1. உன்னதக் கிருபைமேவும்
உரிமைரட் சகனேஐயா
நின்னையென் விசுவாசக்கண்
ணோக்கியே நித்தநித்தம்
மன்னுநின் சிலுவைச்சாவின்
மாத்திரமென் ஈடேற்றத்தைத்
துன்னியான் இசைப்பதொன்றாம்
அவசரந் துணைசெய்தேவே
2. இந்தஒன் றதனின்றேமற்
றியாவுமுற் றூறியிங்கண்
உந்துமந் தோவிதொன்றென்
ஏகமும் உளதுமாகத்
தந்தருள் இதற்குநானுன்
றனைச்சிலுவை யின்மாறாமற்
சிந்தையின் விசுவாசக்கண்
தெளிவுற நோக்கத்தேவே
3. காலையான் எழுந்தபோதக்
கணத்திலுன் சிலுவைரூபம்
ஏலவென் கண்ணின்முன்னும்
இருதயத் தினிலுந்தீட்டிக்
கோலமுற் றிருக்கமற்றோர்
கொள்கையும் இதனையன்றிச்
சாலஅம் பரன்முன்செல்லாத்
தகமையே அருமைத்தேவே
4. ஆனதால் இன்றுநாளின்
அடியனான் எங்குற்றாலும்
ஈனமென் பவத்தைநீர்தான்
எப்படிக் குருசிற்றாங்கி
வானவனோ டென்றென்னை
மறுபடி யுறவுஞ்செய்து
தானுறுஞ் சகலகோபாக்
கினைக்குமென் றன்னைத்தேவே
5. தப்புவித் தனுக்கிரகித்த
தயவையா னினைந்துன்றன்னை
எப்பொழு தினுங்கண்ணோக்கி
இருப்பதற் கியற்றிமீண்டும்
அப்பனே யொன்றுமுன்றன்
சிலுவையின் அரியரூபச்
செப்பமென் கண்ணைவிட்டு
மாற்றிடாத் திடஞ்செய்தேவே
6. உன்னையென் பிசகாப்பார்வை
யுடன்கண்ணோக் குவனானிங்குன்
றன்னையே தவிரநீயோர்
தனையுமுன் சிலுவைச்சாமின்
வன்மர ணமுமேயன்றி
மற்றொன்றும் அறியேனாக
இந்நிலத்தி தேயென்சீவன்
எனவிருக் கச்செய்தேவே
7. நித்திய மெனக்கிதேமா
நேர்த்தியு மினிதுமாக
வைத்தெனி னிதையமும்மால்
வளர்சம்பூ ரணமாயென்வாய்
முற்றினும் அதனாற்றேங்கி
வழிந்திட முனைந்துன்அன்பே
பெற்றியான் றனிக்கும்போதென்
பேச்சிடுந் துணைநில்தேவே
8. நானய லுடன்செய்சம்பா
வினையு நின் னாமதோக்கித்
தானிருக் கச்செய்யுன்னைத்
தப்பியான் சிதறிவீழ்ந்தால்
ஈனமென் றதனையுன்பால்
இக்கண முறையீட்டிவ்வா
றானது முன்னைநோக்கத்
தடைசெய்வ தனைத்துந்தேவே
9. சருவசாக் கிருதையூகத்
தாற்றவிர்த் திடுவேனாக
உறுதியா யெனையெப்போதும்
உத்தம தவத்திலோங்கும்
நறுமைசேர் விசுவாசத்தின்
பாதையில் நடத்தியாள்வாய்
நிறைவுற எனதுகண்கள்
நிதந்துய ரத்திற்றேவே
10. என்றுரி தங்கண்ணுற்றீ
தென்பிணை யாளியான
உன்றனைச் சிலுவைச்சாலத்
தெப்படி யொடுக்கிற்றத்தன்
சென்றதன் மேலெத்தன்மை
சினந்தனர் அவையெக்காத்திரத்
துன்றரு வருப்பென்றுள்ளத்
தோற்றமாய்க் காணத்தேவே
சாலம்= மரம்
11. இங்கதால் அச்சமற்ற
நிருவிசா ரத்துக்கென்னை
அங்கிரு பையதாய்நீங்க
லாக்குமெத் தனையகோரத்
துங்குண பத்திரன்பாவத்
துக்குனைப் பழிதான்கொண்டார்
பங்கமொவ் வொன்றுமென்செம்
மறிப்பற ழுன்னைத்தேவே
பறழ்= குட்டி
12. உருகக்குத் திற்றதன்றோ
ஆனதா லொருங்கவற்றை
யருவருத் தறவிரோதித்
தகற்றிவிட் டோடியந்தப்
பொருதுசத் துருக்கள்தம்மோ
டெதிர்த்துப்போ ரிடச்செய்நானே
நிரந்தரம் விசுவாசத்தி
நிறைவொடிங் கும்மைத்தேவே
13. கெஞ்சிநின் றிடவுமென்றன்
கிளர்விசு வாசம்பற்றி
எஞ்சலற் றெரிந்துநானுத்
தமஇன லெய்திகத்திப்
பஞ்சரித் தழவுமென்றன்
செபம்விசு வாசம்பாதத்
தஞ்சல்பெற் றுண்மையுற்ற
தாயிருக்க வும்நான்றேவே
14. மாற்றிடாக் கண்ணாலுன்னை
மகிழ்ந்துபார்த் திருக்கப்பண்ணும்
போற்றிய செபங்கள்செய்யப்
போதிவிக் கின்றஆவி
ஏற்றதங் களுக்கெவ்வாறாய்க்
காயப்பட் டீரென்றுன்னை
வீற்றெழுஞ் சிலுவையிற்கண்
ணோக்குவர் மீதிற்றேவே
15. ஊற்றப்பட் டுதிரநீரும்
உன்னினின் றவர்கள்மீது
தேற்றப்பட் டுருகவோடுந்
தெளிவுகொண் டவர்கடம்மை
ஏற்றப்பட் டெழும்விசுவாசத்
தினிற்றிடத் திறத்தாரோக்கியத்
தாற்றப்பட் டுய்யசெய்வா
யருளிரட் சிப்பின்றேவே
16. சாவதற் கினமாஞ்சற்பக்
கடியையான் உணர்கின்றேனால்
தேவனே உனதுகாயங்
களிற்குண மாகச்செய்தென்
ஆவியுன் கிருபைப்பத்திரா
சனத்தின்முன் பாகவந்து
தாவிநிற் குநாள்மட்டும்
உன்னையென் றருமத்தேவே
17. சிலுவையில் உயர்த்தப்பட்டோ
ராகமா றாத்திருட்டி
வலிதுட னோக்கமாவே
னாகச்சாத் தான்வந்தென்றும்
பலனுறுங் குருசிலுன்னைப்
பார்த்தவண் ணத்தினிற்கா
தலைவுறத் தடைசெய்கின்ற
ததைத்தடுத் தருண்மெய்தேவே
18. கருத்தனே என்றன்வேண்டு
தலைக்கனி வாகக்கேட்டேன்
றிருட்டியை இருதயத்தைச்
சிலுவையில் ஒட்டிவைத்துப்
பெருத்ததூ ஷணத்தினாவி
பிரளயத் திருளுக்குள்ளாய்
வருத்தமுற் றழுத்தாவண்ணம்
காத்தருள் வலமைத்தேவே
19. தாசனான் சிலுவைமீதுன்
றன்சினே கத்தீகாண்கட்
டாசுற அதிலேயான்அந்
தகனென வினியல்காமற்
பாசமா யெனதுகண்க
டமைத்திறந் தெப்பேர்ப்பட்ட
நேசஏ வுதலுன்னெஞ்சம்
நின்றதென் றுணரத்தேவே
20. உத்தம தெளிவுண்டாக்கும்
உன்சிலு வையினேசத்தை
நித்தமென் வார்த்தைசெய்யும்
நெடுங்கிரி யையினுஞ்சிந்தித்
தத்தனே விசுவாசத்தின்
பெலத்தினால் அடியேனங்கே
முற்றினும் அமிழ்ந்திப்போகப்
பண்ணுவை முதன்மைத்தேவே
21. உன்றனா வியைக்கொண்டென்னுள்
ளத்தினிற் சினேகமூற்றி
வந்தனைச் சுத்தநேசம்
வதிட்டொடர் பையுமுண்டாக்கும்
என்றன்பா வந்தினாக்கி
னைகளைவா தைகளையேகன்
முந்துகோ பத்தைச்சாபத்
தையுமுனைந் தெனக்காய்த்தேவே
22. குருசினிற் சுமந்ததைக்கண்
கொண்டனு தினமும்பார்ப்பேன்
அருண்மிகுந் திருச்சமாதா
னத்தின்மா றாமலங்கே
பெருகியா னிலைத்துநின்று
பின்னுமவ் வழியிற்செல்கத்
திருவுளக் கிருபையாலே
பெலப்படு வதற்கென்றேவே
23. எக்கட மையிலுஞ்செய்யு
மியாவிலு மிதையங்கண்ணு
மிக்கவுன் சிலுவையொன்றை
மாத்திரம் விழித்துநிற்கத்
தக்கபா டுகளின்போராட்
டத்திலுஞ் சருவதாயுன்
முக்கியமா திரியைக்கண்ணோக்
கியுமுனைந் ததனிற்றேவே
24. பொறுமையாய் அமர்ந்துநின்றுன்
பூரணத் துணையைநம்பி
உறுதியா யிருக்கச்செய்யும்
ஒடுக்கமுன் சிலுவையொன்றை
இறுதிகா லத்திலேயுந்
தெரிசித்தென் ஏழையான
அறமெலி ழுற்றஆவி
யைமுசிப் பாற்றென்றேவே
25. சாவிலு நானன்றாகச்
சத்துவங்கொண் டழற்பாதாளத்
தோவிய பயத்துக்குந்தீங்
குபாதைக்கு நீங்கலாகித்
தேவச மாதானத்தாற்
செறிந்துவாழ்ந் திருக்கச்செய்தாள்
பாவல னெல்லைவேத
நாயகன் பாடுந்தேவே
ஜெபமாலை 28 வரை செய்யுள் 414
கவனிப்பு
இதற்கு முந்தின ஜெபமாலையாகிய ஞானஊஞ்சல் தேவ ஸ்துதியாயிருக்க, மனுஷன் கலியாணத்திலே பாடி மாப்பிள்ளையையும் பெண்ணையும் வைத்து ஊஞ்சலாட்டினதினிமித்தியம் நேபுகாத்நேச்சாருக்கொப்பாய் வேதநாயகசாஸ்திரியின் புத்தி சிதறிப்போகத்தக்கனையாக வந்த கொடிய ஆபத்து, இந்த 28 - ம் ஜெபமாலையாகிய சிலுவைத் தியானத்தினால் நிவாரணமாறிற்று.
அவன் சொற்பனங்களினாலும் திகிலினாலும் நிறையப்பட்டு, தன்வீட்டை விட்டுக் கல்லறைத் தோட்டத்துக்குச் சமீபமாய் சங்: தகப்பனார் சுவார்ச்சையர் வீட்டிலே குடியிருந்தபோது, தரங்கன்பாடி தின்மார்க்கு மந்திரி பிரகாசம் பிள்ளை தற்செயலாய் மூன்றுதரம் வந்து, இந்தச் சிலுவைத் தியானத்தைப் பாடச்சொல்லி வருந்திக்கொண்டு உரைகொடுத்தபடி பாடி முடித்தது.
அவர் முன்னாலே கிறிஸ்துவின் பிறப்பின் பேரிலும் பாடுகளின் பேரிலும் சில தியானங்களைக் கொடுத்துப் பாடச் சொன்னதுண்டு. என்றாலும், ஒருபோதும் அல்லாத வழக்கமாய் இந்தச் சிலுவைத் தியானத்தை இக்காலத்தில் பாடச்சொன்னது வேதநாயகசாஸ்திரி கண்ட சொற்பனங்களுக்கும், அடையாளங்களுக்கும் இத்தேசத்தில் சம்பவிக்க போகிற காரியங்களுக்கும் இது விசேஷித்த உதவியான எத்தனமாயிருக்குதென்று எண்ணவேண்டியிருக்குதொழிய மற்றபடியல்ல.
சிலுவைத்தியான உரை
சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவை மாறாக் கண்ணோக்கமாயிருப்பதே ஒன்றான அவசிய மென்பது
1.என் இரட்சகரே! எப்போதும் உம்மை விசுவாசக் கண்ணோக்கிறதும், உம்முடைய சிலுவையின் மரணத்தின் மேல் மாத்திரம் என் இரட்சிப்பைக் கட்டுகிறதும் ஒன்றான அவசரமாயிருக்கிறது, இந்த ஒன்றிலிருந்து மற்றெல்லாம் ஊறிவருகிறது. ஆ! இது ஒன்றே என் ஏகமும் சகலமுமாயிருப்பதாக.
2. ஆ! இதற்கென்று நான் உம்மைச் சிலுவையில் மாறாக் கண்ணோக்குதற்குதவும், தெளிவான விசுவாசக்கண் எனக்களியும். காலமே நான் எழுந்தவுடனே, உம்முட சிலுவையின் ரூபு என் கண் முன்னும் இருதயத்திலும் எழுதப்படுவதாக. ஏனெனில், அதன்றி மற்றொன்றும் பராபரன் முன் செல்லாதே.
3. ஆனதால், இன்றைக்கு நான் எங்கேயிருந்தாலும், ஆண்டவரே! நீர் எப்படி என் பாவத்தைச் சிலுவையில் சுமந்து என்னைப் பராபரனோடு ஒப்புரவாக்கினீர். அதனால், எல்லாக் கோபாக்கினைக்கும் நீங்கலாக்கினீர் என்பதை நினைத்துக் கொண்டு, உம்மை எப்போதும் கண்ணோக்க மாயிருக்கப்பண்ணும்.
4. ஒன்றும் உம்முடைய சிலுவையின் ரூபை என் கண்ணைவிட்டு மாற்றாமற் பண்ணும். ஆ! நான் உன்னை பிசகற்ற பார்வையாய்க் கண்ணோக்கிப்பேனாக. ஆ! நான் உம்மை தவிர, உம்மொருவரையும், உம்முடைய சிலுவையின் மரணத்தையும் விட வேறொன்றையும் அறியாதிருப்பேனாக. இதே என் சீவனாயிருக்கப்பண்ணும்.
5. ஆ! அது நாளுக்கு நாள் எனக்கு எப்போதும் நேர்த்தியும் இன்பமுமாயிருப்பதாக. என் இயேசு உம்மால் சம்பூரணமாகி, என் வாய் அதனால் வழிந்தோடுவதாக; நான் தனித்திருக்கும்போது, தேவரீர் என் பேச்சோடு துணையாயிரும் நான் மற்றவர்களுடன் பண்ணும் சம்பாஷனையும், உம்மை நோக்கியிருப்பதாக.
6. நான் உம்மை விட்டுச் சிதறினால் அதை உடனே உம்மிடத்தில் முறையிட்டு, அப்படிப்பட்டதுகளை அல்லது உம்மை நோக்கிப் பார்ப்பதற்கு எப்போதும் தடைப்படுத்துவதையெல்லாம் சருவகருத்தோடும் அகற்றிப்போடுவேனாக. ஆ! என்னை எப்போதும் தவசு விசுவாசத்தின் பாதையில் நடத்துவீராக.
7. ஆ! என் கண்கள் எப்போதும் துயரத்துடன் என் பாவங்களைக் கண்டுகொண்டு, அதுகள் என் பிணையாளியாகிய உம்மைச் சிலுவைமரத்தில் எப்படி ஒடுக்கிற்று, பராபரன் அதின் பேரில் எப்படிக் கோபமானார். அதுகள் எத்தனை அருவருப்புள்ளதென்று பார்ப்பதாக! அதனால் அச்சமற்ற நிருவிசாரத்துக் கென்னை நீங்கலாக்கும்.
8. எத்தனை பயங்கரமாயும்முடைய பராபரன் பாவத்துக்கு உம்மைப் பழிவாங்கினார். ஒவ்வொரு பாவமும் உம்மை, என் ஆட்டுக்குட்டியே, உருகக்குத்திற்று. ஆனதால் நான் அதையெல்லாம் நன்றாய்ப் பகைத்து, அருவருத்து, அதைவிட்டோடிப்போய், இந்தச் சத்துருக்களுக்கெதிரே எப்போதும் போர் செய்யப்பண்ணும்.
9. ஆனபடியினாலே நான் எப்போதும் உத்தம விசுவாச நிறைவோடு உம்மைக் கெஞ்சவும், என் விசுவாசம் பற்றி யெரிந்து நான் உத்தம அனலாய்க் கூப்பிடவும், என் செபமும், விசுவாசமும் உண்மையுள்ளதாயிருக்கவும், நான் மாறாக்கண்ணால் உம்மை நோக்கியிருக்கப் பண்ணும்.
10. செபம்பண்ணப்படிப்பிக்கும் ஆவி, நீர் தங்களுக்காக எப்படிக்காயப்பட்டீரென்று உம்மை உமது சிலுவையில் கண்ணோக்கும் பேர்கள் மீதில் ஊற்றப்பட்டு இரத்தமும் தண்ணீரும் உம்மிலிருந்து அவர்கள் மீதில் ஓடிவரும்; நீர் ஆதனால் அவர்களை வீசுவாசத்தில் நன்றாய் ஆரோக்கியமாக்குவீர்.
11. ஆகையால் என் இரட்சிப்பே! நான் சாவுக்கினமான சற்பத்தின் கடியை உணருகிறபடியினாலே என்னை உமது காயங்களினால் குணமாக்கும். ஆ! என் ஆவி உம்முடைய சிம்மாசனத்தின் முன்பாக வந்து நிற்கு மளவும் நான் உம்மைச் சிலுவையிலுயர்த்தப்பட்டவராய் மாறாக் கண்ணோக்கமாவேனாக.
12. சாத்தான் எப்போதும் நான் உம்மைச் சிலுவையில் பார்த்தவண்ணமாயிருக்கத் தடைபண்ணுகிறது. ஆ! அதைப் பெலனாய்த் தடுத்தருளும். ஆ! என் கர்த்தரே என் வேண்டுதலைக் கேட்டு என் கண்ணையும், இருதயத்தையும் உம்முடைய சிலுவையிலே மாத்திரம் தீட்டி வைத்துத் தூஷணத்தின் ஆவி, இருளை உட்படுத்தாமற்பண்ணும்.
13. ஆ! நான் சிலுவையில் உம்முடைய சிநேகத்தீயைப் பார்க்கட்டுமேன். ஆ! நான் அதில் இனி அந்தகனாயிருந்து விடாதிருக்கட்டுமேன். ஆ! நீர் என் கண்களைத் திறந்து எப்பேர்ப்பட்ட நேச ஏவுதல் உமது இருதயத்தில் உண்டாயிருந்ததென்று பார்க்கும்படி என்னை உத்தம தெளிவாக்கும்.
14. நான் சிலுவையின் நேசத்தை வார்த்தையிலும் கிரியையிலும் நினைத்து, விசுவாசப் பெலத்தினால் அதில் முற்றும் அமிழ்ந்திப் போகப்பண்ணும். ஆம் உமது ஆவியைக் கொண்டு சிநேகத்தை என் இருதயத்தில் ஊற்றி அதனால் சுத்த நேசத்தையும் பதில்சிநேகத்தையும் உண்டாக்கும்.
15. ஆ! தேவரீர், பாவத்தின் ஆக்கினையையும் வாதையையும் தெய்வ கோபத்தையும் சாபத்தையும் எனக்காகச் சிலுவையில் சுமந்ததை நான் எப்போதும் பார்ப்பேனாக. அதனால் நான் தெய்வ சமதானத்தில் மாறாமல் நிலைத்திருந்து சமாதானத்தின் வழியில் நடக்க அதனால் பெலப்படுவதற்காகத்தானே.
16. நான் செய்யும் யாவிலும் என் கடமையிலெல்லாம் என் கண்ணும், இருதயமும் உமது சிலுவையை மாத்திரம் நோக்கியிருக்கவும், பாடுகளின் போராட்டத்திலும் எப்போதும் உமது மாதிரியைக் கண்ணோக்கவும், அதில் நான் பொறுமையாய் அமர்ந்திருந்து உமது ஒத்தாசையை நம்பியிருக்கவும் செய்யும்.
17. கடைசியில் நான் உமது சிலுவையை என் மரணத்திலும் தரிசித்து என் மெலிந்த, ஏழை ஆவியை அதனால் முசிப்பாற்றி, நான் மரணத்திலும் நன்றாய்த் திடன்கொண்டு நரகபயத்துக்கும், உபாதிக்கும் நீங்கலாகித் தெய்வ சமாதானத்தால் நிறைந்திருக்கப்பண்ணும். ஆமென்.