ஜெபமாலை

வேதநாயக வேதசாஸ்திரியார்

2. ஜெபமாலை

தேவதோத்திரம்

விருத்தம்

அம்புவி யனைத்துந் தாங்கி யாண்டு காத்தளிக்கும் வல்ல
வும்பரும் பணிந்து போற்றும் ஒருவனை யுவமை யில்லா
நம்பர மனைநம் மேசு நாதனைத் திரு ரட்சிப்பின்
கொம்பினைத் தம்ப மென்று கும்பிடு கின்றே னானே(1)

சாத்திரத் திறமை யோனைச் சமஸ்தவல் லவனை யூதர்
கோத்திரத் தரசைத் தேவ குமாரனை யளவில் லாத
நேத்திரக் கிருபை யானை நித்திய பிதாவை மேலாஞ்
சூத்திர கிறிஸ்தை யாவைத் தோத்திரிக் கின்றே னானே(2)

கும்பிடுகி றேனான் கும்பிடுகிறே னெங்கள்
குருவேசு நாதர் பதங் கும்பிடுகிறேன்

1. அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் - எனை
யாண்டவனை மீண்டவனைக் கும்பிடுகிறேன்
நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் - பவ
நாசனைக் கிருபாசனைக் கும்பிடுகிறேன்
தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன் – நித்திய
சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்
உம்பர்தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் - தொனித்
தோசன்னா வோசன்னா வென்று கும்பிடுகிறேன் - கும்.

தோத்திரிக்கி றேனான் தோத்தரிக்கிறேன் தேவ
சுந்தரக் கிறிஸ்து வேந்தைத் தோத்திரிக்கிறேன்

2. சேத்திரத் தொரேயோவாவைத் தோத்தி - கன
திவ்வியதி ரித்துவத்தைத் தோத்திரிக்கிறேன்
பாத்திரமாக் கிக்கொண்டோனைத் தோத்திரிக்கி - உயர்
பரமண்ட லாதிபனைத் தோத்திரிக்கிறேன்
நேத்திரக் கிருபாநதியைத் தோத்திரிக்கிறேன் - சதா
நித்தியம கத்துவத்தைத் தோத்திரிக்கிறேன்
கோத்திரத் திசறாவேலைத் தோத்திரிக்கிறேன் - யூதர்
கொற்றவனைப் பெற்றவனைத் தோத்திரிக்கிறேன் - தோ

3. ஒருசரு வேசுரனைக் கும்பிடுகிறேன் - ஒன்றும்
ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்
திருவுரு வானவனைக் கும்பிடுகிறேன் - தவிது
சிம்மாச னாதிபனைக் கும்பிடுகிறேன்
குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் - யூதர்
குலகுல தேவதையைக் கும்பிடுகிறேன்
அருமையி ரட்சகனைக் கும்பிடுகிறேன் - என
தாற்றும நேசர்தனைக் கும்பிடுகிறேன் - கும்.

4. மனுவுரு வானவனைத் தோத்திரிக்கிறேன் - மோட்ச
வாசலைத் திறந்தவனைத் தோத்திரிக்கிறேன்
கனிவினை தீர்த்தவனைத் தோத்திரிக்கிறேன் - யூதர்
காவலனை யாவலுடன் தோத்திரிக்கிறேன்
அனைமனு மைந்தனையே தோத்திரிக்கிறேன் - மே
சையாவை மெய்யாகத் தோத்திரிக்கிறேன்
எனைஇ ரட்சித்தவனைத் தோத்திரிக்கிறேன் - கிறிஸ்
தேசுநச ராதிபனைத் தோத்திரிக்கிறேன் - தோத்.

5. சங்கையின் ராசாவைக் கும்பிடுகிறேன் - உயர்
சாலேமின் ராசாவைக் கும்பிடுகிறேன்
இங்கிதத் தவிதுவேந்தைக் கும்பிடுகிறேன் - சொந்த
விசறவே லாதிபனைக் கும்பிடுகிறேன்
மங்களங்கள் பாடிப்பாடிக் கும்பிடுகிறேன் - இம்
மானுவேலை வேலையாகக் கும்பிடுகிறேன்
பங்கமறப் பங்கமறக் கும்பிடுகிறேன் - ஞானப்
பத்தாவைக் கத்தாவைக் கும்பிடுகிறேன் – கும்

6. வித்தகனை யுத்தமனைத் தோத்திரிக்கிறேன் - கன
விற்பனனை யுற்பனனைத் தோத்திரிக்கிறேன்
நித்தியப்பி தாமகனைத் தோத்திரிக்கிறேன் - யேசு
நிச்சயனை யச்சயனைத் தோத்திரிக்கிறேன்
சத்தியவே தத்தொளிவைத் தோத்திரிக்கிறேன் - ஏசு
சக்கராதி பதிதனைத் தோத்திரிக்கிறேன்
துத்தியந் துத்தியமென்று தோத்திரிக்கிறேன் - சுப
சோபனங்கள் சொல்லிக்கொண்டு தோத்தி – தோத்

7. ஆச்சரிய மானவனைக் கும்பிடுகிறேன் - பர
மானந்த மெய்ச்சுடரைக் கும்பிடுகிறேன்
தீட்சைதந்து சேர்த்தவனைக் கும்பிடுகிறேன் - ஞானத்
திரவிய மீந்தவனைக் கும்பிடுகிறேன்
காட்சிதரும் பாதனைக் கும்பிடுகிறேன் - இரு
கண்ணிலுங் கண்ணானவனைக் கும்பிடுகிறேன்
சூட்சவழி காட்டினனைக் கும்பிடுகிறேன் - குருச்
சொன்னவனை முன்னவனைக் கும்பிடுகிறேன் - கும்

8. அண்டர்களி னாயகனைத் தோத்திரிக்கி. - அதற்
கப்புறத்தை யப்புறத்தைத் தோத்திரிக்கிறேன்
மண்டல மெலாமறியத் தோத்திரிக்கிறேன் - முழு
வானவரும் பார்த்துநிற்க தோத்திரிக்கிறேன்
தெண்டனிட்டுத் தெண்டனிட்டுத் தோத்திரிக்கிறேன் - மனச்
சிந்தையினால் விந்தையினால் தோத்திரிக்கிறேன்
தொண்டனடி யேனென்று தோத்திரிக்கிறேன் - என்றன்
துன்பமெல்லாந் தீருமென்று தோத்திரிக்கிறேன் - தோத்

9. பந்தமுறப் பட்டவனைக் கும்பிடுகிறேன் - கன
பாடுபட்ட வாண்டவனைக் கும்பிடுகிறேன்
நிந்தையுற்ற கத்தர்பதங் கும்பிடுகிறேன் - அன்று
நெடுங்குரு சேறினனைக் கும்பிடுகிறேன்
ஐந்துதிருக் காயனைக் கும்பிடுகிறேன் - எனக்
காகவுயிர் விட்டவனைக் கும்பிடுகிறேன்
சந்ததமுஞ் சந்ததமுங் கும்பிடுகிறேன் - நின்று
சாஷ்டாங்க தெண்டன்பண்ணிக் கும்பிடுகிறேன் - கும்

10. சாவழித் துயிர்த்தவனைத் தோத்தி. - பேயின்
தலையை மிதித்தவனைத் தோத்திரிக்கிறேன்
சீவனோ டெழுந்தவனைத் தோத்திரிக்கிறேன் - எங்கள்
தேவாதி தேவனைத் தோத்திரிக்கிறேன்
மேவிய பரப்பொருளைத் தோத்திரிக்கிறேன் - விண்ணின்
மேலெழுந் திருந்தவனைத் தோத்திரிக்கிறேன்
ஆவலுட னாவலுடன் தோத்திரிக்கிறேன் - நடு
வன்றிடும் ஞாயாதிபனைத் தோத்திரிக்கிறேன் - தோத்

11. காத்திரப் பராபரனைக் கும்பிடுகிறேன் - என்றன்
கண்மணியை விண்மணியைக் கும்பிடுகிறேன்
தோத்திரந் தோத்திரமென்று கும்பிடுகிறேன் - சுத்த
சுவிசேட போதகனைக் கும்பிடுகிறேன்
நாற்றிசையும் நோக்கிநின்று கும்பிடுகிறேன் - வேத
நாயகனின் பாட்டனைக் கும்பிடுகிறேன்
சாத்திர விதத்துடனே கும்பிடுகிறேன் - தவிது
சங்கீர்த் தனங்கள்சொல்லிக் கும்பிடுகிறேன் – கும்

ஜெபமாலை 2 வரை செய்யுள் 22

Table of contents

previous page start next page