ஜெபமாலை

வேதநாயக வேதசாஸ்திரியார்

ஜெபமாலை

1. காண்டம்

காப்பு

1. சீருயருந்திரி யேகபரன்றிரு
நாமவளஞ் சொலியே
தேவர்களெண்டிசை யோருமறிந்திட
நாவது கொண்டுரமாய்

நேருயருந்தவி தோதிவணங்கிய
நேர்மைய தின்படியே
நேயமுடன்செப மாலைமொழிந்திட
நீணிரை யந்தனிலே

போருயருங்கன பேய்கள்விழுந்துபொ
லாதகொ டுங்கனியே
பூருவமங்கதம் ஏவையருந்திய
தீதற வுந்தயவா

யேருயருங்குரு சேறிமடிந்திச
றேலையு வந்தருளும்
யேசுவையென்றனி னாவலடங்கவெ
நாளுமி றைஞ்சுவனே

2. வேலைவிடுத்திச றேலைநடத்திய
வேளைம கத்துவமாய்
மேகதறிக்கிடை யேறியமித்திரர்
வீழ்கவ ழித்துடனே

பாலைவிடுத்தடர் சோலைவனத்திடை
பாரம லைக்குவடே
பாதகமற்றிட வேதமளித்தப
ராபரன் மெய்ச்சுதனா

ரோலைவிடுத்துமுன் னூலைமுடித்துல
கோரையு யிர்க்கவுமே
யோகையுடைத் தவீதுபடைத்திரு
கோலைய டுத்துரமாய்

மாலைவிடுத்துநம் மாலையுதித்துரு
மாலையெ டுத்ததனான்
மாலைகொடுத்திட ஞானதிருச்செப
மாலைவ ழுத்துவனே

(எ-து)வேலைவிடுத்து = சமுத்திரத்தைப் பிரித்து; இசறேலை நடத்திய = இசறாவேலை நடத்திப்போன; வேளை மகத்துவமாய் = வேளை மேன்மையாய்; மேக தறிக்கிடை = மேகத் தூணிலே(யாத்.14:19,24); ஏறி அமித்திரர் = ஏறியிருந்து பகைவர்; வீழ்க வழித்துடனே = விழுந்தமிழ்ந்த வழித்துடனே; பாலை விடுத்து = பாலை நிலத்தைக் கடந்து; அடர் = நெருங்கிய; சோலை வனத்திடை = மரஞ் செறிந்த வனாந்திரத்தினடுவே; பார மலைக்குவடே = பாரமான மலையுச்சியிலே; பாதகமற்றிட = துரோமற்றுப்போக; வேதமளித்த = வேதங்கொடுத்த பராபரன்; மெய்ச்சுதனார் = பராபரனுடைய மெய்யான குமாரன்; ஓலை விடுத்து = கலியாண வோலையனுப்பி; முன்னூலை முடித்து = முந்தின ஞாயப் பிராணத்தை நிறைவேற்றி; உலகோரையுயிர்க்கவுமே = உலகத்தாரை யுயிர்ப்பிக்கதக்கதாக; ஓகையுடைத்த = களிப்புடைய; தவீது படைத்திரு = தாவீதிராசா கொண்டிருந்த இரண்டு; கோலையடுத்துரமாய் = செங்கோலையடுத்து ஊக்கமாய்; மாலை விடுத்து = இருளை நீக்கி; நம்மாலை யுதித்து = நம்முடைய நிமித்தியமாகப் பிறந்து, உருமாலை யெடுத்ததனால் = உருவங்கொண்டதனால்; மாலை கொடுத்திட = மணமாலை கொடுக்கத்தக்கதாக; ஞானத்திருச்செப = ஞானம்பொருந்திய திவிய செபமாகிய; மாலை வழுத்தவனே = மாலையைச் சொல்வேன் என்க

3. சீருற்றமணி பரமவெருசலேமணி யர்ச்சய
தேவதேவத் திருமணி
திரித்துவதத் துவமகத்துவவே கத்துவமணி
சிகாமணி மனோமயமணி

பாருற்றவரு வமணியுருவமணி யருபரூ
பாமணி பராபரமணி
பரிசுத்ததுத்திய வுத்தமசத்திய வேதமணி
பரமகிரு பாசனமணி

யேருற்றவேத நாயகன்மந்திரமணி சுந்தர
வேகாந்தமணி யம்மணி*
யெந்தைமணி தந்தைமணி விந்தையானந்தமணி
யிங்கணென்றன் கண்மணி

நேருற்றதேசுமணி மாசிலாமணி யரிய
நேசமணி யேசுநாத
நீதிமணியடியரின் பாவவினை தீர்த்தமணி
நித்தியசி வத்தின்மணியே

*அம்மணி=அழகானமணி

Table of contents

previous page start next page