ஜெபமாலை

வேதநாயக வேதசாஸ்திரியார்

15. ஜெபமாலை

பாவசங்கீர்த்தனகலம்

அஃது
பாவமன்னிப்புக்காகச் செய்யும் விபரமான செபம்

1. இரக்கமுந் தயவு முடைத்த தற்பரனே
இடும்பவக் குறைகளால் நிறைந்த
மருட்படு மேழைப் பாவியா னொடுக்க
வணக்கமும் பணிவுமா யுனது
திருச்சதுர்க் கிருபா சனத்திடை வீழ்ந்து
சிறியனைத் தாழ்த்திசெய் திறைஞ்சிப்
பெருக்கவிண் ணப்பம் புரிவதற் கீண்டு
பெயர்ந்தனன் கருணையா திபனே

ஈண்டு = இவ்விடம்

2. பாவநித் திரையி னிருவி சாரத்தால்
பாதகன் சிறைவுறாப் படிக்குத்
தேவரீ ருமது பரிசுத்தா வியினாற்
றிறத்திலென் றனைப்புடைத் தெழுப்பிக்
காவலாய் விழிக்கச் செய்தெனின் பாவங்
களைப் பரதாபமாஞ் சீரை
மேவியா னுணரத் தக்கபுத் தியதும்
வெளிச்சமும் அருளுமா திபனே

புடைத்தல் = அடித்தல்

3. எந்தையென் னுட்சீ ருடன்புறச் சீரை
இயைந்துனின் றிருவுரைப் படியே
சந்தத மனவஞ் சனைமிலா தடியேன்
சார்ந்துசோ தனைசெயு மிடத்தென்
சிந்தையு மனச்சாட் சியுமெனைக் குத்திச்
சிறுமையன் செய்தஎண் ணிறந்த
நிந்தையின் பவங்கள் அனைத்தையுந் தூண்டிக்
காட்டுது நீதியா திபனே

4. என்மனத் தினுமுள் ளிந்திரி யங்க
ளினும்பெரு மிதவசுத் தத்தின்
துன்னிய ஆசைஇச் சைகள்வ யிற்றின்
துக்கமுங் கவலையும் பொருண்மேல்
உன்னுமா வல்களும் பெருமையு நானென்
றோங்கிய எண்ணமே லெழுச்சி
மன்னிய உலகச் சித்தையாங் காரம்
வன்பமு மிகுத்ததா திபனே

பெருமிதம் = மிகுதி

5. எரிப்புடன் கோப மற்றுமுண் டான
துர்க்குணங் களுமிகுத் தெனக்குள்
இருக்குதிப் பாவ வூறலி னின்றே
எழும்புபற் பலகண்ணிச் சைகளும்
வெருட்டரும் அழுக்குப் பேச்சுக ளுமக்கு
விரோதமற் றவர்க்குமே யிடறல்
பெருத்தசே தமுஞ்செய் வார்த்தைகள் திரளாய்ப்
புறப்படு தும்பரா திபனே

வெருள் = மயக்கம்

6. கையினாற் காலால் மற்றவய வத்தாற்
கருதியான் செய்தபா தகங்கள்
ஐயை யோகணக்கி லடங்குமோ ஏரா
ளப்பிர வாகமா னதலோ
பையவந் தரங்கத் தினும்பல ரறியப்
பராசியத் தினுமியா னிழைத்த
வெய்யபா வங்கள் மறைக்கினு முமக்கு
விபரமாய்த் தெரியுமா திபனே

ஏராளப் பிரவாகம் = மிகுதி; வெய்யது = பொல்லாதது

7. எண்ணில டங்கா இப்பெருங் குறைகட்
கெனைநர காக்கினைக் குளராய்த்
திண்ணமாய்த் தீர்த்தூ ழியுங்கடு மையினிற்
றெண்டினை யிடநெறி யன்றோ
அண்ணலே அடியேன் அனீதிகண் மிகவே
ஆடின தன்றியிங் குமக்குப்
பண்ணவேண் டியஊ ழியம்வழிப் பாடு
பரிந்திலேன் கருணையா திபனே

8. உத்தம விசுவா சத்தினே சத்தில்
ஓங்கிய தேவபக் தியினில்
மெத்தவும் ஜெபத்தில் அசதியா யிருந்துன்
மேன்மையின் வாக்கதை வெகுவாய்ப்
புத்தியற் றசட்டை பண்ணினே னென்பாற்
போட்டவே லைகளும் கெடுத்துச்
சுத்தமா யுண்மைத் தாட்சிகள் பண்ணிச்
சோம்பலாய்த் திரிந்தனா திபனே

9. நாட்களை வீணிற் போக்கியென் மீட்பை
நாடிநற் கருத்துடன் றேடி
வெட்புட னடப்பித் தேனிலைப் பிறரை
மேவிய நேசம்ஈ விரக்கங்
காட்புறக் காட்டி னேனிலை யதனாற்
கனிகொடா விருட்சமா மென்னை
வாட்கொடு வெட்டி எரிதழற் கிடுதல்
வாய்மையே நீதியா திபனே

வேட்பு = விருப்பம்; காழ்ப்பு = காரம்

10. பரிசுத்த நீதி யுடைய கர்த்தாவே
பாவிஎன் கண்களா னின்னைத்
தெரிசித்தே றெடுக்கத் துணிந்திடே னடுங்கித்
தியங்கியென் மார்பினி லடித்துக்
கரிசித்த பரனே பாவியென் னுடனே
கனிந்துற வாகுமென் றிறைஞ்சி
வரிசித்த பெருமூச் செறிந்துகெஞ் சுகின்றேன்
மனம்பொறுங் கருணையா திபனே

11. கருத்தனே எனக்கு இரட்சக ராகக்
கட்டளை யிட்டநின் னொன்றாந்
திருச்சுதன் றனைக்கொண் டொப்புர வான
திவ்விய தந்தைநீ ரன்றோ
பெருத்தவென் குற்றங் களைக்கொடும் பாரப்
பெருஞ்சுமை களையு மிங்கவரே
யுறுத்துடன் றம்மே லேற்றெனின் பிணையென்
றொப்பினர் கருணையா திபனே

12. எனக்கெனப் பிணைப்பட் டெனக்குறத் தகுங்கோ
பாக்கினை களையெனக் கீடாய்
மனத்திட னுடன்பட் டுத்தரித் தென்மேல்
வரத்தகு முமதுகோ பத்தின்
கனத்தஉக் கிரத்தைத் தமதுபுற் கலனிற்
கடினமாய் அனுபவித் திறுதித்
தினத்தள வெனக்காய்த் துயரமுற் றிருந்தார்
திவ்விய கருணையா திபனே

புற்கலன் = ஆத்துமா; இறுதி = சாவு

13. செம்புனல் வேர்த்து மரணவஸ் தையதாய்த்
தியங்கினர் பினும்பிடி பட்டே
வம்பராற் கட்டுண் டனீதியாத் தீர்மா
னஞ்செயப் பட்டுமா நிந்தை
யும்பெருந் தூட ணங்களும் பொறுமை
யுடன்சகித் துவ்வியின் முட்கிரீ
டம்புனை யப்பட் டடிமிகப் பட்டா
னலமிகுங் கருணையா திபனே

செம்புனல் = இரத்தம்; உவ்வி = தலை

14. சிலுவையி லறைய ப்பட்டுவா னதற்குந்
திணைக்குமே நடுவினம் மணமாய்
மெலிவுறத் தொங்கிக் காயமைந் தடைந்து
வெள்ளமாய்க் குருதிகள் சிந்தித்
தலையுமே சாய்த்து மரணம தடைந்தித்
தகமையாய்த் தாசனை மீட்கும்
வலிமிகும் பொருட்டாற் றமதுசீ வனையு
மாய்த்தன்ன கருணையா திபனே

திணை = பூமி; குருதி = இரத்தம்

15. அங்கவர் பட்ட பாடுக ளனைத்தும்
அவர்திரு மரணமு நோக்கி
இங்கின மெனக்காய் அவருனின் வலது
பாரிசத் தினிலிருந் திறைஞ்சுஞ்
சங்கையின் மன்றாட் டுகளையுங் கேட்டென்
தப்பித மனைத்தையும் பொறுத்துப்
பங்கது பெறநின் பிள்ளையா யென்னைப்
பரிந்துகொள் கருணையா திபனே

16. எந்தயா பரனே துப்பிரு தயத்தை
எனக்குநீர் படைத்தெனி னிடத்தில்
உந்திய பாவ இச்சைகீழ்ப் படுத்தி
உன்றன்மே லுத்திபத் தியுமாஞ்
சிந்தையை யெனக்குத் தந்தரு ளினியான்
தீங்கினாற் சோதனைப் பட்டாற்
புந்திசம் மதிக்கா தகமெலாம் வெறுக்கும்
புலனருள் கருணையா திபனே

துப்பு = சுத்தம்; புந்தி = புத்தி; அகம் = பாவம்; புலன் = அறிவு

17. ஐயனீ தானே பவத்தின்வல் லமையை
அழித்துநிர்த் தூழிய தாக்கி
மெய்யெனின் மனச்சாட் சியதுகண் மணிபோல்
விளங்கயான் காப்பதற் குமது
துய்யநற் பரிசுத் தாவியா லேவித்
துலாம்பரத் தெனைப்பலப் படுத்தி
நொய்யுமென் பெலயீ னத்திலொத் தாசை
நூங்குவை கருணையா திபனே

நூங்குதல் = செலுத்தல்

18. வந்தெனக் குதவி யாகநின் றடியேன்
மயக்குற இடறிவீழ்ந் தேனால்
எந்தையே முழுதுந் தள்ளிவிட் டகற்றா
திரக்கமாய் அதட்டிநின் கிருபை
யுந்திய கரத்தாற் றூக்கிவிட் டுதவி
யுனதறி வினுங்கிரு பையினுஞ்
சந்தத மடியேன் வளர்ந்துவர்த் திக்கத்
தயைபுரி கருணையா திபனே

19. நிசவிசு வாசத் தினுஞ்சினே கத்தும்
நீடிவர்த் தித்தென்னாற் றுமத்தின்
உசிதவீ டேற்றத் தினைத்துரு வுதலின்
உத்தசா கிர்தையோ டிருக்க
விசையநீ யருளி என்னய லார்க்கு
மெத்தன வையுமெனின் பகைவர்க்
கிசைவுறப் பொறையுங் காட்டயே சுவின்மா
திரிக்கெனை இணைசெய்யா திபனே

உசிதம் = உத்தமம்; துருவல் = தேடல்;
விசையம் = வெற்றி

20. உபத்திரவம் வந்தால் முறுமுறுக் காமல்
உத்தரித் துச்சயித் துனது
சுபத்தயிக் கத்தை விட்டக லாமற்
றுணிவுறு தியதெனைப் படுத்தி
விபத்தையி லாற்றித் தேற்றியென் மரண
வேளையான் அறிந்திலா தாலே
செபத்திலெப் போதும் விழித்திருப் பதற்குத்
திடனருள் கருணையா திபனே

விபத்தை = துன்பம்

21. கலக்கமற் றெனதாற் றுமத்தையுன் கையில்
கையளித் திவ்வுல கத்தை
விலக்கமாய்ப் பிரிந்து மோட்சராச் சியத்தில்
மேவியான் வீற்றிருந் தங்கே
துலக்கநித் தியசீ வனைச்சுதந் தரிக்கத்
துணையெனக் கருளுதி யையா
இலக்கண வேத நாயகன் பாடும்
எந்தையே கருணையா திபனே

இஃது தரங்கன்பாடித் தென்மார்க்கு மிசியோனாரிமார் ஞானோபதேசக் குறிப்பிடத்தின்படி பாடினது.

ஜெபமாலை 15 வரை செய்யுள் 176

Table of contents

previous page start next page