத்தலேம் பதியிற்

கதிசேர் கிறிஸ்து நாதர் அதிசயமாய்ப் பிறந்தார்.

அல்

 

9. சாத்திரர் வந்து காண தோத்திரம் ஆஞ்சு கூறப்

பாத்திபன் தாவீதேந்திரன் கோத்திரத்திற் பிறந்தார்.

அல்

 

10. காட்டு முரட்டுமன மேட்டுத் துறட்டுச் சிந்தை

போட்டு விட்டிட் டீடேற மாட்டுக்கொட்டிலில் வந்தார்.

அல்

 

11. ஆவிதென்ன காரணம் ஆவிதென்ன மாறுதல்

ஆவிதென்ன தரித்திரம் ஆவிதென்ன மகத்துவம்.

அல்

 

12. ஆவிதுவே சிநேகம் ஆவிதுவே கிருபை

ஆவிதுவே கெம்பீரம் ஆவிதுவே யானந்தம்.

அல்

 

13. துங்க சுவிசேடப் பிரசங்கங் கேட்குஞ் சபை யோர்

எங்குமிங்கித சுப மங்களமாக வாழ்க.

அல்

 

14. நாடுங் கிறிஸ்துவைக் கொண்டாடும் வேதநாயகன்

பாடும் பதங்கள் மோட்ச வீடும் நிறைந்து வீச.

அல்

 

குறிப்பு: ஒவ்வொரு பதங்களிலும் சீருக்குச்சீர் பல்லகத்தைப் பாடுகிறபடி இதற்கு செய்யாமல் 1, 7, 8, 9, 10, 11, 12, 13 அடிகளுக்கு மாத்திரம் பல்லகத்தை பாடலாம். ஆனால் 2-வது அடிக்கு மேலோகாதிபன் வந்தார். 3-வது அடிக்கு தேவசுதன் பிறந்தார். 4-வது அடிக்கு இயேசுநாதர் பிறந்தார். 5-வது அடிக்கு இம்மானுவேல் பிறந்தார். 6-வது அடிக்கு வேதநாயகன் வந்தார். 14-வது அடிக்கு அல்லேலூயா. அல்லேலூயா என்ற சொற்களை நாற்றீத்தும் இரட்டித்தும் பாடலாம்.

(1800 - வரு.)

 

-----------------------------------

 

17

 

வெண்பா

பெத்தலேகேமூரின் பிரபலமாய்த்தாவீதின்

வித்தினொளிவாய் விளங்கியே-முற்றும்

அதந்துறந்த வாழ்வையளிப்பதற்குத் தேவ

சுதன் பிறந்தார் நெஞ்சே துதி.

 

(சஹானா)

(சாப்பு தாளம்)

 

பல்லவி

சுதன் பிறந்தார்

சுதன் பிறந்தார்.

 

அனுபல்லவி

துதி மிகு தேவ சுதன் பிறந்தார்.

துதி-சுதன்

 

சரணங்கள்

1.சருவ தயாப சகாயப் பிரதாப

கிருபைப் பிதாவின் தற்சுவாப.

துதி-சுதன்

 

2. சரீரமிலாத சதாபதி வினோதப்

பர சொரூபக்குணாதீத.

துதி-சுதன்

 

3. பரமாபிஷேகப் பக்கிஷ சினேகப்

பெருமான் மகத்துவத் திரியேக.

துதி-சுதன்

 

4. வானாதிகார மகிமைச் சிங்கார

ஞான கர நரவ தார.

துதி-சுதன்

 

5. மனுடரை மீட்க மறு பிறப்பாக்க

கனி வினை யாவையுந் தீர்க்க.

துதி-சுதன்

 

6. இந்நிலத்தை நாடி முன்னணையைத் தேடி

கன்னியாஸ்திரியிடம் நீடி.

துதி-சுதன்

 

7. பெத்தலேகே மூரில்மெய்த்தவீதின் வேரில்

பத்தர்களுக்காக இப்பாரில்.

துதி-சுதன்

 

8. தேவர்கள் போற்றச் சோபனங்கள் சாற்ற

மூவரசர்கள் பணிந்தேற்ற.

துதி-சுதன்

 

9. நெல்லை வேதநாயக னேடிக் கொண்டாடப்

பல்லுயிர்களுங் களித்துப் பாட.

துதி-சுதன்

 

-----------------------------------

 

18

 

வெண்பா

பாதகந் தீரப் பசாசின் வினையொழிய

வேதம் விளங்க விளங்கவே-நீதிதரச்

சாதிகளெல்லாம் பிழைக்கத் தாரணியிலே பிறந்தா

ராதி பிதாவின் சுதன்.

 

(சஹானா)

(ஆதி தாளம்)

 

பல்லவி

ஆதி பிதாவின் சுதன் பிறந்தார்

கன்னியாஸ்திரியிடமே சுதன் பிறந்தார்

தேவரூப சொரூபானந்த சோதி.

 

சரணங்கள்

1.சாதிகள் செய்த கொடும் பாதகமே தொலைக்கத்

தற்பரானந்த குருநீதன் (சுயதற்பரா) உயர்

முப்பொருளொன்றாஞ் சத்திய வேத னெங்கள்

சாமி யேசு நாதன்.

ஆதி

 

2. வானம் புவியுந்தந்த ஞானந்தயை நிறைந்த

வல்லமைச் சுயாதிபத்தியராயன் (சருவ வல்) ஏழை

மனுடர்க்கதி பிரிய நேயன் தயை வைத்த சகாயன்.

ஆதி

 

3. ஏதன் சிங்காரக் காவிலா தன் துரோகத்தாலே

எல்லாத்தையும் படைத்தவஸ்து (ஒகோ) மகா

ஏழை நராட்களினந் திஸ்து நமதிறைவனேசுக் கிறிஸ்து.

ஆதி

 

4. தன்னிகரில்லாத வோருன்னதமான தேவன்

மன்னன் றவீது வங்கிஷ நேசன் (யூதர் மன்னன்) திரு

வசனப் பிரதாப சத்திய வாசனிம்மானுவேல் ராசன்.

ஆதி

 

5. மந்தையாயர்கள் கூட சந்தித்தரசர் தேட

அந்தரத்திற் சுரர் நின்றாடப் (பணிந்தந்தா) சதா

னந்தனந்த சோபனம் பாட பரமானந்தம் நீட.

ஆதி

 

6. நெல்லை வேதநாயகன் சொல்லுங் கிருபைத் தாயகன்

வல்லப ஞான மணவாளன் (சருவவல்) எங்கும்

பல்லுயிர் பணியுந்துணைத் தாளன்நித்திய பரமகுணாளன்.

ஆதி

(1835 - வரு.)

-----------------------------------

 

19

 

வெண்பா

அதிசயங் கண்டீரோ ஆக்குடிலில் வானோர்

பதிமாங்கிஷத்தில் வெளிப்பட்டார்-சதிராக

மாதாவுண்டானாள் மகத்துவத்தின் றேவனுக்கோ

ராதாமின் பாவத்தினால்.

 

(சங்கராபரணம்)

(ஆதி தாளம்)

 

பல்லவி

ஆதாமின் பாவத்தாலே அரூபனுரூபமான

அதிசயமிதோ பாரும்.

 

அனுபல்லவி

மாதேவை புத்திரரான மானிடர் குழாங்களே நீர்

வல்லமைப் பிதாவி னோரே மைந்தனைச் சந்திக்க வாரும்.ஆதா

சரணங்கள்

1.ஆதிபிதாவின் கிருபாசனத்தைத் துறந்தார்

அழகான மோட்ச செல்வ பாக்கியத்தை மறந்தார்

பாதகந்தீர வேண்டி பெத்தலையிற் சிறந்தார்

பராபரவஸ்து வானோர் பாலனாகப் பிறந்தார்.

ஆதா

 

2. உன்னத வஸ்துவா னோருலகத்தை நேசித்தார்

ஒப்பிலாத் தேவ தேவன் மனுஷரையாசித்தார்

தன்னொளிவை விளங்கத் தானே பிரகாசித்தார்

சாதிகளுக்குத் தயவாயுப தேசித்தார்.

ஆதா

 

3. மந்தையாயர் சந்திக்கச் சந்தோடமே விண்டார்

வான நாட்டைப் பிரிந்து மாட்டுக்கொட்டிலைக் கண்டார்

விந்தைத் திரு முதலார் கந்தைத் துணியைக் கொண்டார்

வேத காரணர் தானேமேவி முலைப் பாலுண்டார்.

ஆதா

 

4. கன்னி மரியத் தாயார் சின்னக் குமாரனானார்

காரிருள் சூழ்ந்த கொடுங்கானகத்துக்குப் போனார்

மன்னன் றவீதரசன் வங்கிஷத் திருக் கோனார்

மாறுதலன்றி யென்றுந் தானே யிருக்குந் தானார்.

ஆதா

 

5. விண்ணவர் தேட்டாரே மிக்க கொண்டாட்டாரே

வேதநாயகன் சொன்ன பாட்டையுங் கேட்டாரே

மண்ணுலகனைத்தையும் வலிமையாய் மீட்டாரே

வந்தாரைத் தள்ளி விடமாட்டாரே நாட்டாரே.

ஆதா

(1833 - வரு.)

-----------------------------------

 

20

 

வெண்பா

கானகத்திற் காரிருளிற் காலிகளின் கொட்டிலிலே

வானகத்திலே யிருந்து வந்தானை-ஞானசத்துவம்

நீண்டானை யன்பு நிறைந்தானைப் பாவியை வந்

தாண்டானைக் கண்டேனியான்.

 

(சஹானா)

(ஆதி தாளம்)

 

பல்லவி

ஆண்டானைக் கண்டேன் ஆக்

கொட்டகத்திலே ஆண்டானைக் கண்டேன்.

 

அனுபல்லவி

நீண்டக் கிருபை வைத்தெனை மீண்ட பரம நாட்.

ஆண்

 

சரணங்கள்

1.சுத்தக் கிருபைத் தயாப நித்தியப்பரம தேவ

துத்திய மகத்துவராச சத்திய கிறிஸ்துவை.

ஆண்

 

2. துங்கப் பராபரனெம் பங்குக் கனுக்கிரகித்த

சிங்கத் தவிது யூதர் சங்கத்தரசனை.

ஆண்

 

3. அக்கிரமத் தானிறைந்தவுக் கிரத்துலகை முற்றும்

நிற்கிரகிக்காமல் வந்த சக்கராதிபதியை.

ஆண்

 

4. தன்னிகரற்றதோ உன்னத வஸ்துவோ

என்ன மகத்துவ மோ முன்னணை மீதிலே.

ஆண்

 

5. மந்தைப் புறத்திலோ விந்தைப் புல்லுக்குள்ளோ

எந்தைக் குடுத்தினது கந்தைத் துணியதோ.

ஆண்

 

6. பண்டு வினையதோ தொண்டர் பெருமையோ

அண்டர் பிரமிக்கவோ கொண்டதிக் கோலமோ.

ஆண்

 

7. தூதர்கள் கொண்டாட்டிலே மாதவர் தந்தேட்டிலே

வேத நாயகன் பாட்டிலே பாதிரா விருட்டிலே.

ஆண்

 

-----------------------------------

 

21

 

வெண்பா

மீட்டாரே காவல் விடுத்தாரே துன்பமெல்லாங்

கேட்டாரே சாவைக் கெலித்தாரே-நாட்டாரே

அந்தோ சுகந்தரு தற்காகப் பரஞ்சோதி

வந்தார் நான் சொரூபமாய்.

 

(ஜங்கலா)

(ஆதி தாளம்)

 

பல்லவி

பரஞ்சோதி வந்தாரே நரன்றன் றன்மை.

 

அனுபல்லவி

பெருங் கொடும் பவத்தால் வரந்தருங் கிறிஸ்துப்

பெத்தலேகேமினிற் பிறந்தாரே நரன்றன் றன்மை.

பரஞ்

 

சரணங்கள்

1.மோக்கிடப் பத்தா தீக்கிடக் கத்தா

முந்தின சேயர் பிறந்தாரே

மோசகால கூளிகள் வினைநீக்கி

நிதஞ் சுகமே தந்தாரே.

பரஞ்

 

2. கனிவினையடமே யனைமரியிடமே

கடவுளர் வந்து பிறந்தாரே

காதை வேத புராதன நாதன்

சுபவிசேடந்தந்தாரே யனந்தந்தன்மை.

பரஞ்

 

3. இத்தனை தயவாய் நித்திய பரனா

ரோனாசாரி பிறந்தாரே

யேசுராச குருபரனர மூர்த்தி

ஆசீர்வாதந் தந்தாரே யனந்தந்தன்மை.

பரஞ்

 

4. நல்கு நீதி மெல்கி சேதேக்

கேயா சாரி பிறந்தாரே

நாத வேத சங்கீத சுவாமி

மோட்சானந்தந் தந்தாரே யனந்தந்தன்மை.

பரஞ்

 

5. தேவ குமாரன் சீவ சொருபன்

தாவீது ராசன் பிறந்தாரே

தாழ்விலாத சம்பத்துகளாக்கி

நித்திய ஜீவன் தந்தாரே யனந்தந்தன்மை.

பரஞ்

 

6. சிங்காரப் பெட்டி வங்காரக் கட்டி

தேவாட்டுக்குட்டி பிறந்தாரே

சீவனாதி பிதாவொரு மைந்தன்

பரமண்டலமே தந்தாரே யனந்தந்தன்மை.

பரஞ்

 

7. நெல்வேலிமேவு சொல்வேதநாய

கன்பாவென்று பிறந்தாரே

நீடுகோடி பாதகவினை நீக்கி

ஞான போசனந்தந்தாரே யனந்தந்தன்மை.

பரஞ்

(1823 - வரு.)

-----------------------------------

 

22

 

வெண்பா

எத்திசையும் வாழ்த்த வெழுதின தெல்லா முடிக்க

பத்தர் வினையனைத்தும் பாழாக்கச்-சித்தமதாய்

வெற்றி பெறுமேய்த் தவிது மிக்க இசறவேலின்

கொற்றவன் வந்தான் கிருபை கூர்ந்து.

 

(இந்துஸ்தானி)

(ஏகதாளம்)

 

பல்லவி

கூர்ந்திஸ் பிரீத்துச் சாந்து ரூபி யற்புத கெர்ப்ப

மாக வுற்பவித்தனாதி மைந்தனும் பிறந்தார்.

 

சரணங்கள்

1.சாந்தத் தந்த ஞானத் தவிது கன்னியான

சந்த மரியுந் தியூடெழுந்து நரனாயருள்

கூர்ந்

 

2. காரணப் பிறவை நீடு பூரணக் கிருபையோடு

காட்டுக்குள்ளொரு மாட்டுக்கொட்டிலினாட்ட

முற்றெமக்காயருள்.

கூர்ந்

 

3. பெத்தலைப்பதி யோரங்குத் திரத் திருனேரம்

புல்லில்கிடத்தி யல்லற்படுத்த வல்லமையிலராயருள்.

கூர்ந்

 

4. சொல்லுதற் கரிதான எல்லையற்ற மெஞ்ஞான

சொந்த தேவ விந்தைச் சாயலந்த மேயுருவாயருள்.

கூர்ந்

 

5. உன்னதத்திற் றோத்திர மென்ன கிருபைக்காத்திர

மோதுதற்கு நீதியற்ற பேதையரெம் மாத்திரமருள்.

கூர்ந்

 

6. உத்தம சுவாப நித்திய தயாப

உச்சிதத் திருச்சபைக் கிரட்சகப் பிரதாப அருள்.

கூர்ந்

 

7. சொந்தத் தூதராடச் சந்தத் தாயர் நாடச்

சோபனப் புகழ் வேத விற்பன ரோத வுற்பனமா யருள்.

கூர்ந்

 

8. வேதநாயகன் பாட்டுப் போதுமோ கொண்டாட்டு

மீட்டுக்கொண்ட ஆட்டுக்குட்டி பாட்டுக்கென்ன பாட்டருள்.

கூர்ந்

(1824 - வரு.)

-----------------------------------

 

23

 

வெண்பா

காரணமோ மானிடர் கண்காட்சியோ சொல்லுகின்ற

ஆரணமோ என்ன அதிசயமோ-பூரணமே

ஆனதெல்லாஞ் செய்த அனாதியாயிருப்பதற்கு

வானமோ மாட்டுக் குடில்.

 

(செஞ்சுருட்டி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

வானம் பூமியோ பராபரன்

மானிடனானாரோ என்ன இது.

 

அனுபல்லவி

ஞான வான்களே நிதானவான்களே.

வான

 

சரணங்கள்

1.பொன்னகர சாளும் உன்னதமே நீளும்

பொறுமை கிருபாசனத்துரை பூபதி வந்ததேததிசயம்.

வான

 

2. சத்திய சருவேசன் நித்தியக்கிருபை வாசன்

நித்திய பிதாவினோர் மகத்துவக் குமாரனோ இவர்.

வான

 

3. அரூபரூப சொரூபன் கேரூபின் வாகன தீபன்

வீரியப் பிரதாபன் சீனாவெற்பிலிருந்தவன்

கற்பனைத்தந்தவன்.

வான

4. மந்தைக் காட்டிலே மாட்டுக் கொட்டிலிலே

கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி

நிந்தைப் பாவிகள் சொந்தக் கண் காட்சி.

வான

 

5. வேறே பேரல்ல சுரர் விண்ணவ ராருமல்ல

மாறில்லாத ஈறில்லாத

வல்லமைத் தேவனே புல்லிற் கிடக்கிறார்.

வான

 

6. சீயோனின் மாதேயினிச் செணந் தரியாதே

மாயமென்ன வுனக்குச் சொல்லவோ

வந்தவர் மணவாளனல்லவோ.

வான

 

7. ஆதாமின் குலமே யிதானாலும் புதுமை

வேதநாயகன் பாட்டுப் பார்த்தது

மேசியாவின் விளையாட்டுக் கேர்த்தது

(ஆ என்ன இது)

வான

(1827 - வரு.)

-----------------------------------

 

24

 

வெண்பா

மெத்தனவாய்ச் சாதாய் மிகுந்த கிருபையதா

யுத்தம மெஞ்ஞானத் தினுண்மையா-யெத்தனையோ

மாதாட்சியாய்ப் பணிந்து மாட்டகத்தில் வந்தானே

வேதாட்சிக் கந்த விமலன்.

 

(இராகம்: தன்யாசி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

வேதாட்சிக் கந்தங் கொண்டவான் றேவு

விமலனி சரவேற் கரசனதி

மெல்கி சேதேக் கே யாசாரி நீ.

 

அனுபல்லவி

மாதாட்சியாய்ச் சத்துவ மொடுக்கி

மனுடருக்குப் பிறக்குமுருக்கத் திருக்கட் கிருபாநதி.

வேதா

 

சரணங்கள்

1.அத்தனார் தந்தார் கத்தனார் வந்தார்

பெத்தலேகேம் பதியிற் பிறந்தாரே

பிதாவுக்குஞ் சுதனுக்கும் பரிசுத்த ரூபிக்கும் தோத்திரமே.

வேதா

 

2. வானவர்க்கு மகிமை பூமியிற் சமாதானம்

மாந்தருக் குள்ளே பிரிய முண்டாச்சே

மத்துவாந் தங்களுஞ் சுத்த நாசங்களாய்ச்

சத்தனாசதும் போச்சே.

வேதா

 

3. சீவத் தோட்டமே செழிப்பதற் கிடமே

திருவுளப் பெருக்கத் தாலாமே

தினமே தினமே செயமே செயமே கொண்டாட்டமே.

வேதா

 

4. வானாதிகாரா ஞானாதி தீரா

மனுடாவதாரா பரகுமரா

மகிமைப் பெருமைக் கருமைக் குரிமைக் கருணாகரா.

வேதா

 

5. மெய்யான தேவா மேலான யோவா

வேதநாயகன் றோத்திரப் பாவா

மீட்பா மூப்பா பாப்பா கோப்பா காப்பாவே.

வேதா

 

-----------------------------------

 

25

 

வெண்பா

ஏவாள் பறித்த கனியின் கேடொழிக்க வந்த

தாவீதின் மைந்தா சரணமே-காவாவா

மூவா ளொரே யொருவா முக்கிய சொரூபா அரூபா

தேவா தேவாதி தேவா.

 

பல்லவி

தேவா தேவாதி தேவா ஓ

தேவா தேவாதி தேவா.

 

சரணங்கள்

1.சீவாகமத் தொரேயே யோவா அனுக்கிரகித்துக்

காவா சுதனிஸ்பிரீத்து மூவாளொன்றான பர.

தேவா

 

2. சொந்தா வனாதி பிதா மைந்தா தரணங் கண்டு

வந்தா திருப் பாதார விந்தா சச்சிதானந்தா.

தேவா

 

3. ஆகாதப் பாவிக் கெட்டுப் போகா தனந்த காலஞ்

சாகாதுயிர் பிழைக்க வாகாய் வருந் திரியேக.

தேவா

 

4. நாடித் திருச்சபைகள் கூடி கெம்பீரித்துக் கொண்டாடி

சங்கீர்த்தனங்கள் பாடித் துதிக்க வந்த

தேவா

 

5. துக்கக் கவலையி னெருக்கத் தெமக்கருள் செய்

மக்கட் குருக்கமாகச் சொர்க்கத்திருந்து வந்த

தேவா

 

6. வேதங்களுங் கோடி சங்கீதங்களு முழங்கும்

பாதங்களி னெல்லையா னோதுங் கிருபை பிரதாப.

தேவா

 

-----------------------------------

 

26

வெண்பா

அண்டம் புவியு மகண்ட சராசரமும்

உண்டான யாவு மதாலுண்டான-பண்டுத்

திருவார்த்தை மாங்கிஷமாய்ச் சென்மித்த தேவ

பரிபாலனே இரங்கிப் பார்.

 

(இராகம்: ஹரிகாம்போதி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

தேவ பாலனே திருவார்த்தை நரர் மாங்கிஷமான

தேவ பாலனே.

 

சரணங்கள்

1.காவிற் பாவத்தாற் சாபத்தா லொரு

கன்னி சுதனென்னக் குடில் தன்னில் பிரவை மின்ன வந்த

தேவ

 

2. தேவர்களாடப் புகழ் பாடத்

திறள் சேனைக்கூடப் பாவலர் நாடப் பதி தேடப்

பலனீட வந்த

தேவ

 

3. தூதர்க ளொருங்கத் துதி முழங்க

வேதாளம் நடுங்கக் காதகர் கலங்க மிக மலங்க

மறை விளங்க வந்த

தேவ

 

4. அம்புவித் தழைக்க நரர் பிழைக்க

அதிசயிக்க வானத்தும் பருஞ் செழிக்கப் பகையழிக்கத்

தீதொழிக்க வந்த

தேவ

 

5. சத்திய வாசக் கிருபை நேச

தவிராச புத்திர நித்திய பாசப் பவ நாச

கிறிஸ் தேசு ராச

தேவ

 

6. வேதநாயகன் றமிழ் சாற்ற

வினை மாற்றத் தேற்ற நீதிகளெலாம் நிறைவேற்றக்

கரையேற்ற வந்த

தேவ

 

-----------------------------------

 

27

 

வெண்பா

வானெங்கே நீயிருந்த வாழ்வெங்கே தூதர் குழாந்

தானெங்கே வல்ல சமத்தெங்கே-யேனிங்கே

அந்த மளவில்லா அனாதி பிதா மைந்தா, நீ

இந்தக் கோலங் கொண்டது.

 

பல்லவி

இந்தக் கோலங் கொண்ட

தேதென் பரம தேவா.

 

அனுபல்லவி

கந்தைத் துணியணிந்து விந்தைக் கொட்டிலுக்குள்ளே.

இந்

 

சரணங்கள்

1.நித்திய பிதாவினொரு புத்திரனென வுயருஞ்

சத்தியக் கிறிஸ்தனாதி வஸ்துன் மகத்து வந்தானோ.

இந்

 

2. சுந்தரப் பரம சேனை சந்தத மகிழ்ந்து பாடி

வந்தனஞ் செய்யு மகிமை மந்தையாய றறிவாரோ.

இந்

 

3. வானமெல்லாங் கொள்ளானை மாட்டுக் கொட்டிற் கொள்ளுமோ

ஞான பரனே யிதுந் தனன்மைப் பகுதித் தானோ.

இந்

 

4. முக்கியப் பிதாவோடொத்த முதன்மைத் திருக்குமாரா

திக்கற்றவராய் முன்னணைக்குட் கிடக்கின்றீரோ.

இந்

 

5. வல்லமை யளவில்லாத மகிமைப் பிரதாப மாற்றிப்

புல்லருக்குப் பண் செய்வதற்குச் செல்லத் துரை வந்தீரோ.

இந்

 

6. வளமைச் சுயாதிபதி மைந்தர் வடிவமானார்

எளிமைக் கன்னியாஸ்திரியோ இறைவர்க்குத் தாயானது.

இந்

 

7. பாட்டுத் திறத்திலுனைப் படிக்கத் திருநெல் வேலி

நாட்டுப் புறத்து வேத நாயகனறிவானோ.

இந்

(1826 - வரு.)

-----------------------------------

 

28

 

வெண்பா

நாவிற் கடங்காத ஞானமே யுன்னதமே

பாவிற்கு மெட்டாப் பராபரமே-காவாவே

காவில் விளைந்த கனிவினையைத் தீர்க்க வந்த

சீவனே நித்திய சீவனே.

 

(இராகம்: வனஸ்பதி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

சீவனே நித்திய சீவனே சீவனே பரமானந்த

திவ்விய பாலகனாக வந்த சீவனே நித்திய சீவனே.

 

அனுபல்லவி

காவதில் விளைந்த வாதி யேவை வினைதீர வந்த.

சீவ

 

சரணங்கள்

1.வல்லமைத் திரித்துவ தேவன் சொல்லருங் கிருபைப் பிரதாபன்

துல்லிபத்தின் ஞானதீபன் நல்லவர்க்கருள் தயாபன்

அல்லிருட் போதே யடர் புல்லதின் மீதே வர

லானவான மோன ஞான நேசமே.

சீவ

 

2. நித்திய கிருபை பிரகாசன் அத்தனார்க் கொரே குமரேசன்

சத்திய வேதத்தின் வாசன் துத்திய மிகுஞ் சருவேசன்

சித்திரச் சுதனே திரிதத்துவ அற்புதனே பர

தேசு லாச நேச மேசியா வேந்தே.

சீவ

 

3. வானத்தைப் படைத்த கர்த்தர் ஞானத்தை யுடைத்த நித்தர்

மேன்மைத் தேவத் துவப் பரிசுத்தர் கானத்துற்றெமைக் கரிசித்தர்

மட்டளவற்றோன் மாட்டுக் கொட்டிலிலுற் றானின்று

வாழ்த்தி யேற்றிப் போற்றித் தோத்திரஞ் சொல்வோம்.

சீவ

 

4. மடத்தினிடமே யன்றி அடத்துக் காட்டின் கண்ணொன்றி

விடத்திரை வைக்குன்றி திடத்தினன் பர்க்கு வென்றி

கொடுத்திடப் பிறந்தான் மாட்டுக் கொட்டிலிற் சிறந்தான்

கோலசீல பால சாலேமின் ராசே.

சீவ

 

5. முத்தியின் வழி யைக் காட்டி சத்துருப் பிசாசை யோட்டி

பத்தனைப் பரிந்து நாட்டி மெத்தவுமன்பு பாராட்டி

பெத்தலேம் பதியே வந்த வுத்தம கதியே யருள்

பேசும் நேசரேசு மேசியாவே யென்.

சீவ

 

6. மண்டல மகிழ்ச்சி கூற எண்டிசை யோருங் கரையேர

பண்டு வினையாவு மாறத் தொண்டரிருதயந் தேற

கண்டு வந்தவனே யருட் கொண்டு வந்தவனே கிருபா

காட்சி யாட்சி சூட்சி மாட்சி மைத் தேவே.

சீவ

 

7. தூதர்கள் விண்ணினின் றாடமேதினியெல்லாங் கொண்டாட

சாதிகள் தழைத்து நீட வேதநாயகன் பண்பாட

பாதகந் துடைத்தான் படும் பொய்ப் போதகமுடைத்தானென்று

பாடிப் பாடி நாடித் தேடியே வந்தோம்.

சீவ

(1834 - வரு.)

-----------------------------------

 

29

 

வெண்பா

நூல் பிடித்து வானமெல்லா நூதனமதாய்ப் படைத்தோன்

பால் குடிக்க வந்ததைத் தான் பாருங்கோ-பால்கொடுத்துப்

பாராளுந் தேவ பரம வஸ்துவின் பாலா

ராரேசு நாயகனே ராரோ.

 

(இராகம்: பைரவி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

ரார ராரோ பால ரார ராரோ யேசு

நாயகனே பால ரார ராரோ.

 

அனுபல்லவி

பாரிலா தீவினை தீர வேண்டி வந்த

பாத்திபனே ராச கோத்திரனே.

ரார

 

சரணங்கள்

1.அந்த மளவில்லா வெந்தையே நீர் தய

வாகவே மா பவமேக வேதா

னிந்த லோக மதில் வந்ததாமோ வென்று

மீறிலானே சற்று மாறிலானே.

ரார

 

2. காவிலாத மனை யேவைமானால் வந்த

காரணமோ வாதி காரணனே

பாவியான நரர் சாவிலாமல் வாழ்கப்

பட்சமாச்சோ கிருபை மிச்ச மாச்சோ

ரார

 

3. வான நாடோபுவியான காடோ மாட்டு

மந்தையான துமக் கந்தமோ தான்

சேனை சூழ்வதுமக் கீனமாமோ தேவ

சீலமான தேழைக் கோலந்தானோ

ரார

 

4. பொன்னு லோக மிந்த முன்னணையோ பரம்

பூமி யாவுஞ் செய்த சாமிநாதா

கன்னிதானுமுமக் கன்னியாமோ மலைக்

காடல்லாமல் வேறே நாடிலையோ

ரார

 

5. புல்லல்லாம லொன்று மில்லையோதான் உமைப்

போர்த்து தற்குத் துணியேர்த்த தோதான்

வெல்லையூரிலிட மில்லையோதான் விடை

வீடுதானோ சித்திரக் கூடமாச்சு

ரார

 

6. மிருகமாக நரர் திரிவதாலே துஷ்ட

மிருக மேவுமிடம் வருகலானீர்

உரிமையாளா இது பெருமை யோதானென்று

மொப்பிலானே யுமக்கொப்பதாச்சோ

ரார

 

7. சம்மனசோர் தொழு நன்மையாளா பால்

தாகமாச்சோ நரர்க்காக மாச்சோ

எம்மையாள வந்த உண்மையிதோ கிறிஸ்

தேக தேவா சருவலோக நாதா

ரார

 

8. நீதவான தேவதூதர் பாடுங் கன

நேர்மையாளா இரு கூர்மைவாளா

வேதநாயகனிங் கோதும்பாடல் மெத்த

விருப்பமாச்சோ வானிலிருப்பு மாச்சோ

ரார

 

-----------------------------------

30

 

வெண்பா

தந்தையனாதி தனையனுனைச் சந்திக்க

வந்த தயவை மறக்காதே-சிந்தனைசெய்

ஆவியுடலு மழியா திருப்பதற்குப்

பாவி மனதுருகிப் பார்.

 

(இராகம்: ஆனந்த பைரவி)

(ஏகதாளம்)

 

பல்லவி

பாவி மனதுருகே.

 

அனுபல்லவி

ஆ வீட்டிலோ காட்டு தேவாட்டுக்குட்டிக்கு

பாவி

 

சரணங்கள்

1.மாது தின்ற கனிவினைபோக மனுடர் வடிவமாக நம்

வல்லமைப் பிதாவின் மைந்தன்

புல்லதிற் பிறந்தாரந்தோ

பாவி

 

2. வேத வாசகப்படி நெறிகாட்ட வேதாளக் குடியோட்ட இதோ

வித்தக திரித்துவ வேக

தத்துவ சொரூபன் வந்தார்

பாவி

 

3. விந்தைத் திருமுதல் நரருருவுகந்தார்

கந்தைத் துணியணிந்தாரிப் படி

மெத்தனவராகக் கரிசித்துனைப் புரக்க வந்தார்

பாவி

 

4. வானத்திருந்து பூமியிலுதித்தார்

வலுசர்ப்பம் தலைமிதித்தார் பின்னும்

வஞ்சகப் பிசாசினுட சஞ்சல மெலாந் தொலைத்தார்

பாவி

 

5. மேட்டிமையைத் துறந்தார் காட்டினிடைச் சிறந்தார்

மேன்மையனைத்து மறந்தா ரிந்த

விந்தைக் கோலத்துன்னைக் கண்டு சந்திக்க வந்திருக்கிறார்

பாவி

 

6. நெரிந்த நாணலை முறியார் பொரிந்த திரியையவியார்

நிற்பந்தர் தமைப் பிரியாரி வர்

நீதிமான்களையல்லவுனைப் போல் பாதகரைத் தான்தேடி வந்தார்.

பாவி

 

7. காதகர்களாடட்டும் வேதநாயகன் பாடட்டும்

கண்டவர்கள் துதி சொல்லட்டும் கெட்ட

கள்ளனென்றாலும் பொல்லாத பிள்ளையென்றாலுங்கவையில்லை.

பாவி

(1826 - வரு.)

-----------------------------------

 

 

31

 

வெண்பா

சங்கைப் பிதாவே தயை கூருங் கத்தாவே

யெங்களைக் கண்ணோக்கு மிம்மானுவே-னங்கோ

பரலோகம் விட்டிப்படி மீது வந்த

நரர் பாவ நாசனா நீ.

 

(இராகம்: சங்கராபரணம்)

(ஆதி தாளம்)

 

பல்லவி

நரர் பாவ நாசனா.

 

அனுபல்லவி

கருணாகரா வாதரி தாபரி

காதலாகிக் கூப்பிடுகின்றேன்

நரர்

 

சரணங்கள்

1.வாசகத்தான் மரிமாது கெர்ப்பத்தில்

நேசமுட னுதித்த நீதிக் குமாரா

ஆசியதளித் தெமக்கருள் செயும் நாதா

யேசு ராசாவிஸ் தோத்திரந் தினமும்.

நரர்

 

2. ஞானப் பிரவாகமே நன்மை யற்றோமே

யீனப் பசாசை வென்று ரட்சிக்கத் தானே

கானகத்தினில் வருங் கருணைப் பிரதாபா

மானுவேலாதிப வந்தனந் தினமும்.

நரர்

 

3. ஆதிகர்த்தா வொரே யற்சய தேவா

பாதகர் வினையறப் பாடுற நாடிப்

பூதலத்தினில் வரு மனுடவ தாரா

வேதநாயகன் சங்கீர்த்தன்ந் தினமும்.

நரர்

(1836 - வரு.)

-----------------------------------

 

32

 

வெண்பா

வானவனா நம்போல மனுடனா பூமியிலுண்

டானவனா சிஷ்டிகன் றானல்லவா-ஞானிகளே

யெந்த நாடெந்த வூரெங்கிருந்து இங்கெழுந்து

வந்தவராரையா மகிழ்ந்து.

 

(இராகம்: தோடி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

வந்தவ ராரையா யிங்கே

வந்தவ ராரையா.

அனுபல்லவி

சுந்தரப் பரன் சொருபமாய் பரி

சுத்தமொடு பெத்தலையிலுற்ற குடிலுக் குள்ளே.

வந்

 

சரணங்கள்

1.தேவனு மனுடனுமாய்த் தஞ்

சிந்தையின் மகிழ்ந்து மாட்டு

விந்தைத் தொழுவத்திலே.

வந்

 

2. தூதர்க ளதிபதியோ தீர்க்கர்

சொன்னபடி யுன்னதமாய்

முன்னணையிலே படுக்க.

வந்

 

3. வானவரடி தொழவே வெல்லை

மந்தையாவின் பந்தி யூடு

கந்தைத் துணியைப் போர்த்து.

வந்

 

4. மாதனை மரியிடமே சுய

வல்லமை சற்றில்லவர் போற்

புல்லினிற் கிடத்தி வைக்க.

வந்

 

5. ஆயர்கள் கூடி வரவொரு

அன்னை மரி தன்னிடத்திற்

சின்னவடி வெடுத்து.

வந்

 

6. இயேசுக் கிறிஸ்தெனவே யுலக

இரட்சகர் நந்தட் சகரென்

றுச்சித நாமத்தைக் கொண்டு.

வந்

 

7. அற்புத வதிசயமோ பர

னாட்டுக் குட்டிப் போலிருக்குது

மாட்டுக் கொட்டிலுக் குள்ளே.

வந்

 

8. பரமனுக்கு மனுஷருக்கும் பிணைப்

பட்டு நடுப்பட்டு வினைப்

பட்டுப் பரதபிக்க.

வந்

 

9. சர்ப்பத்தின் றலையுடைக்க வேத

சத்திய மகத்து வத்தி

னித்திய மத்திஸ்த னென்று.

வந்

 

10. பராபரனொரு மகனோ கெட்ட

பாவிகளை யாவலுடன்

பூவிலெங்குந் தேடிக் கொண்டு.

வந்

 

11. வேதநாயகன் றமிழ்க்கே பிர

மிக்க மனமெய்க்க வொரு

மிக்கக் கிருபை கொண்டு.

வந்

(1824 - வரு.)

-----------------------------------

 

33

 

வெண்பா

நாட்டிற்பெரியோரே ஞானாச்சரிய மொன்று

மாட்டகத்தில் வந்து தித்த மன்னவனார்-கேட்டீரோ

மூவுலகுந் தந்த முழு முதற் கொன்றாய்ப் பிறந்த

தேவ சேயோ பாரீர் சென்று.

 

(இராகம்: தன்யாசி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

தேவசேயோ பாரீர் நங்கோ

தேவ சேயோ பாரீர்.

 

அனுபல்லவி

சீவாதிபதி யேசு நாம

தேவ

 

சரணங்கள்

1.வந்தவரார் பத்தா மெய்க் கிறிஸ்த் தாரே

மானிடர் கூட்டத்தா ரே கவனம்.

தேவ

 

2. மாறாத வஸ்து வந்தனர் கரிசித்துப்

பேறாய்க் கிருபை செய்தாரே கவனம்.

தேவ

 

3. அன்னையின் கேடே அகற்றுதற் கீடே

யுன்னதனீங் குதித்தாரே கவனம்.

தேவ

 

4. வல்லமைப் பரனார் மாட்டகத்தினிலே

புல்லதிற் படுத்தா ரன்றோ கவனம்.

தேவ

 

5. சந்தேகமிலையே சர்ப்பத்தின் தலையே

சங்கரிக்க வந்தாரே கவனம்.

தேவ

 

6. இத்தனை தரித்திரமாய் ஏழைச் சொரூபமாய்

இரட்சகரந்தோ வந்தாரே கவனம்.

தேவ

 

7. மெத்த மெத்தப் பாட்டுக் கானாரிந்தாலோ

வேத நாயகன் பாட்டாரே கவனம்.

தேவ

(1828 - வரு.)

-----------------------------------

 

34

 

வெண்பா

முந்தும் வினை கொடிது மூவுலகுங் கேட்க வெம்மால்

வந்த வினை யதிலுமா கொடிது-வந்தனமே

யாதி யானுக்கே திருக் குமாரப்பாவே

பாதுகா கிறிஸ்து நாதா.

 

(கியால்)

பல்லவி

ஆதியானுக் கே திருக் குமாரப்பா

கிறிஸ்து நாதா ஓர்.

சரணங்கள்

1.சாதிகட் கிரக்கமே தருமவுருக்கமே

தப்பாக் கிருபைப் பெருக்கமே.

ஆதி

 

2. அற்புத சினேகமே அட்சயப் பிரவாகமே

அந்தப் பிரவ டீகமே.

ஆதி

 

3. சத்துரு சங்காரா மித்துரு சிங்காரா

தாவீதங்கிஷ வேரா.

ஆதி

 

4. தீவினையை நீக்கையா பாவமறப் போக்கையா

சீர் கடைக் கண் ணோக் கையா.

ஆதி

 

5. கெட்டவர் கொண்டாட்டைத் துட்டர்கள் மன்றாட்டைக்

கேட்டருள் கேட்டருளுமே.

ஆதி

 

6. ஆதியம்பர நாட்டா வேதநாயகன் பாட்டா

ஆரணத் திருக் கூட்டா.

ஆதி

(1848 - வரு.)

-----------------------------------

 

35

 

வெண்பா

மட்டில்லாத் தாழ்வாய் வறுமையாய் மாடடையுங்

கொட்டிலுக் குள்ளே பிறந்த கோலமே-னட்டதிக்கும்

வானம் புவியும் வலிய சுரர் நரர் மற்

றான சிட்டிக்காதி யந்தா.

 

(இராகம்: அடானா)

(ஆதி தாளம்)

 

பல்லவி

சிட்டிக் காதி யந்தா தேவ மைந்தா

 

அனுபல்லவி

சிட்டர் பணியவாக் கொட்டில் வந்ததேன்

சிறியர் பாதகமோ வறிவானந்தா.

சிட்டி

 

சரணங்கள்

1.ஞானத் திரவியனு பானக் கிருபை யா

நறுமைப் பிரபலா பொறுமைத் திரித்துவத்தின்

மேன்மை பொருளென முற் பெத்தலே மில் வரு

மேசியா விராசா சலாங்கா.

சிட்டி

 

2. ஆதி மனுடர்புரி தீதின் வலுமையால்

அரியப் பாலனாய் மரிவயற்றுற் பவித்துச்

சாதிகளைக் கதியிலேற்றப் பிறந்தவா

சாமியேசு நாதா சலாங்கா.

சிட்டி

 

3. நீடித்த கிருபைகள் கோடிக் கதிகமே

நிலையிலாமலே மலைவுறு பத்தனுக்கு

வீடு பெறவருள் கடாட்சப் பிரமமே

வேதநாயகன் வினா சலாங்கா.

சிட்டி

 

-----------------------------------

 

36

 

வெண்பா

சாலோக சாரூப சாமீப சாயூட்சிய

மேலான கத்தனி தோ மெய்யாக-நூலோரே

ஆசித் தெமக்காக வாக்குடிலில் வந்ததெல்லா

மாசுத்த தேவ நேசம்.

 

(இராகம்: சங்கராபரணம்)

(ரூபகம்)

 

பல்லவி

சுத்த தேவ நேசமே

சோதியா ரண காத்திரவீர.

சரணங்கள்

1.புத்திக்குரிய பத்திக்கு நரர்

போற்றற்கரிய மேலாம் நாமா.

சுத்த

 

2. ஆட்டப் பரம கூட்டத்துச் சுர

ரருச்சிக்கும் மனுவேலே சீமா.

சுத்த

 

3. பத்தர்குரிமை வைத்துச் சீர் பா

ராட்டுக் கோனானாட்டுக் கோமா.

சுத்த

 

4. வெற்றிப் பிரபுன் சத்திக்குத் தரு

வேதநாயகன் பாட்டா பூமா.

சுத்த

 

தோரை

 

5. ஆகம வேத சாரத்தி

னன்பாகவே நடத்தி

யூக நித்திய சீவனைத்தற

வுண்மை யிஷ்ட மாக்கி

மேக படலம் விணோர் சூழ் கவிச்

சேத்திர ஞாயவனுக்கிரகஞ் செய்

ஏக பராபரவஸ்துவாகிய

யேசு மெய்கிறிஸ்து நமா.

சுத்த

 

-----------------------------------

 

37

 

வெண்பா

நேசக் கிருபை நிரந்தரா காத்தருளே

மோசப் பிசாசு வலுமூர்க்கமே-யேசுவென்ற

நாமக் கிறிஸ்து மேசியா அல்பா ஒமேகா

ஆமனா வச்சய தேவா.

 

பல்லவி

தேவா நீ யொரே

பராபர வஸ்துண்மைக்கு

நாமகிறிஸ்து மேசியா ஓ கத்தா

அனுபல்லவி

ஏவையினாலிதோ மாட்டுக் கொட்டிற்படுத்த

ஏக வஸ்துவே ஒசன்னா மகத்துவ

கீர்த்திக் கத்தா தேவா.

தேவா

 

சரணங்கள்

1.கன மகிமைக் கத்தா நரனெனவுற் பவித்தல்

கனமோ திரு மனமோ உலகுக்கு

அனவர தமுமே ஆசியருளிக் கடாட்

சராக வந்த கிருபானு ஓசனா.

தேவா

 

2. ஒரு பரமன் மைந்தா இருள்படுமுலகுக்கு

ஒளிவே கன தெளிவே

திருவுளச் செயலோ தேவ மகிமைத்தியா

னயேசு கத்தவியமே ஓசியன்னா.

தேவா

 

3. பரசொரூபத்தையா அடியவர் மனதுக்கு

பயமே தவிர் நயமே நினைவுக்கு

கருணைக் கடவுளே வேதநாயகன்பா

டுமாதிகத்தவியமே ஓசியன்னா.

தேவா

(1849-வரு.)

-----------------------------------

 

38

 

வெண்பா

உன்னதத்திலே நின்று தயமாய்ப் பெத்தலேமமிற்

கன்னியாஸ்திரிகாலென வந்த-மன்னா

விசறேற்கி ராச தயாப சருவேசா

நசரேக்கு நோக்கையரே.

 

(இராகம்: இந்துஸ்தானி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

ஐயரே நசரேக்கு நோக்கு தயாபையரே

வாராயென்னாற்றும பாரீசா ஆ ஐயரே

அனைமரி கன்னியாஸ்திரி

குமாரிசா ஆ ஐயரே.

 

சரணங்கள்

1.சயித்தேதாத்தா கண்ணோக்கே பரஞ்சோதி

சீர் தாவீதின் குமாராகா ஆ ஐயரே

வாராயாதிக் குமாராகா ஆ ஐயரே.

 

2. மனுடர்க்கே தன்மமகராஜ் சலாம் ஓம் ஓம்

பாரோர் வானோர்க்கு மெல்லார்க்கும் ஆ ஐயரே

வாராயாதிச் சருவேசா நீ ஆ ஐயரே.

 

3. பரமர்க்கே சங்கைக் கனமே பராக் ஓம் ஓம்

ஒரே கடாட்சச் சொரூபமே ஆ ஐயரே

ஓராதிப் பிரமமே ஆ ஐயரே.

 

4. வேதநாயக சாஸ்திரி சலாம் ஓம் ஓம்

சீராவுன் பாட்டுக் கெல்லாந்தா ஆ ஐயரே

வாராய் மன்றாட்டுக் கன்பாய் நீ ஆ ஐயரே.

(1850-வரு.)

-----------------------------------

 

39

 

வெண்பா

உன்னதத்திலே நின்றொளிர் பரிசுத்தாவியினால்

கன்னியாஸ்திரி தன் கருப்பத்திற்-சென்மித்தே

ஆசிலா மானிடனானார் செய செயா

மாசிலாத் தேவ புத்திரன்.

 

(இராகம்: சைந்தவி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

மாசிலாத் தேவ புத்திரன்

மானிடனானார் செய செய

 

சரணங்கள்

1.ஆசீர்வாதமே கன தேசாறும் நீதமே ஒளிர்

காசினி மீததி நேசபிரகாச விண்வாச கிருபாசன.

மாசி

 

2. சத்திய வாசகர்த்தா நித்திய தேசிகர் வளர்

பெத்தலேமூர் தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில்

மாசி

 

3. அந்தரம் பூமியுமதி சுந்தர நேமியுந்தினம்

ஐந்தொரு நாளினிலே தருமுந்தின மூன்றொன்றாகிய.

மாசி

 

4. தொல்லையான் தூயவொரு செல்லையான் தேவர் தொழும்

நல்லையான் வீட்டிலே மகிழ் நெல்லையான் பாட்டிலே புகழ்

மாசி

.

(1851-வரு.)

-----------------------------------

 

40

 

பல்லவி

கொண்டானடிக்கிறான் வெல்லைக்

கோவிலைக் கண்டு தாவிக் கூவி

 

சரணங்கள்

1.அண்டாண்டந் தொழுமாதிக் கிறிஸ்துவைக்

கண்டாலெந்தையைக்

கண்டு கொண்டோமென்று நன்றாய்.

கொ

 

2. அங்கம்பரவசமடைந்து ஆனந்தக் கடலுருகிப்

பொங்கிச் சிவமென்றறிந்து

புவியதிர்ந்து மன மகிழ்ந்து.

கொ

 

3. இருகண்களும் நீர்பெருக இசைந்து மனதோடுருக

அருமைப் பரகதி தருக

அனாதிக் கிறிஸ்துவே வருக.

கொ

 

4. சோகுப்படா முடியுடைந்து தூடணத்தலை தகர்ந்து

யேகப் பொருளொன்றறிந்து

இருள் ஒழிந்து அருடெளிந்து.

கொ

 

5. ஞானந்திரமென வுணர்ந்து ஞாயக்கலைகளை யறிந்து

வானத் தமலனைப் பணிந்து

மதி விளங்கக் கதி துலங்க.

கொ

 

6. துங்கன் றவிதிறை நேச தோன்ற லிசறேலிராச

சங்க மகிழ்ந்து கூட

சம்மனசுக்கள் பாட.

கொ

 

7. பாவமனைத்தும் போக பசாசின் ராச்சியந் தாழ்க

தேவகிருபை யுண்டாக

சீயோன் மலையில் வாழ்க.

கொ

 

8. சத்திய வேதமோங்க சாபமனைத்து நீங்க

வெற்றிப் பிரபந்தம் நீடி

வேதநாயகன் பாடி.

கொ

(1861-வரு.)

-----------------------------------

 

41

 

வெண்பா

எங்கே வந்தீரையா நீரேழையாய் முன்னணையிற்

றங்க வந்த இந்தத்தயவென்ன-முங்கி

எரியாப்படி நரகர்க்கேணு கொண்டோ ஏவைஸ்

திரி பாவநாசனா நீ.

 

(இராகம்: ஹரிகாம்போதி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

இஸ்திரி பாவ நாசனா நீ கிருபை தயாளனே

தேவா னுக்கிரகாவே.

 

அனுபல்லவி

வஸ்தரிய வாசனா மகிமையினாசனா

மானுவேலி யேசு மேசையா வோசன்னா.

இஸ்

 

சரணங்கள்

1.ஆரணக்கலையே ஆகமத்தலையே

காரணமோ காதற் பெத்தலையே

சூரியப் பிரவையாய்த் தோன்று மெய்ப்பிரதாப

தாரண தாபர தாயக தயாபர கிறிஸ்தாதிபா.

இஸ்

 

2. வேத விற்பனமே வீழ்ந்தவர்க்கினமே

பாதருளே பாதம் வந்தனமே

பூதலந் தனையே புரக்க வந்தனையே

யேதமிலேக திரித்துவயே யோவா கிறிஸ்தாதிபா.

இஸ்

 

3. வித்தகத் தெருளே விண்ணவர்க் கருளே

சித்தமதாயச் சேர்ந்த மெய்ப் பொருளே

சத்துரு வினையே தடுத்தருளினையே

பத்தர் பணிந்து பராவிய பராபரக் கிறிஸ்தாதிபா.

இஸ்

 

4. தேவ சொரூபியே திவ்விய அரூபியே

பாவ மிலாப் பரம பிரதாபியே

தாவீது கோவே தயாபர யோவாவே

காவலவா கலவாகா காரணக் கிறிஸ்தாதிபா.

இஸ்

 

5. ஆதி முன்னவனே ஆண்ட மன்னவனே

நீதியெலாம் நிறைந்த உன்னதனே

பாதளித் தருளே பக்கிஷப் பொருளே

வேதநாயகன் பண்பாடிய மெய்யான கிறிஸ்தாதிபா.

இஸ்

(1828-வரு.)

-----------------------------------

 

42

 

வெண்பா

அந்தோ பரமண்டலந் திறவுண்டண்டரெலாம்

சந்தோடங்கொண்டாடிச் சந்திக்க--- வந்தான்

செகதீசரோச திவிய நேசரேசு

மகராச ராசபிதா மைந்தன்.

 

(இராகம்: இங்கிலீஸ்)

 

பல்லவி

இராஜராஜ பிதா மைந்த தேசுலாவு சதானந்த

யேசு நாயகனார் சொந்த மேசியானந்தனே.

 

அனுபல்லவி

ஜெகதீசுரேசுரன் சுகநேசமீசுரன்--- மகராஜ

சரிகக்க கரிகமா கமக ரிரிரீசரிகா சசாரி

கக்க கரிகமா கப்பகாச ரீனிசா

கம பாப்ப தனிதபா கமபாப்ப சனிதபா--- சரி.

 

சரணங்கள்

1.மாசிலாமணியே மந்திர ஆசிலாவணியே சுந்தர

நேசமே பணியே தந்திரமோசமே தணியேநிறை

வானகாந்தனே யிறையானசா ந்தனே--- மறை.

இராஜ

 

2. ஆதியந்த மிலானந்த மாதினுந்தியிலேமுந்த

வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே பத

ஆமனாமனா சுதனாமனாமனா--- சித.

இராஜ

 

3. ஆதிகா ரணனே சத்திய வேதபூரணனே நித்திய

போத தாரணனே துத்திய கீதவாரணனே மரி

யாவை தோத்திரனே ஸ்திரியேவை கோத்திரனே.

இராஜ

 

4. மேன்மை யாசனனே நன்மைமேவு போசனனே தொன்மை

பான்மை வாசனனே புன்மைபாவ மோசனனே கிரு

பாகரா நரா சருவேசுராபரா சிறு.

இராஜ

 

5. வீடு தேடவுமே தந்தை நாடு கூடவுமே மைந்தர்

கேடு மூடவுமே விந்தையோடு பாடவுமே நர

வேடமே வினான் சுரராடு கோவினான்--- பர.

இராஜ

 

6. பாவிக்காசலையே சூட்சி பரம வாசலையே காட்சி

நாவினீ நிலையே மாட்சி சீவ வானலையே திரு

ஞானசீலனே பெரு மானுவேலனே குரு

இராஜ

 

7. விஞ்சையார் திருமான் பின்னு மஞ்சுசார் பெரு மானுன்னு

நெஞ்சமாய் வருவான் மன்னு தஞ்சமே தருவான் கவி

வேதநாயகன் சீவமோது தாயகன் திவிய.

இராஜ

(1820-வரு.)

-----------------------------------

 

43

 

வெண்பா

அந்தா கந்தாவிந்தாவானந்தா தாவீதின்

மைந்தா சொந்தா சிந்தா மாசந்தா-பந்தா சொற்

றந்தாவனந்தா சதானந்தா சற்சிதா

னந்தா வந்தாளோசனா.

 

(இராகம்: இங்கிலிஷ்)

(ஆதி தாளம்)

 

பல்லவி

ஓசனா வனந்தா ஓசதானந்தா

ஓசனா தாவீதின் மைந்தா

உந்தன் விந்தைப் பாதந்தா

 

சரணங்கள்

1.யேசுக்கிறிஸ் தெந்தா யெந்தனையு கந்தாய்

மாசறப்பிறந்தாய் மாட்டகத் தெழுந்தாய்

வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனமே.

ஓசனா

 

சரிகம பாப்பா தானிசானித பாபக

மதமரி கபகச ரீமரினிசா சசா

பாபப்ப மா மம்ம காகக்க காரி.

ஓசனா

 

2. மனுடவதாரா மானிட குமாரா

கனி மரியாட ருகணே நசரை யூரா

காரா சற்காரா கற்பக சிங்காரா.

சரிகம

 

3. பரம சுதாகரா பரநரகுணாகரா

தருணந்தருணமென் மேற்றயை செய்கி ருபாகரா

தராதர சராசர தயாபர சரீரா.

சரிகம

 

4. திரு மறை வாசனா திவ்விய கிருபாசனா

ஒரு ஞான போசனா உயர் பவ நாசனா

ஓசன்னா மன்னா மன்னா உன்னத உன்னதனா

சரி

 

5. துய்ய துய்ய மெய்யா சுத்த விருதையா

உய்யுமொரு மையா ஒளிர் திருக்கையா

ஓசையாவும் மேசையாவும் யேசையாவும் நீயே.

சரி

 

6. தேசுறு மெய்த் தேவே சிங்காரப் பூங்காவே

மாசிலாத மெய் வாழ்வே வானவர்கள் கோவே

மாசீவா தேவா வாசேயோவாவே.

சரி

 

7. சொல்லாயர் பாவே துய்ய ரோசாப்பூவே

அல்லாவினாவே அன்பர்கள வாவே

அல்பாவே ஓமேகாவே அல்லேலூயாவே.

சரி

 

8. வேதநாயகன் பாட்டா விண்ணவர் கொண்டாட்டா

சீத விற்பனர் கூட்டா தேவ அற்செய சீட்டா

சேட்டா நன்னாட்டா வென்றேட்டா மன்றாட்டா.

சரி

 

-----------------------------------

 

44

 

வெண்பா

தந்தையனை தந்த வினை சந்ததி யடர்ந்ததென

மந்தையிடை விந்தை யுடன் வந்தனனோ-சுந்தர

மதி தங்கு ஞான மறை தங்கி நீடு

துதி தங்கு தேவ சுதன்.

 

(இராகம்: இந்துஸ்தானி)

(ஏகதாளம்)

 

பல்லவி

துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்

சுப மங்கள மிகு சம்பிரம சுபசோபன சேமம்

 

சரணங்கள்

1.அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்

கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன்.

துதி

கமபா தப மகமா பமகரி காமப மகரி

சரி சாநி சரிகாரி கபமாகம ரீசா.

 

2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்

நிந்தையால் ஒரு கந்தை மூடவுவந்த மாபரி சுத்தனார்.

துதி

 

3. திருவான் உலகரசாய் வளர்தேவ சொரூபானார்

ஒரு மாதுடை வினைமாறிட நகர் ரூபமதானார்.

துதி

 

4. அபிராம் முனியிட மரபதெலாம் உபகாரன்

எபிரேயர்கள் குலமேவிய தவிராச குமாரன்.

துதி

 

5. சாதாரண வேதா கமசாஸ்திர சுவிசேஷன்

கோதேபுரி ஆதாமுடை கோத்திர திருவேஷன்

துதி

 

6. விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப்பாதன்

பண்ணோதுவர் கண்ணாய்வளர் பரமண்டல நாதன்.

துதி

 

7. இசரேலர செனவா வியினெழில் சேரபிஷேகன்

நசராபுரி தனினீடிய ஞானப் பிரவடீகன்.

துதி

 

8. வேதநாயகனோது பாடல்கள் மீதிலன்புறு மேசையா

நீதி ஞாயவதீத மேன்மைகள் நீடு சங்கையினேசையா.

துதி

 

-----------------------------------

 

45

 

வெண்பா

பகுத்தபலர் சேனைகளு மண்டப்பரப்பும்

வகுத்தபராபர வஸ்து-மகத்துவ

மகத்தான மிக்கானவான தந்தைசேயர்

சகத்திருள் மாறவந்தனர்.

 

பல்லவி

சகத்திருள் மாறவே மகத்தான மிக்கானவான

தந்தை சேயர் வந்தருளினார்.

 

சரணங்கள்

1.மகத்துவமான தேவன்

பரத் தொளிவான ஜீவன்

மைந்தர் சொந்த வடிவாகினார்.

சக

 

2. அதமே வைபாவத்தாலே

அனுக்கிரக மானுவேலே

அம்புவிதனின் மேவினார்.

சக

 

3. இத்தனை நேசமாகப்

பத்தரெந் நாளும் வாழ்க

எந்தையாரெழுந்தருளினார்.

சக

 

4. திரித்துவனாதி நேச

கிறிஸ்திச றேலின் ராஜ

திவ்விய பாலன் வந்தருளினார்.

சக

 

5. மெத்தனவாக நாடிப்

பெத்தலேகேமை நீடி

மேசியா பிறந்தருளினார்.

சக

 

6. நேயமதாக வேத

நாயகனோதும் நீத

நித்தியன் வானினின் றிறங்கினார்.

சக

(1832-வரு.)

-----------------------------------

 

46

 

வெண்பா

என்ன பயமுண்டாமேவை மக்காளஞ்சாதீர்

துன்னந்துயரந்துலைந்ததே-சொன்னேனே

நேசமுடனே பெத்தலேகேமிலெம்மாலே

யேசுபரனே மேவினார்.

 

(இராகம்: காப்பி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

பெத்லேமி லெம்மாலேசு

பரனே மேவினார்.

 

சரணங்கள்

1.கர்த்தாதி கர்த்தாவாகிய மெய்த் தேவாதி பத்திய

வஸ்தாதி மூலாதாரக் கிறிஸ்துவே வந்தார்.

பெத்

 

2. பாத்திபன்றவீது புத்திரனே கிருபாசமுத்திரனே

பாவிகள்மீதிற் பட்சதா பத்தின் விசித்திரனே.

பெத்

 

3. ஈறில்லாத ஏகதேவனே மானிடர் ஜீவனே

ஏழைக் கோலமதாயி சைந்தே பூமியில் வந்தானே.

பெத்

 

4. அளவில்லாத வல்லமைக் கோனே முழுதும் நல்லோனே

ஆதாமின் பாவத்தால் மானிடனான சீமானே.

பெத்

 

5. தேவசாயல் மேன்மைபெறவே ஜீவனுறவே

சித்தமாய் நமை ரட்சிக்க அத்தனார் வந்தார்.

பெத்

 

6. வேதநாயகன் பண்பாட வேசந்தோடம் நீடவே

மேசியா கிறிஸ்து யூதர் வேந்தன் வந்தாரே.

பெத்

(1834-வரு.)

-----------------------------------

 

47

 

வெண்பா

தந்தையிடம் விட்டதோசம் பத்தெலாம் போச்சோ

வந்தவிட மாட்டுக் கொட்டிலோ-கந்தையோ

உன்னதமோ மெத்தமெத்த உச்சமோ இக்காட்சி

முன்னணையின் வேந்தே மொழி.

 

(இராகம்: ஆனந்தபைரவி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

முன்னணையின் அரசே யெமை

மோட்ச ராட்சியஞ்

சேர்க்கத் திருவுளமோ இக்காட்சி

முன்னணையின் அரசே.

 

அனுபல்லவி

பொன்னகர்த் தேவாதிபதியே வானோர் வணங்கும்

பூரணப் பராபரன்றன் காரணத்திருக்குமாரா

பூத்தவுலகையீ டேற்றவோ வினைமாற்றவோ சாமி

புல்லிற் கிடப்பதும் வல்லபரனே சொல்.

முன்

 

சரணங்கள்

1.பாவிகளுயிர் பிழைத்து மேவிவாழ்கவோ அதி

பக்கிஷப் பரமனோடயிக்கமாகவோ

ஜீவனேயும் மோடிருக்கவோ உம்பர்களுடன்

சிறந்தொளிரவும் மறந்திகளவும்

நிறைந்தன பலன் அடைந்துலவவும்

தீய வெங்கடி மாயவுங் கிருபையா யெழுந்ததுவோ

திரித்துவத் தொரு கிறிஸ்துன் மகத்துவம்.

முன்

 

2. மட்டில்லா அகண்டவெளியெட்டுங் கொள்ளுமோ நெடு

வானமும் புவியுங் கூடியேனும் விள்ளுமோ

கெட்டமனம் சற்றுமுள்ளு மோ நின்னன்பைமுற்றும்

கிரிகித்துணர்கிலன் அறிவற்றிடு புலன்

மறதிக் குணமுள நெறி தப்பிய களன்

கேள்வி மிஞ்சிய தாவீதின் குமராயிரங்குவையே

கிருபைக் கதிசய பொறுமைக் கதிபதி.

முன்

 

3. தந்தலகை சொந்தடிமை வந்தனானையா மனச்

சஞ்சலமிஞ்சுது சரண்தஞ்ச மேசையா

எந்தனைக் கிருபைக் கண்பார்துய்யா மட்டற்றுயர்ந்த

இரக்கமே மனவுருக்கமே கன

பெருக்கமே வருதிருக்கருணையே

யேதமே கெட வேதநாயகன் ஓதுதாயகமே

யேசு ராஜ் உமக்கோசனா மனா.

முன்

(1830-வரு.)

-----------------------------------

 

48

 

வெண்பா

பாவியடியேனான் பட்டகடன் தீர்க்கவோ

தேவ ரீர்க்கன்பனெனச் சேர்க்கவோ-சாவறவோ

பொன்னுலகை விட்ட புதுமையேன் மாட்டகத்துக்

கென்னையா நீர் வந்தது.

 

(இராகம்: ???)(

 

பல்லவி

என்னையா நீரெங்கே வந்தீர்

ஏழையாகப் பிறந்தீர்

 

சரணங்கள்

1.உன்னதப் பிதாவின் சேயா

ஒப்பிலாக் கிருபைத் தூயா

ஒருவருமறியா வருண்மிகு திருமறை நெறியே கருணையி

னோவியமே யதமேவைக் காயிவ்வித

முருமையுடன் மனது ருகி யுருகி.

என்னை

 

2. சாமிக்கோராத நானே சர்ப்பத் தடிமை தானே

தீமைவழி சென்றேனே தேவகிருபை யெண்ணேனே

திரிமுதலவனே திறமிகு சருவவல்லபனே பாதகன்

செழித்தருள் பெற முழுவுலகமுமே

களித்துயரவுன்னிய திருவுளமோ.

என்னை

 

3. ஆதிவினையை நீக்கி அந்தகாரத்தைப் போக்கிச்

சாதிகளைக் கைத்தூக்கித் தாதையோடுற வாக்கித்

தயை சொரிந்திடவோ வும திருதய மகிழ்ந்திடவோ இசறேலர்

சனத்தையும் சிறைவிடுத்தவர் துன்பதீ

தனைத்தையுமதமாக்க வந்தனையோ.

என்னை

 

4. உன்னத்தற்கு தோத்திரமுலகின்றி வெம்மாத்திரம்

அன்னை கெர்ப்பத்தின் சூத்திரமறியக் கூடாவிச் சேத்திரம்

அதிசயப்பொருளே அமரர்கடுதிசெயுந் தெருளே வேதநா

யகத்தைந் திருமுகத் தொடு பார்த்தவன்

அகத்தையுங் கடனனைத்தையுந் துலைத்தவா.

என்னை

(1830-வரு.)

-----------------------------------

 

49

 

வெண்பா

நம்பிநம்பிப் பாடினேன் நாடினேன் தேடினேன்

தம்பமெனக்குன் சரணமே - யும்பர் தொழும்

வேதா யெனது வினைதீர் கிறிஸ்தேசு

நாதா நானுன்னடைக்கலம்.

 

(இராகம்: ஆனந்தபைரவி)

 

பல்லவி

நாதாவுன்னடைக்கலம் நானே

நான் பாடிப்பாடி நம்பியெண்ணினேன்

நாதா நிதமுன் தம்பம் நண்ணினேன்.

 

அனுபல்லவி

ஆதிபிதாவினோ ரருமைத் திருக்குமாரா

அற்புதப் பரப் பிரம திரித்துவ கிறிஸ்தேசு.

நாதா

 

சரணங்கள்

1.அண்டமுமகண்ட பகிரண்டமு மெண்டிசை பர

மண்டலமெல்லாம் படைத்த தேவே கோவே

பண்டு நரர் செய்த பவமிண்டகலவே வடிவு

கொண்டுலகில் வந்த மெய்மன்னாவே பாவே

தொண்டர்களுக் கனுசாரி சுத்தக் கிருபை வாரி

விண்டருள் மிகுமு தாரிமேலாம் பிரதானாசாரி

மெய்ப்பர தற்பர சிற்பர வற்புத

வேதப் பொருளே பாதுற்றருளே.

நாதா

 

2. முன்னணையிலே பிறந்த மன்னனே நீர் செய்கிருபைக்

கென்னவதிட் செய்வதறியேனே நானே

சின்ன வயதானது தொட்டெண்ணரியத் தீமைபுரிந்

துன்னருள் மறந்த சிறியேனே கோனே

உன்னதப் பிதாவின் மைந்தா உரிமைப்பாதார விந்தா

தன்னுயிரளிக்குஞ் சொந்தா சற்சிதானந்தானந்தா

தற்சுயநிற்சய அற்செயவற்சிய

சங்கா துங்கா சங்கீர்த்தனமே.

நாதா

 

3. பெத்தலைப் பதியிலுற்ற நித்திய கிறிஸ்தரசே

மெத்தவுந் தயவு செய்வாயையா நா

னெத்தனை பாவியென்றாலும் சித்தமிரங்கிக் கண்பார்த்து

ஈடேற்றுவதுன் கடன் மேசையா துய்யா

சத்திய வேதப்பிரதாபா சகல நன்மைச் சொரூபா

உத்தமத் திரித்துவ யோவா வொன்றாமொரேமெய்த்தேவா

உம்பர வம்பர சம்பர சிதம்பர

ஒசியன்னா இரட்சியு மன்னா.

நாதா

 

4. மைந்தர்க ளகந்தையற வந்த பரனே யுனது

சுந்தரப் பாதார விந்தங் கண்டேன் தொண்டன்

சந்ததம் வேதநாயகன் தந்தபதங்கள் பாடிச்

சங்கீர்த்தனங்கள் சொல்லிக் கொண்டேன் தொண்டன்

வந்தனம் வந்தனம் கர்த்தா மகிமைப் பிரதாபத்தத்தா

எந்தனையாளும் பரிசுத்தா யேசுவேஞா னப்பத்தா

இஸ்திரி வித்திலு தித்த மகத்துவ

வெருசலையதிபதி திருவிழியருள்புரி.

நாதா

(1831-வரு.)

-----------------------------------

 

50

 

வெண்பா

அரூபியசரீரி யளவிலா நன்மைச்

சொரூபி சதா நித்திய சுகஜீவி-யுரூபிகரித்

தாமனார் நம்முருவ மானத் திருக்காட்சி

ஓமனமே யுன்னதுன்னதம்.

 

(இராகம்: காம்போதி)

(ரூபக தாளம்)

 

பல்லவி

மனமே ஓவுன்னதம்

மறை தந்தவனே வந்தனர்

 

அனுபல்லவி

கனமிகுந்த திருக்குமாரன்

கருணையாய் நரருருவமாகினார்.

மனமே

 

சரணங்கள்

1.ஆதிசர்ப்பத்தின் தலையையுடைக்க

அகிலத்தின் பவமனைத்துந் துடைக்க

வேதமறையினூடு சிறந்த

மேசியா பிறந்தார்.

மனமே

 

2. ஆகனமிகும் மகிமைத் தேவனார்

யாவருக்கும் அருள்செய மேவினார்

ஏகமுதல்வனா மொரு வஸ்து

இயேசு ராஜ கிறிஸ்து.

மனமே

 

3. நானிலத்தின ராள் பிழைக்கவே

ஞான நன்மை களே தழைக்கவே

வான ராட்சியஞ் சேர்ந்து வந்தது

மானுவேல் பிறந்தார்.

மனமே

 

4. நாம் நடத்தியபடி செய்யாமல்

நம்முட மேலுக்கிரம் வையாமல்

ஆ மகத்துவமே கதித்தவ

னாதி யானுதித்தார்.

மனமே

 

5. நாதனார் மனுவாய் வந்திருக்க

வேதநாயகன் பதங்கள் பெருக்க

நமக்கிப் போது கவலையேது

நாம கீர்த்தன மோது.

மனமே

(1829-வரு.)

-----------------------------------

 

51

 

வெண்பா

வானவர்களையன் மனுவடிவைக் கொண்டாட

வீனநரர் போற்றாதிருப்பாரோ-ஆனதினாற்

றிக்கொன்றி நின்றுயர்ந்த தேவாதிகுமார

னுக் கென்றுந் தோத்திர மோசன்னா.

 

(இராகம்: கமாஸ்)

(ஆதி தாளம்)

 

பல்லவி

தேவா திருக்குமாரனுக்குத் தோத்திர மோசனா

செய தோத்திர மோசன்னா

நித்திய தோத்திர மோசன்னா.

 

அனுபல்லவி

ஆவலதாயுலகோர் பவ மாறவனாதியு மனுவானார்.

தேவா

 

சரணங்கள்

1.ஆதி திரித்துவ ஜோ தியாண்ட பரனுட நீதி

வேத மறை யுடனோதி மீளவு மானிட சாதி

வானுல கேறி யெனூழியும் வாழ்க மகாதிருவுளமானார்

தானவர் சூடிய ஜீவகிரீடமுமே முடியிடலானார்

அற்புத வினோத னர்ச்சய பொற் பாதன்

அருள் தேவப் பிரசாதனனைத் துயிர்க்கு நாதன்

அன்பர்கள் சிந்தை மகிழ்ந்து வளம்பெற

இன்ப மிகுந்துலகந்தனின் மேவிய.

தேவா

 

2. ஆரண சத்திய மோங்க அக்கியான இருள்வாங்கத்

தாரணியோர் பவம்நீங்க தற்பரனா ரடி தாங்க

அந்தமிலாத பராபரனானவ ரன்புருவாய் வந்தார்

சந்ததமுஞ்சபை யின்நடுவே குருமார்களையுந் தந்தார்

சீருலகமெங்குந் தேவாலையங்கள்

தேசுற விளங்கச் செயமங்களங்கள்

சிந்துகளுங்கவி விந்தையுடன் சொலி

மைந்தர் சிறந்து தொழும்படி நாடிய.

தேவா

 

3. ஆவைமரி மனமகிழ ஆஞ்சுகள் மங்களம் புகழ்

ஏவைசெய்த வினையகல இசறா வேலொடு சகல

ராசர்களுங்குரு தேசிகருங்கவி நாவல ராவலரும்

மாசறு பூசுரரீசுரரும் பலமாதவருந் தொழவே

மாகபர மட்டும் வானதிசை யெட்டும்

வாழ்வரசு கட்டு மானுவேலாளட்டும்

வஞ்சகர் நெஞ்சகமஞ்சட்டும் செப

விஞ்சையர் கொஞ்சியிறைஞ்சட்டும் திவிய.

தேவா

 

4. ஆகம நீதிகள் முடிக்க அக்களித்தாஞ் சுகணடிக்க

மாய்கைவலைப் பேய்துடிக்க மங்களம் வேதநாயகன் படிக்க

தேகமிலாத பராபரனானவர் சிற்றுருவாய் நின்றார்

மோகவிகார மூவாசைகள் யாவையு முற்றினுமே வென்றார்

முற்பிதாக்கள் தேடும் மேசேசு கொண்டாடும்

முத்தியர்கணாடும் மூவுலகும் பாடும்

முன்னவனு ன்னத மன்னவனன்னையர்

தன்னிடமுன்னிய பொன்னுலகதிசய.

தேவா

(1803-வரு)

-----------------------------------

 

52

 

வெண்பா

இரக்கமே ரூபமெடுத்துக் கிருபைப்

பெருக்கமே மண்ணிற் பிறந்து-திருக்கருணை

ஞானந்தரும் பரம நாதனே வந்தானி

தானந்த மா லேலூயா.

 

பல்லவி

ஆலேலூயா ஆலேலூயா ஆலேலூயா பரர்க்

கனந்தனந்த சங்கீர்த்தன மாலேலூயா.

 

அனுபல்லவி

சாலோக பதங்களுக்கு மேல தானோ ரிந்தத்

தாரணிமீது மகாதயவாய் நரர் சாயலின் வடிவானார்.

ஆலே

 

சரணங்கள்

1.திருவிரக்கமுற்ற கிறிஸ்தேசு நாதர் நரர்

சீலமதாயுருவான தினாலவையே தினமே புகழ்வோம்

அருள் மிகுத்த வானவரும் பாடக் கேட்கி றோமீதா

ராயவொணாத மகா கிருபா நதியாழவ கோசரமே.

ஆலே

 

2. தன்னிகரில்லாத வொன்றாந் தேவபுத்திரன் எங்கள்

சாயல தாயுரு வாயவ தாரம தாகிய சாதுரியன்

முன்னணையிலே யிதோ படுத்திருக்கிறார் இது

மூதறி வோருளம் யாவதுமே பிரமை மூடியமா தயவே.

ஆலே

 

3. அளவில்லாத வல்லவனெல்லார்க்கு மேலா னோனுல

கானதும் வானதும் வானதின் மேவிய யாவையுமே தருவோன்

வளமுடன் சிறு குழந்தையாக வன்னையார் கனி

மாமரியாள் மடியானதிலே கிடையானதெம் மாறுதலே.

ஆலே

 

4. அதிசய மிகு மனாதிஜோதி பூமிக்குத்திக

ழாரண தீத நனீத வினோத மெய் நூதன வொளிவிடுது

துதிமிக இதோகொடு மிராவிருளிலும் அதி

தூயபிரகாசமதா யொளிவீசுது சோதியின் மாதயவே.

ஆலே

 

5. இன்னீசருக்குன்னதமா மோட்ச வாழ்வு கிடைத்

தேதமிலாமலெந் நாளும் விணூடொழிலாகவும் வாழ்கவுமே

பொன்னுலகதி பதியாந் தேவபுத்திரனிந்தப்

பூதலமீதினில் மாபரதேசி போலாகினர் பூரணமே.

ஆலே

 

6. அன்புடனமக் கிரங்கி நம்மை மோட்சத்தில் மா

ளாத மெய்வாழ் வதினால் மிகசூரியராய் வளமேறவுமே

இன்பமிகும் இரட்சகர் மகத்துவமெலாந் துறந்

தீனம தாயெளியோனென நீடினரீது மகா தயவே.

ஆலே

 

7. மட்டற்ற தமதன்பின் கருத்தைக் காண்பிக்க வந்த

மானுவேலாதி பராபரனேய குமாரனையே பணிவோம்

இஷ்டமுடன் துதிசொல்லும் வேதநாயகன் தமி

ழேறவுமேசு வென்னேசர்குழா மகிழாகவும் வாழ்கவுமே.

ஆலே

(1800-வரு)

-----------------------------------

 

53

 

வெண்பா

உன்னத்துக்கே மகிமையுண்டாக மாந்தருக்குள்

அன்னிவொன்னியப் பிரியமாகவே-இந்நிலத்தின்

சாதிகளுக் கெல்லாந் தமது சமாதானம்

ஓதுமேசுக் கிறிஸ்திவர்.

 

(இராகம்: இந்துகார்வர்)

(ஆதி தாளம்)

 

பல்லவி

சமாதானம் ஓதும் யேசுக்கிறிஸ்து

இவர்தாமிவர் தாமிவர்தாம்தாம் தம்.

சமா

 

சரணங்கள்

1.நமதாதிப் பிதாவின் திருப்பாலனிவர்

அனுகூலனிவர் மனுவேலனிவர்.

சமா

 

2. நேய கிருபையினொரு சேயனிவர்

பரமராயனிவர் நமதாயனிவர்.

சமா

 

3. ஆதிநரர் செய்த தீதறவே

அருளானந்தமாய் அடியார் சொந்தமாய்.

சமா

 

4. வேதமுதல்வனார் போதமகிழப்

பூலோக மகிழ வானோர்கள் மகிழ.

சமா

 

5. ஆரணம்பாடி விண்ணோராடவே

அறிஞோர் தேடவே யிடையோர் கூடவே.

சமா

 

6. மெய்யாகவே மேசையாவுமே

நம்மை நாடினார் கிருபை கூறினார்.

சமா

 

7. அருளானந்த மோட்சவழி காட்டினாரே

நிலைநாட்டினாரே முடி சூட்டினாரே.

சமா

 

8. ஜெய வேதநாயகன் பாட்டாரே

செபங் கேட்டாரே விடமாட்டாரே ஓ நாட்டாரே.

சமா

(1842-வரு)

-----------------------------------

 

54

 

வெண்பா

அருமைத் திருவடிவா ஆச்சரிய நேசா

கருணைப் பரம கடாட்சா-தருமத்தா

ஆசை மணவாளா அன்பே யெனைப் புரக்க

யேசு சுவாமி வாரும்.

 

(இராகம்: ஹரிக்காம்போதி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

இயேசு சுவாமி நீர்வாரும் இரட்சகா நீர்வாரும் என்னையா

இஷ்டம் வைத்தே திருக்கண்ணால் பாரும்

ஏதமே கெடப்பாதந் தாருமையா.

 

சரணங்கள்

1.நேச சத்திய கிறிஸ்தேந்திரா நீதியாதிப சுந்தரா

நேமியாளுது ரந்தரா நீசவேத கற்பனை மந்திரா

நிரந்தரா ஞானேந்திரா.

யேசு

 

2. மாட்டுக்கொட்டிலிலே பிறந்தெனை

மீட்டடிமை கொண்டீரோ

மாண்டெனைப் புரந்தீரோ

ஆண்டநாதா சிறைமீண்ட தாதா அன்பு

பூண்டதாதா உன்னதா.

யேசு

 

3. மட்டில்லாத மகத்துவப் பிதாவின் நேய மைந்தாவே

வானவர் தொழுந் தேவே

மனுவேல் தவிது நங்கோவே

வரந்தாவே யன்பாவே.

யேசு

 

4. மந்தையாயர் மகிழ்ந்தடி தொழ

வந்த என் பெருமானே

வந்தனம் ஞானப் பூமானே

அனந்த பாக்கிய சீமானே

வாஞ்சையானேன் கோமானே.

யேசு

 

5. சத்திய பரா திரிதத்துவா

சமஸ்த நன்மைச் சொரூபா

சருவ லோக ஜீவ தயாபா

தவறாத நித்திய பிரஸ்தாபா

ததிதேவா யேயோவா.

யேசு

 

6. முற்பிதாக்கள் தெரிசிமுனிவர்

பார்க்க விரும்பும் நாட்டா

மோசே கண்ட கொண்டாட்டா

கவி வேதநாயகன் பாட்டா

எனின் றேட்டா மன்றாட்டா.

யேசு

(1843-வரு)

-----------------------------------

 

55

 

வெண்பா

ஜீவனின்மன்னா திவியகிருபாசனா

பாவிகளின்ழன்னா பிரசன்னா-பூவில்வரு

தாவீதுமன்னா தருமதிருவாசனா

தேவசேயோ வோசனா.

 

(இராகம்: ஆனந்தபைரவி)

(ரூபகம்)

 

பல்லவி

தேவசேயோ தேவசேயோ ஜீவவான மன்னா

மாதிவ்விய கிருபாசன்னா

பாவிகளின் பிரசன்னா

தேவசேயோ தேவசேயோ ஆண்டருள் செயுமோசன்னா.

 

சரணங்கள்

1.ஆவியாயனாதியாய் அமர்ந்த தேவசேயோ

மூவுலகனைத்தை யுமுன்றந்த தேவசேயோ.

தேவ

 

2. சுந்தரமிகும் பரமானந்த தேவசேயோ

நந்தர் மகிழ்ந்தடி பணிந்த தேவசேயோ.

தேவ

 

3. செங்கோற்ற வீதிறைஞ்சும் துங்க தேவசேயோ

மங்காக் கிருபை சிறந்த சங்கை தேவசேயோ.

தேவ

 

4. சீரார் மானிட அவதார தேவசேயோ

வேராதி மூலரண வீரத் தேவசேயோ.

தேவ

 

5. மாட்டுக்கொட்டிலிற் பிறந்த வல்ல தேவசேயோ

மீட்டுக் கொண்டெமைப் புறந்த மேன்மை தேவசேயோ.

தேவ

 

6. ஆதியந்தமிலா தனந்த தேவசேயோ

வேதநாயகன் பாடுமேன்மை தேவசேயோ.

தேவ

(1843-வரு)

-----------------------------------

 

56

 

வெண்பா

தந்தரவைப் பாழாக்கிச் சாதிகளை யீடேற்றிச்

சுந்தரவானத்தின் முடிசூட்டவே-சந்த

மரிய கன்னியாஸ்திரி தன்மைந்தனென வந்த

பரமனே கண் பாரையா.

 

(இராகம்: கமாஸ்)

(ஆதி தாளம்)

 

பல்லவி

பரமனே கன்னியாஸ்திரி நந்தன

பரம சுந்தர சதானந்தனே ஒரு

 

சரணங்கள்

1.திரிலோக சிம்மாசன னீ

சிறந்தடியவர் பவமோசனனீ

தரணியில் மானிடர் தஞ்சமுனீ

சருவ ஜீவ தயாபர னீ.

ஒருபர

 

2. ஆதியந்தமிலாத பரா

அரிய பரம கருணாகரா

வேதம் யாவும் நிறைவாகரா

மேசியா சருவேசுரா.

ஒருபர

 

3. தேவலோக முண்டாகுமுனா

ஜீவனான மெய்வான மனா

ஓவியக் கிறிஸ்தே சையனா

ஓமனாதிசர னோசியனா.

ஒருபர

 

4. சத்துருச் சோதனை போக்குவாய்

சகல தீவினையும் நீக்குவாய்

பத்தனெனை யடிமை யாக்குவாய்

பாதுகாத்திரு கண்ணோக்குவாய்.

ஒருபர

 

5. சருவலோகாதி காரனே

தவிதுதொழ வருகுமாரனே

கிருபையாயிரும் நேமியே

கிறிஸ்துவே யேசு சுவாமியே.

ஒருபர

 

6. தேசுலாவுஞா னேந்திரமே

திருவினாடர் ஜெப மந்திரமே

மேசியா வனந்தந்தரமே

வேதநாயகன் சங்கீர்த்தனமே.

ஒருபர

(1844-வரு)

-----------------------------------

 

57

 

வெண்பா

வானமே நீ கேளு மண்டலமே காதுகொடு

ஏனிதுனக்காச் சரியமில்லையோ-மானிடனாய்த்

தொல்புவியின் பாவஞ் சுமந்து நமை மீட்கவந்த

வல்லபரன் மைந்தன் வருகை.

 

(இராகம்: கல்யாணி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

வல்லபராபரன் மைந்தன் வந்தாரே புவிதனில்

வல்லபராபரன் மைந்தன் வந்தாரே.

 

அனுபல்லவி

எல்லையில்லாப் பொருள்யாவு மமைத்த

இறையவனேக சருவ தயாபரன்

எந்தையனாதியர் சொந்தவடிவினன்

இச்சித்த மகத்துவக்குரு அர்ச்சித்த திரித்துவத் தொரு.

 

தாந்தாந் தகசெந்தரிகிட

தீந்தாந் தில்லானா தந்திரி

நாதிரி திரித்தில்லானா

தில்லில்லானா தில்லானா

 

நாதிரி திரித் தில்லானா) - 2

தானா தந்திரி நாதிரி )

 

சேகு சணுகத் தகத

குகு தத்ததிங்கிண தோம்.

வல்ல

 

சரணங்கள்

1.மூவுலகோருமுடி பணிந் தேற்றவே ஞாயப் பிரமாணத்தை

முற்றுமுடித்தவராய் நிறைவேற்றவே

பாவிகளுக்குப் பரிந்து கொண்டாற்றவே யொன்றானவனாதி

பராபரவஸ்துவின் கோபத்தைமாற்றவே

 

தேவ சுவாபமியாவுமுடைத்தவன்

சிட்டிக்கப்பட்டதனைத்தும் படைத்தவன்

காவிலுண்டாகிய சாபந் துடைத்தவன்

கள்ள நரகக்கவாட மடைத்தவன்

 

கற்பனைபத்தையுந்தூக்கி யிரண்டு

விற்பனக்கற் பனையாக்கி வழி

காட்டுதற்காயுருவெடுத்தா னிங்கே

மாட்டுக் கொட்டிலுக் குட்படுத்தா னரர்

காட்சிக் கெளியான் சுரர்சூட்சிக் கொளியான் பர

மாட்சிக் களியான் நிரம்பிய

காதைத் திரளான் மெச்சிய நீதித்துரைமாசத்திய

வேதப்பொருள் போதக் கலையோதித் தருமாதிக்குரு

மிகவுத்தம சுகமுக்கிய உகமைக்குயர் தகமைப்பரன்.

தாந்

 

2. வானத்தின் சேனைகளனந்தம்பாடவே மந்தைகாக்குங்கோ

வர்த்தனர்களொரு மித்துக் கொண்டாடவே

ஞானத்தின் சாஸ்திரிமார்கள் தேடவே பூதகணங்கள்

நடுங்கித் திடுக்கிட்டொடுங்கி யோடவே

 

யீனத்துரோகி களிடத்தை நீங்கி

யித்தரையோர்களின் பாவத்தைத் தாங்கிக்

கானத் திலாவின்குடிலுக்குட் டேங்கிக்

கருணைத் திருவடிவங்கொண் டோங்கிக்

கன்னிமரி யவளிடமாய் மறை

சொன்ன வுரைப்படி திடமாயிது

காரணமோ சுதன்பிறந்தான் பரி

பூரணமாகவும் நிறைந்தான் தேவ

கர்த்தனைக் கண்டோம் பராபரவஸ்தெனக் கொண்டோங்

கரிசித்துரை விண்டோம் விணிற் பிர

காசத் தொளிவாய் நித்தியவாழ்வைப் பெறுவோமுக்கிய

ராசத்துவ மேவிச்சுக சீவபிரவடீகத்துட

னலமொய்த்தெழு தலைமைப் பரன்வலபக்கம

துலவிக் கொள்வோம்.

தாந்

 

3. அந்தமிகுங் கிருபாசனம் வீற்றிருந்தான் சேரக்கூடா வெளிச்

சத்தின்பர மண்டலத்தையும் பிரிந்தான்

மைந்தர் சொரூபத்தைச் சொந்தமெனத் தெரிந்தான் தீவினை மேவிய

வையகத்தோருக் கனுக்கிரகமே புரிந்தான்

 

சிந்தையின் தேவசினேகந் திரண்டு

சீவத்தண்ணீர் பிரவாகம் பிரண்டு

விந்தைமனுப் பயிர் மேலுறப்பண்டு

வெண்ணிலையங்கியும் பொன்முடியுங் கொண்டு

 

மேவிய நன்மனுவேலன் கெட்ட

பாவிகளுக்கனுகூலன் கவி

வேதநாயகன் சொன்னான் சிட்டிக்

காதியாகிய முன்னானிவன்

விண்ணவர் கோமானெமை நண்ணிய பூமானொரு

புண்ணியசீமான் விடந்தரு

வேடக்கண மோடச்சுரராடப்பரர் பாடக்குடில்

வீடுற்றதயாபத்து வினோதப் பரமாதித்தன் மெய்

விருதுக்கொருகுருசுக்கொடி நிருபத்தவிதரசுத்துரை.

தாந்

(1823-வரு)

-----------------------------------

 

58

 

வெண்பா

பாங்கரிய வேதப்பழம் பொருளெலாங் கொண்டு

வோங்கு பரமண்டலத்தையுங் கொண்டு-தாங்கரிய

சந்தோடங்கொண்டு தரணிமுழுதும் புரக்க

வந்தான் பரமன் மகன்.

 

(இராகம்: தோடி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

வந்தானே பரன்மகன் வந்தானே நமக்குப்பர

மண்டலத்தைக் கொண்டு வந்தானே

அனுபல்லவி

தந்தைப் பராபரன் சாற்றலாலே

சயம்புவின்தற் சுவாபத்தைப் போலே

சங்கங்களிக்க எங்குஞ் செழிக்க

சனபரதாபங் கண்டு மனுடரூபங் கொண்டு.

வந்

 

சரணங்கள்

1.திரித்துவத் தினிலிரண்டாமாளெனச்

சிறந்த நாமத்தைத் தரித்து ஆதி

தேவபிதாவினோடுலகத்தைரட்சை

செய் வேனானென்று தெரித்து ஏவை

பறித்தகனியின் விடத்தினால் வந்த

பாவங்களனைத்தும் பிரித்துக் கொடும்

பாதாளத்திருந்தா தாளித்தெழும்

வேதாளத்தைச் சங்கரித்து அதின்

மறுத்தவஞ்சக முரத்த தந்திரம்

வலியதரத்தை யுடைத்துக் கெட்ட

மரணத்தினுட கூரையொடித்து

நரகத்தின் கதவையடத்துப் பின்னும்

நெறித்த தேவ கோபத்தை மாற்றி

நீண்டசாபத்தைத் துடைத்துப் பரம

நீதியை நிறைவேற்றிச் சத்திய

வேத நூல்களைப் படைத்து மிக

வெறித்த பாவிகள் குணப்பட்டடங்க

மிக்கதவங்கள் செபங்கள் துடங்க

அறத்தின் றகையுஞ் சுடரத்

திறத்தின் றிடமும் படரப்

புறத்தங்கதமும் பிடரக்

குறித்திங்கிதமுந் தொடர.

வந்

 

2. உன்னதத்தின் கிருபாசனத்தை விடுத்

துயர்ந்த வெளியைத்தாண்டி யந்த

உம்பர்கள் சேனைக்குழாங்க ளுலாவிய

ஒளிவின் விரிவுந்தாண்டிச் சுடர்

மின்னிய சேரக்கூடாதவெளிச்சத்தின்

வீதிவிலாசமுந்தாண்டி யப்பால்

விந்தைநட்சத்திர மண்டலங்களுட

விம்பத்தையும் விட்டுத் தாண்டிச்சென்று

பின்னையுஞ் சூரியமண்டலத்தினுட

பெருஞ்சக்கரமுங் கடந்து அங்கே

பெருத்தகிரகமண்டலத்தையெல்லாம்

பின்னிடத்தள்ளியே நடந்து புயல்

மன்னுமாகாச விரிவின் பெருவழி

மட்டற்றப் பாதையிற் றொடர்ந்து இங்கே

மண்டியதேவரு மண்டரும் போற்றப்பூ

மண்டலத்தைக் கிட்டியடர்ந்து கடுஞ்

சின்னச் சீனாக்குன்றி னெட்டைப் பிடித்துச்

சேர்ந்தஸ்திவாரத்தோ டொட்டப் பொடித்துத்

தின்னுங் கனிவம் போடத்

துன்னும் பகையுஞ் சாடப்

பன்னுந்துதியும் பாடப்

பொன்னின் கிரீடமுஞ்சூட.

வந்

 

3. கற்பனை பத்தையுமடக்கி வேறிரண்

டுற்பனக்கற்பனை யாக்கி மிகக்

கனத்த அடிமைத்தனச் சீனாக்குன்றைக்

கண்ணுக்குங் காணாமற் போக்கி யதின்

முற்படுமடைபுச் சுவரைத்தகர்த்து

முற்றுந்திறப்பதுண்டாக்கிப் பரன்

முன்னிலைச் சன்னதிக்கேரூபின் காவலு

மூடுந்திரையையும் நீக்கி யிட்ட

பற்பலபெலிகள் சடங்கனைத்தையும்

பாழ்த்தழியப் பண்ணிக்கெடுத்துத் தினம்

பயப்படுத்திய மோ சே திரும்பவப்

பாதைவராப்படி தடுத்து யூதர்

சொற் பெருஞ் சீயோன் பருவதஞ்சென்று

துலங்கு மன்றலுமடுத்து அங்கே

துய்யதவிதின் செங்கோலுக்கென

உய்யுமுயிருங் கொடுத்து அதி

விற்பனச் சாஸ்திரவிதங்கள்முடிக்க

வேதநாயகன் பதங்கள் படிக்க

வெற்புத்திரமுந்திருகச்

சர்ப்பத்தலையுங்கருகச்

சொற்பத்துரையும் பெருகப்

பொற்புப்பரமுந்தருக.

வந்

 

-----------------------------------

 

 

59

 

வெண்பா

நித்தியவிஸ் தோத்திரமும் நீடிய சங்கீர்தனமுந்

துத்தியமுமாகத்துதியாக-இத்தரையில்

இத்தனை தயாபத்திரங்கி வந்த தேவகிறிஸ்

தத்தனே யுந்தனுக்கையா.

 

(இராகம்: தன்யாசி)

 

பல்லவி

இத்தனை தயவதாயுலகத்தில் வந்ததேவ கிறிஸ்

தேசுவே யெந்தனை யாளையா வந்தனமையா

யேசுவே யெந்தனை யாளையா.

 

அனுபல்லவி

நித்தியபரா பரன்றன் புத்திரனென விருந்தும்

பத்தருக் காய்பிணைப்பட்டுப் பரமண்டலத்தை விட்டு.

இத்

 

சரணங்கள்

1.வானமும் புவியுமங்குண்டானவஸ் தெலாம்படைத்த

வல்லமைப் பிதாவேயென்சுவாமி இந்தக்

கானகத்திற்காரிருளில் மானிடவதாரமுற்ற

காரணமென்ன கருணைநேமி தேவ

ஞானமும் நெறியுணரா வீனர்குடியாயிருக்கும்

நரகக்கெபியல்லோ விப்பூமி தரும

தானமுந்தவமுமனுவேனு நினையாதமுழுச்

சண்டாளனானொரு காமி

மானுவேலே தாவீது மன்னவன் செங்கோலே

மட்டிலா வேதாகமத்தின் திட்டமறைநூலே

பானுவே திருக்கடைக்கண் பார்த்தருளன்பாலே

பாதுகாத்தெனை ரட்சிக்கப் பாரமுன்மேலே.

இத்

 

2. மாட்டுக் கொட்டில் மெத்தவுங் கொண்

டாட்ட மோமகத்துவத்தின்

வளமைபிதாவின்குமாரா பெத்லேங்

காட்டுக் குள்ளல்லாமல் யூதர்நாட்டுக்குள்ளோரிடமெனுங்

காணலையோ விண்ணவர்க்கதிகாரா மெத்த

மேட்டிமைப் பிசாசுகளைக் கேட்டழிந்தபாதகனை

மீட்கவந்த மானிடவதாரா கொடும்

பாட்டுக்கோவித் திருவிளையாட்டுக்கோ நரர் துதிக்கும்

பாட்டுக்கோ நீவந்ததுசிங்காரா

ஏட்டுத் திரளாகமத் தினீட்டுப் புகழீசா

இங்கிதக் கிருபை சிறந்திலங்கிய நேசா

ஆட்டுக்குட்டி யாயுலகை மீட்டசருவேசா

அனந்தந் தோத்திரமெனதருமைக்கிறிஸ்திராசா.

இத்

 

3. பாதகனுனையெண்ணாமற்றீது செய்துன் கட்டளைகள்

பத்தையும் பிறக்கணித்திட்டேனே கொடும்

வாதனைசெயுங்கூளிகள் சோதனைக்குளாய் விழுந்து

மரணத்துக்குள்ளகப்பட்டேனே யுத்தம

போதகர் சொல்லும் நெறியைக் காதுகொடுத்தணுவெனும்

புந்தியிலுணராது விட்டேனே சுத்தப்

பேதையடியேனெனது சூதுகளினால்முழுதும்

பேய்க்கடிமையாகிக் கெட்டேனே

யேதுகொடுத்துன்றயவுக் கீடு செய்வேனானே

யேழையு நிற்பந்தனுமாயிரங்கி நிற்கின்றேனே

ஆதரவுனையல்லாமலாரையு மறியேனே

அஞ்சலஞ்சலிரட்சியுமேசையாமெய்க்கோனே.

இத்

 

4. மெத்தவுந்தயவு வைத்து முற்றினுமடிமை கொண்டிவ்

வேளையிலென் றுன்பமெல்லாந் தீரும் நா

னெத்தனை குற்றஞ்செய் தாலுமத்தனையுங் கொண்டு பொறுத்

தேழையடி யேனை முகம்பாரும் பொல்லாச்

சத்துருக்கள் செய்துவருங் குத்திரத்துரோகத்துக்குந்

தந்திரவு பாயத்துக்குங் காரும் தேவரீர்

சித்தமிரங்கி யென் பேரை பொஸ்தகத்திலே வரைந்து

சீவனின் வழியிலென்னைச் சேரும்

பத்தர்தொழு மெஞ்ஞானப்பரம சம்பத்தின் வாழ்வே

பாவிகளையாளவந்த சீவனுடகோவே

நித்திய சதாகால நீடியமெய்த்தேவே

நீதியுடன் மூவுலகமேவியயேயோவாவே.

இத்

 

5. தந்திர பிசாசதுகள் வந்து வந்தடுத்தடுத்துச்

சற்பனை செய்வ தொரு விசாரம் இன

பெந்துகளனைத்துங் கூடி நிந்தையாகத் தூஷணித்துப்

பேசுவதுமேசுவது ங்கோர மெத்தச்

சொந்தமென்று நம்பிநின்றமைந்தருஞ்சினேகிதருந்

துன்பம் வருத்தினர் களிந்நேரம்

தந்தையே சமையமிது கொந்தளித்த ஆபத்துக்குத்

தற்காக்க வேணுமுன் பாரம்

விந்தை மனுவாகவந்த மேசியா வினோதா

வேதநாயகன் கொண்டாடி மெச்சியசங்கீதா

எந்தவிதமும் பாதாரவிந்தந் தரவேணுந்தாதா

எப்படியுங்கை தூக்கியிரட்சியுங் கிருஸ்துநாதா.

இத்

(1823-வரு)

-----------------------------------

 

60

 

வெண்பா

அன்னை பெருட்டாலவதார மாய் வந்த

உன்னதப்பிதாவின் ஒருமைந்தா-மன்னா

அருணோதயமே யனந்த பேரின்பக்

கருணாகரனேகாகா.

 

(இராகம்: காம்போதி)

(அடதாளசாப்பு தாளம்)

 

பல்லவி

கருணாகரனே பரமே சுரனே

கனிவினை தீர்க்கவந்த தனிமுதலேசுநாதா

 

சரணங்கள்

1.அருணோதயமே பரமாதிசயமே

அனந்த நன்மைத்தயாப

முனைந்த வுண்மைப் பிரதாப

அரியபரம்பர தருமசிதம்பர

அறிவினிலங்கிய முறையின் விளங்கிய

அருத்தவேத புராணவிசித்திரன்

பெருத்தஞான பிரதாபசுமுத்திரன்

அகிலமடங்கலு மகிமைபெறும்படி

யனைமரியம்மனை தனையென முன்னணை

ஆதியிலே யதமேவை யராடிய

பாதக மாறமகா தயவாய் வரு.

கரு

 

2. பரனாதியிலே திருவாய்மையிலே

பகுத்து விந்தையினோடு

மகத்துவசந்தோட நீடு

பரிவுடனே யறுதினமதிலே யுயர்

பரமுல காவையுமருளிய நேரமே

பாருலகந்தனிலோர் மனுடன்றனை

யேவையரென் றொரு பாவையுடன்செய்து

யடர்ந்த காவிடையிரண்டு மரந்தர

அடர்ந்தசீவியம் நன்றறிவென்றொரு

பழத்திலே பொசியாமல் விலக்கின

வழிப்படாது பிசாசுட சொற்படி

பாவையராரதின் தீவினையானர

தாவீது சேயெனமேவுகுணாநிதி.

கரு

 

3. மறையாரணனே நிறைபூரணனே

வலமைக்கொரே யோவாவே

தலைமைத் தேவாதி தேவே

வருகையைமா மறையிருடியரோ தின

வரிசையினேர் தவிதரசனினூரயல்

மந்தையினாயர்கள் வந்து பணிந்தெழ

விந்தை மெஞ்ஞானியர் சிந்தையுவந்திட

மகிழ்ந்து வானவர் பூதலர் பாதலர்

புகழ்ந்து பாடியுமாடியுமே தொழ

மரியவளுந்தியிலரிய பரன்றிரு

மகனென அன்புடனரருருவங் கொடு

மானிடர் யாவரும் வானிடமே பெற

மாடடையுங் குடினீடிய சுந்தர.

கரு

 

4. ஒரு நாயகனே வருதாயகனே

யுண்மைக் குண்மையதான

வன்மைப் பரம ஞான

ஓரனுகூலா சீர் மனுவேலா

உலகறியானே வலமையுன் கோனே

உனைநம்பினனே தனையம்பரனே

உச்சித வேதா இரட்சியும்நாதா

உத்தமசீவ திரித்துவ தேவ

மகத்துவராச கிறிஸ்து மணாளா

ஒழிந்திடாமலே யழிந்திடாமலே

யுலைந்திடாமலே யலைந்திடாமலே

ஓலமோல மோசியனாவே

ஓதிய வேதநாயகன் பாவே.

கரு

(1840-வரு)

-----------------------------------

 

61

 

வெண்பா

ஒன்றான தேவனொருமைந்தா கேட்டருள்வீர்

மன்றாடிப்பாடி மனதுருகிச்-சென்றெழுந்தோ

முன்பாதி தீவினையால் முன்னணையிலே பிறந்த

நின் பாத சேவடி நீடி.

 

பல்லவி

பாத சேவடி மன்றாடிக் கொண்டாடித்

துதிபாடித் தேடி வந்தோம் பாதசேவடி

நம்பினோந் தேவரீர் திருப் பாதசேவடி

 

சரணங்கள்

1.ஆதிதனிமுதலோதும் நெறிவழி

யன்னைபுரி பாதகத்தினாலே யுயர்

மன்னவன்றவிதுட செங்கோலே யொரு

கன்னியாஸ்திரியினிட முன்னணையின்மேவுதிரு.

பாத

 

2. வானசுரர் நவசேனையணியுடன்

மங்கள சங்கீர்த்தனங்கள் சாற்ற ஆயர்

கங்குலில் வந்தடி பணிந்தேற்ற பசுந்

தங்கமுந்தூ பமிறாக் கொண்

டிங்கிதத் தறிஞர் தொழும்.

பாத

 

3. ஓசன்னாயிரட்சியுமே சுகர்த்தாவே

உன்னதத்திலே மகிமையாக நரர்

தன்னிலதிபிரிய சினேக முற

இன்னிலத்திற் சமாதானம்

என்னதிசய முனது.

பாத

 

4. வேதநாயகன் பாடற்கருள் தயாப

மேசியாயேசுக் கிறிஸ்து நாதா கெட்ட

பாதகரை மீட்கவந்த நீதா கொடு

மாதி சர்ப்பத்தின் சிரத்தை

வாதையுறவே மிதித்த.

பாத

(1841-வரு)

-----------------------------------

 

62

 

வெண்பா

நித்தமென் பாவத்தாலே நெஞ்சம் நடுநடுங்கி

மெத்தத் துயரமிகுத்தேனே-சித்தம் வைத்து

வந்து காவையா மகத்துவத்தொரே யோவா

வெந்தையே யிந்த வேளை.

 

பல்லவி

இந்தவேளையெந்தையே யோவா

வந்துகாவையா ஓயே யோவா

 

அனுபல்லவி

முந்தச் சீர்ப்பட்ட அந்தமா நகர்க்

குந்தயாபரா நிந்தைக் கானேனே.

இந்த

 

சரணங்கள்

1.சத்திய வேதவாக்கிய சலாக்கியமே

மெத்த வாடினேன் கைவிடாதேயும்

எத்தர் சோதனையி யாவு மாறிட

எளியனைக் கடாட்சியு முன்றஞ்சமே.

இந்த

 

2. நித்திய கிருபையாள நேச பாக்கியமே

பத்தன் வேதநாயகன் பாடும்பரா

எத்தராகிய சத்துரு தீதறாய்

இசறேல்பூசித இயேசுராசன்னுதா.

இந்த

(1844-வரு)

-----------------------------------

 

63

 

(இராகம்: சுத்தபங்காளா)

(ஆதி தாளம்)

 

பல்லவி

மேசையா பிறந்தார் இராவிலே

மேசையா பிறந்தார்.

 

சரணங்கள்

1.நீச ரெமை நினைந்து நேச உருவெடுத்து

இயேசையா பிறந்தார்.

 

2. வானுலகத்தைவிட்டு ஆனிலையிலுள்பட்டு

மானுவேல் பிறந்தார்.

 

3. அட்சயமே யுண்டாக பட்சமாய் ராவிலோக

இரட்சகர் பிறந்தார்.

 

4. சாகத்தீர்க்கப்பட்ட நம் யோகத்தினாலித்தினம்

மா கர்த்தர் பிறந்தார்.

 

5. ஆகாத பேர்கள் கெட்டு போகாமலு வந்திட்டு

யேகோவா பிறந்தார்.

 

6. பாவிகளைக் கைதூக்கி ஜீவகரையில் சேர்க்க

தேவ சேய் பிறந்தார்.

 

7. அம்மையிலே நாம் வாழ்க இம்மையில் சுபமாக

நம் ராஜா பிறந்தார்.

 

-----------------------------------

 

64

 

(இராகம்: பியாக்)

(ஆதி தாளம்)

 

பல்லவி

மனுவேல் ராஜன் பிறந்தார்

வான்திறந்தார் மனுவேல் ராஜன் பிறந்தார்.

 

அனுபல்லவி

செனன நாள் கொண்டாடும் சபையே பண்பாடும் திருச் (2)

 

சரணங்கள்

1.தந்தைக்கொப்பானார் குழந்தையாய்ப்போனார்

கந்தையணியலானார் சந்தித்தார் கோனார் எமை

- மனு

 

2. கடவுள் வந்தடுத்தார், அடிமைரூபெடுத்தார்

விடைகொட்டில் படுத்தார் திடமேவிடுத்தார் ஓகோ

- மனு

 

3. பரமராட்சியமே தரையில் நிட்சயமே

வரவே அட்சயமே நரனானார் செயமே ஓகோ

- மனு

 

4. அத்தனுன தநேசம் எத்தனை விலாசம்

சுத்தச்சுபவிசேஷம் மெத்த சந்தோஷம் ஓகோ.

- மனு

 

-----------------------------------

 

65

 

(இராகம்: ஆபேரி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

இம்மானுவேல் பிறந்தார்

இரட்சகராய் வந்தார்

இதோ கொட்டிலில் சிறந்தார்

எங்கட்காசியே தந்தார்.

 

சரணங்கள்

1.சிம்மாசனத்தை விட்டார்-தீயோரெமை நட்டார்

எம்மாங்கிஷத்துட் பட்டார்-எல்லாருந்தழைத்திட்டார்

- இம்

 

2. அர்த்த சாமந்தனிலே-ஆர்ந்த குளிர் நாளிலே

செத்தை புல்மீதிலே ஜென்மித்தார் பெத்லேமிலே

- இம்

 

 

3. உற்ற ஒத்தாசை இல்லை சற்றும் வெளிச்சமில்லை

பெற்ற தாய்க்கொன்றுமில்லை சுற்றினாள் கந்தைபுல்லை

- இம்

 

4. பாடுபசிதாகமேபட இப்பூலோகமே

நீடின சிநேகமே நினைத்தால் அநேகமே.

- இம்

 

5. தேவசேனைகள்கூடி சேர்ந்தா காயமூடி

ஆவலோடே கொண்டாடி அஞ்சலிசெய்தார்பாடி

- இம்

 

6. எப்பிராத்தாச்சிறிது ராஜா வந்தால் பெரிது

தப்பிலான் கூறினதுதான் நிறைவேறினது

- இம்

 

7. இயேசு குழந்தையாலே எந்த பிள்ளைகள் போலே

தேசுற்றுநாம் விண்மேலே சேர்ந்தாளுவோம் மென்மேலே

- இம்

 

8. காத்திரப்பவமற கர்த்தனைக்கண்டே தேற

தோத்திரப்பதம் கூற சொற்சுப செபம் ஏற

- இம்

 

-----------------------------------

 

66

 

(இராகம்: செஞ்சுருட்டி)

(ஆதி தாளம்)

 

தேவ தேவ சேயனுதித்தார்

திரு மரி சிறுமகவாக செய செய

 

1.திவிய சுராள் - புவியில் நராள்

செவியுற இசை சொல தவிதுகுமாரனென

தேவ

 

2. பரன் மகிமை தரை தகமை

நரர் பிரிய முறவின் றிரவினில் வெலை தலை.

தேவ

Table of contents

previous page start next page