ஜெபமாலை

வேதநாயக வேதசாஸ்திரியார்

24. ஜெபமாலை

கிறிஸ்துவின் சரித்திராதிந்தம்

கழிநெடில்

1. திருமறை மீறும் ஆதிமா னிடரின்
றீவினை தீரவன் றாதி
செப்பிய மொழியால் இஸ்திரி யிடத்திற்
பரிசுத்த ரூபியாற் செனித்துப்
பெருமை சேர்வானோர் நரரெலாம் வணங்கப்
பெத்தலே நகரிடை பிறந்து
பின்பதெட் டாநாள் விருத்தசே தனமும்
இரட்சகர் நாமமும் பெற்று
வருபனி ரெண்டாம் வயதினில் யூத
மார்களை வார்த்தையால் மடக்கி
வளருமுப் பதனிற் றீட்சையும் வாங்கி
வலியசோ தனையெலாஞ் செயித்துத்
தருமசத் தியத்தை நடந்து போதித்துச்
சாற்றரும் புதுமையாற் றிடத்துச்
சகலதீ வினையு மாறிடப் பாடு
படுந்தவ யேசுநா யகனே

ஆயத்தம்

2. நீடுறுந் தவத்தின் உருவதா யெழுந்த
நித்தியன் மனுடர்பா தகத்தால்
நெடுங்கொலைப் படுதற் காயத்தப் படுத்தி
நிச்சய முழுமன துடனே
தேடுபெத் தானி யாவினிற் குஷ்ட
ரோகச்சீ மோனகத் திருக்கச்
சேயிழை யொருத்தி விலையுயர் பரணித்
தயிலத்தைச் சிரத்தின்மேல் வார்த்துப்
பீடுட னபிஷே கித்தபின் சீடர்
பெரும்பதம் விளக்கிநின் கலையாற்
பின்னையுந் துடைத்துன் மனதினி விருந்த
பிரியமுந் தாழ்மையு முணர்த்தி
வீடுறு மெருசலே மினிற் சத்திர
விடுதியிற் பஸ்குவா ஆட்டை
விநமுடன் அப்போஸ் தலருடன் புசித்த
விமலனே யேசுநா யகனே

நற்கருணை

3. நம்முட நாதர் யேசுதாங் காட்டிக்
கொடுபட்ட அன்றிராத் திரியில்
நயத்துடன் அப்பத் தினையெடுத் தாசீர்
வதித்துநற் கரத்தினாற் பிட்டுத்
தம்முட சீஷாக் களுக்கதைக் கொடுத்துத்
தருமிதை வாங்கியிங் கருந்துந்
தானிதுங் களுக்காய்க் கொடுபடு மெனது
சரீரமென் றனைநினைப் பதற்காய்ச்
செம்மையாய்ச் செயுமென் றறைந்தவ்வா றுடனே
திரும்பவும் பாத்திர மெடுத்துத்
தேவனைத் துதித்தங் கவர்கள்கைக் கொடுத்துச்
சேர்ந்திதை அனைவருங் குடியும்
உண்மையா யுமது பாவம தகல
உமக்கெனச் சிந்தின எனது
உதிரமென் றனைநீர் நினைத்திடச் செயுமென்
றுறைத்தவா யேசுநா யகனே

ஆத்துமப்பாடு

4. காவினிற் புரிந்த அருங்கொடும் பவத்தாற்
காவினில் வியாழமன் றிரவிற்
கருத்தனும் பன்னோர் சீடரும் எழுந்து
கற்பனை அவர்களுக் கருளித்
தாவியங் கிருந்து செபஞ்செயு மெனவே
சாற்றிய பின்னர்வெற் பனையுந்
தருமயக் கோபுயோ வானையும் கூட்டித்
தமதுசஞ் சலத்தினாற் றயங்கி
மேவிய துயரால் வியாகுலம் அடைந்து
மிகத்திகைப் பாகிமெய் தளர்ந்து
மீண்டவர்க் கப்பாற் கல்லெறி தூரத்
தினில்முழங் காலினில் வீழ்ந்து
தேவனை மூன்று முறையிறைஞ் சிடவுந்
திருவுடல் உதிரவேர் வையதாய்த்
திகழுமாற் றுமப்பாட் டவஸ்தைபட் டொடுங்கச்
சித்தமாம் யேசுநா யகனே

பிடிபட்டது

5. பன்னிரு வரிலே ஒருவனாம் யூதாப்
பாவியுஞ் சேர்வையின் றிரளும்
பரிசெயர் வேத பாரசர் மூப்பர்
பகையினா சாரியர் சனமும்
மின்னிய தீபங் கத்தியா யுதங்கள்
தடியுடன் விரண்டெழு ந் தடர்ந்து
விமலனை முத்தி இடுங்குறிப் படியே
மேல்விழுந் தவர்தனைப் பிடித்து
மன்னிய கயிற்றால் இருகரம் பற்றி
வரிந்திறு கப்பிணித் துடனே
வஞ்சகன் அன்னா இடத்தினிற் கொடுபோய்
மறுபடி யூதர்சங் கத்தில்
உன்னிய காய்பா முன்புரப் படுத்தி
ஓடிய முரைத் துனை அடித்தங்
கோரிரா முழுது நிந்தனைப் படுத்த
உவந்தவா யேசுநா யகனே

பேதுரு மறுதலிப்பு

6. இப்பொழு தெனைநீ பின்செலா யெனவே
இயம்பிய பராபரன் மகனோ
டெதிரதாய் மரணம் அணுகினு மும்மோ
டெய்துவ னென்றபே துருவும்
ஒப்புடன் குளிர்காய்ந் திருக்கையி லொருத்தி
ஊன்றிபங் கவன்றனை நோக்கி
ஓய்நச ரேத்தூ ரேசுவோ டிருந்த
துண்டவன் சீடனென் றுரைக்க
அப்பொழு தவனா னலவுனின் மொழியும்
அம்மனு ஷனையுமொன் றறியேன்
ஆணைசத் தியமென் றிருமுறை சேவற்
கூவுமுன் அடர்ந்துமும் முறையாய்த்
தப்புடன் மறுத்த சீடனைத் திரும்பத்
தயவுடன் நோக்கஅங் கவனுஞ்
சாற்றிய மொழியை நினைத்தழு ததற்குந்
தயைசெய்த யேசுநா யகனே

பிரதான ஆசாரியன் வீட்டிற் பட்ட பாடுகள்

7. மாறிலா தவன்காய் பாவின்முன் மொழிந்த
மாற்றத்தி னால்வெகுண் டொருவன்
மனுமகன் றன்னைக் கன்னத்தில் அறைந்தான்
மனுச்சுவா பத்தினாற் றளர்ந்தான்
றூறதா யிருபொய்ச் சாட்சிகள் எம்பிச்
சுத்தன்மேற் படர்பல பிதற்றிச்
சொல்லவுங் கிறிஸ்து மவுனமுற் றிருக்கச்
சோதியின் குமாரனோ வென்று
சீறியே குருக்கள் கேட்டதற் கமலன்
செப்பின படியுநா னவர்தான்
திரும்பவு மேகசிம் மாசனத் தெழுந்து
திருநடு விடவரக் காண்பீர்
வீறெனப் பகர வஸ்திரங் கிழித்து
வெஞ்சினத் துடனிவன் சாக
விதியவன் றேவ தூஷணனென் றார்
மேசியா யேசுநா யகனே

8. அங்கவ ரிறையை அசங்கத மடித்தே
ஆகடி யங்களைப் பண்ணி
அருள்முகத் துமிந்து சிலதியர் முக்கா
டிட்டுமென் முகத்தினில் அறைந்து
பங்கமே படுத்திக் கிறிஸ்துவே யுன்னை
அடித்தவ னைப்பக ரென்றே
பகடிகள் பரிகா சங்கள்செய் தேசிப்
பலதுதூ ஷணங்களுஞ் சொல்லிக்
கங்குல்போய் விடிய ஆரியர் கூடிக்
களரியில் அவர்தனை நிறுத்திக்
கனமிகுங் கிறிஸ்து வோமென நீவிர்
கழறிய படியவ ரென்க
எங்களுக் கினிமேற் சாட்சிவேண் டுவதேன்
இவன்சொலக் கேட்டமென் றெழும்பி
இசைவுறக் கட்டிப் பிலாத்துவுக் களித்தார்
எம்பரா யேசுநா யகனே

யூதாவின் தீவினை

9. முத்தியாற் காட்டிக் குருவினைக் கொடுத்த
மூடனாங் கொடிய யூதாசு
முதல்வனைக் கட்டிப் பிலாத்தினுக் களித்த
முழுமர ணத்தின்தீர்ப் பறிந்து
மெத்தவுந் துயராய் முப்பது வெள்ளிக்
காசினை மீளவுங் கொணர்ந்து
வேதிய ரிடத்திற் குற்றமி லானை
விட்டதாற் பவஞ்செய்தே னென்றான்
மத்தர்க ளதற்கெங் களுக்கென நீயே
பாரென வலியஆ லயத்தில்
வாங்கின காசை எறிந்துபோய் நான்று
கொண்டபின் மறுத்ததை எடுத்துச்
செத்தஅன் னியரை அடக்கஞ்செய் வதற்காய்த்
தெரிசியாம் எரேமியா வெழுதுந்
திட்டமாய்க் குயவன் நிலைத்தினைத் கொண்டார்
திவ்விய யேசுநா யகனே

பிலத்துவின் வீட்டிற் பட்ட பாடுகள்

10. அந்தஆ ரியர்பஸ்க் காவினைத் தீட்டாக்
காப்படி புசிக்கஆஸ் தானத்
தணுகிடா திருக்க எம்முறைப் பாட்டை
அறையுமிம் மனுடனுக் கென்றே
பொந்தியப் பிலாத்தங் கடர்ந்துகேட் டதற்குப்
பூரியர் தீங்குசெய் யாட்டாற்
போர்ந்துனக் களியோம் என்றிட வுங்கள்
போதகப் படிநடு விடுமென்
றுந்திடக் கொல்வ தெமக்கடா தென்றே
ஒருவன்மேல் முறைபடத் தொடங்கி
ஒருங்குடன் சனத்தை இரண்டகம் பண்ண
உசுப்பிரா யருக்கிற தடுத்தான்
விந்தையென் றுரைக்கப் பிலாத்துனை அழைத்து
வேந்தனோ யூதருக் கென்க
விரைந்திதுன் சொலோமற் றவர்சொலோ வெனவே
வினவிய யேசுநா யகனே

11. யூதனோ யானுன் சனமெனக் களித்தார்
ஓதுநீ செய்ததே தென்க
உலகின்ராச் சியமென் னுடையதா னால்நான்
யூதர்கைப் படாதென்சே வகர்கள்
மோதுபோ ரிடுவா ரானதா லுலகின்
ராச்சிய மலவென மொழிய
முனிந்து நீராசா வோவெனக் கேட்க
முதல்வனு நானர சன்றான்
ஈதினாற் பிறந்தேன் சத்திய சாட்சி
இடவுல கத்தினில் வந்தேன்
இசைந்த சத்தியத்தி லானவ னெவனும்
என்மொழி கேட்பனென் றிசைக்க
ஓதுசத் தியமே தென்றுயூ தர்கள்முன்
ஓர்வினை யையுமிவ னிடங்கா
ணோமென அவர்கள் முறையிட மவுனம்
உற்றவா யேசுநா யகனே

எரோதேயின் நிஸ்காரம்

12. கலிலேயாத் துவக்கி இதுவரை யூதே
யாவெலாஞ் சனங்களைக் கலைத்துக்
காறுபா ரெரோதேக் கடுத்தவ னெனவே
கழறிட அவனிடம் விடுப்ப
வலியெரோ தேயும் வெகுதினங் காண்க
வாஞ்சையோ டிருந்தொரற் புதத்தை
வசனங்கள் பலதாற் செய்யெனக் கேட்டு
மறுமொழி வசனியா திருக்கத்
தொலைவிலா முறைப்பா டாரியர் பகரத்
தூஷணப் படுத்திவெண் கலையைச்
சுத்தனுக் குடுத்திப் பிலாத்திடத் தனுப்பத்
துவியரும் வங்கண மானார்
தலைவர்கும் புடனோர் குற்றமும் இவன்மேற்
சாரலை எரோதேயுங் காணான்
சவுக்கினால் அடித்து விடுவனென் றதிபன்
சாற்றினான் யேசுநா யகனே

பரபாவின் விடுதலை

13. பண்டிகை தோறுங் காவலிற் பட்ட
பகைஞரில் ஒருதனை விடுதல்
பழக்கமா னதனாற் கலாதியிற் கொலைசெய்
பழிமிகுங் கொடிய பேர்ப்பரபா
வண்டனை விடவோ கிறிஸ்துவை விடவோ
வழுத்துமென் றவைகளைக் கேட்க
மன்னவன் மனைவி இன்றுசொற் பனத்தில்
வருத்தமுற் றேனவன் வழியே
அண்டொணா தெனஆ ளிடஞ்சொலி யனுப்ப
ஆரியர் மொழிப்படி சனங்கள்
ஆண்டகை சாகக் கொலைஞனை விடுப்ப
தடவென விரைந்துகேட் டலட்டக்
கொண்டதோர் யூதர் அரசனைக் குருசிற்
கொலைசெயக் கொடுத்தவர் கேட்ட
கொலைப்பர பாவை விடுதலை செய்தான்
கோதிலா யேசுநா யகனே

பாடுகளின் கொடூரம்

14. பொந்தியுப் பிலாத்துத் தன்வச மாக்கிப்
புனிதனை வாரினால் அடித்தான்
பொரிந்தசே வகராஸ் தானத்திற் கொடுபோய்ப்
போரின்சேர் வையெலாங் கூட்டிச்
சொந்தவஸ் திரத்தைக் களைந்து மேற்சட்டை
சுழுஞ்சக லாத்தினை அணிந்து
சூழுமுண் முடியைச் சிரத்தினிற் றரித்துத்
துடித்தொரு கோல்கையிற் கொடுத்து
நிந்தைகள் பேசி யூதரின் அரசே
வாழ்கென நிகழ்த்தியமற் றுப்பி
நெடுந்தடி வாங்கிச் சிரத்தினில் அடித்து
நிலைமுழங் காலினி லிருந்து
விந்தையாய் வணங்கிக் கன்னத்தில் அறைந்து
வெளியிலிக் கோலமாய்க் கொணர
மீளவும் பிலாத்தி தோநர னெனவே
விளம்பினா னேசுநா யகனே

15. சிலுவையி லேற்றும் என்றுகும் பனைத்துஞ்
செப்பிய கூக்குரல் கேட்டுத்
தீவினை யொன்றும் இவனிடங் காணோந்
திடமெனப் பிலாத்தெதிர் பகர
வலியவெங் களுக்கோர் ஞாயமுண் டிறக்க
வானவன் மைந்தனே யென்றான்
மன்னனும் பயந்தாஸ் தானத்தில் மீண்டும்
வந்துநீ யாரெனக் கேட்கப்
பெலியதாம் புருவை மவுனமுற் றிருக்கப்
பேசிடா யோவுனை விடவும்
பெருமரத் திடவும் பெலனெனக் கிலையோ
வென்றபின் மேலிருந் தல்லால்
இலையின்மேலு னக்கோர் ஆண்மையிங் கதனால்
என்னையுன் கையளித் தவர்க்கே
இடுங்கொடும் பாவம் அதிகமுண் டென்றே
இயம்பினை யேசுநா யகனே

16. ஆரியர் பிலாத்தோ டிவன்றனை விடுத்தால்
ராயருக் கன்பனீ யலவிங்
காரெனுந் தன்னை அரசனாக் கிடில்ரா
யுனுக்கெதி ராகினா னென்க
வீரமாய்க் கிறிஸ்தை வெளிப் புறப்படுத்தி
மேன்பகத் தாவெனுந் தலத்தில்
மேவிய சிம்மா சனத்தெழுந் திருந்தான்
விடிந்தறு தாசுபோ லிருக்கப்
பாருமும் மரசன் இதோவென அகற்றும்
பணையினி லேற்றும்ரா யனுமே
பதியலால் வேறோர் பதியிலை யென்கவும்
பிலாத்து தன்னால் முடியாமல்
நீரினை எடுத்துச் சனங்கள்முன் கரத்தைக்
கழுவியே நீதவா னுதிரம்
நீங்களே பாரும் என்றுகை யளித்தான்
நெறிமிகும் யேசுநா யகனே

கொல்கதாவிற் பட்ட பாடுகள்

17. சேவக ரவரைத் தன்வச மாக்கிச்
செழுஞ்சக லாத்துடை களைந்து
திரும்பவும் அவரின் வஸ்திரம் உடுத்திச்
சிலுவையைத் தோளினிற் சுமத்திப்
பாவிகள் கொல்கதா வினிற்கொடு போகும்
பாதையிற் சிரேனேயூர்ச் சீமோன்
பற்றிடக் கண்டங் கவன்றனைப் பிடித்துப்
பணையினைச் சுமத்தியங் கேக
ஆவலாய்ப் பெண்கள் புலம்பி யொப்பாரி
அழுதவர் மேற்சொல அவரும்
ஆறுதல் பற்றிக் கொல்கதா மலையில்
அணுகிடப் போளமும் பித்துந்
தாவியே கலந்த காடியை கொடுத்துச்
சாற்றரும் பாதகர் நடுவே
தருமறைப் படியே சிலுவையில் அறைந்தார்
தயைமிகும் யேசுநா யகனே

சிலுவையின் பாடுகள்

18. யேசுவோ பிதாவே பொறுத்தரு ளவர்கட்
கேனெனிற் றாங்கள்செய் கிறதே
தென்றறி யாரென் றுரைத்தனர் பிலாத்தோ
இவரினாக் கினைமுகாந் தரத்தை
நாசரே னேசு யூதரின் அரசென்
றெபிரேயாக் கிரேக்கலத் தீனில்
நயத்துடன் வரைந்து சிலுவையி னுனியில்
நாயகன் சிரத்தின்மேல் வைத்தான்
மாசிலான் கலையைச் சேவகர் பகிர்ந்து
மகிழ்ந்துநாற் பங்குசெய் தவரின்
வலியமேற் சட்டை தையலி லாதால்
வரைந்தநேர் பீலிபோட் டெடுத்தார்
நேசனைப் பகைஞர் காத்திடச் சனங்கள்
நின்றனர் வேடிக்கைப் பார்த்து
நிறைந்தமூன் றாந்தா சானபின் குருசில்
நின்றவா யேசுநா யகனே

பரிகாச நிந்தைகள்

19. அவ்வழி நடக்குஞ் சனங்கள்தூ ஷணஞ்செய்
தவர்தலை துலுக்கியுஞ் சீதே
வாலயந் தகர்த்து மூன்றுநா ளதனில்
அமைப்பவ னேயுனைத் தானே
செவ்வையா யிரட்சி பரன்சுத னானாற்
சிலுவையி லிருந்திறங் கென்றார்
தேசிகர் வேத பாரகர் மூப்பர்
சிரித்தொரு தரைவிழித் தொருதர்
கவ்வையாய் மற்றோர் கலையிவன் காத்தான்
கனவிச றேலரின் அரசுங்
கடவுளாற் றெறிந்த கிறிஸ்துவு மானாற்
காணநாந் தன்னையே காத்தே
ஒவ்விய குருசி னின்றிறங் கட்டும்
ஒருவனின் மைந்தனென் றானே
ஓங்கியிங் கிவனை இரட்சித்து விடட்டென்
றுரைத்தனர் யேசுநா யகனே

கள்ளன் கதிப்பேறு

20. திட்டியே நகைத்துச் சேவகர் காடி
கொண்டுவந் தருகினிற் சேர்ந்து
தீமொழி மதற்ற இடதுபா ரிசத்தி
சிலுவையின் கள்ளனுஞ் சினக்கத்
தட்டியே மற்றோன் அவன்றனைக் கடிந்து
தக்கஇவ் வாக்கினைக் குள்ளாய்ச்
சார்ந்தும்அச் சயனுக் கஞ்சிடா யோநாஞ்
சரிவரச் செய்ததற் கீடாய்ப்
பட்டிட ஞாயம் இவரவ குணமோ
பண்ணலை என்றுபாத் துனையுன்
பரமராச் சியத்தில் வந்தபோ தெனைப்
பரிந்தருள் ஐயனே யென்றான்
மட்டில்லாத் திடமாய் என்னுட னின்றே
வானில்வந் திருப்பையென் றன்பாய்
வலதுபா ரிசத்தின் கள்ளனுக் குரைத்த
மாசிலா யேசுநா யகனே

மாதாவும் சீடனும்

21. அண்டியே சிலுவை அடியிமா தாவும்
அவள்தங்கை யாகியகி லேயோப்
பாமனை மரியாள் மகதலை மரியாள்
அழுதுநின் றிடவுநீ அப்போ
கண்டுநே சித்த சீடனைக் காட்டிக்
காரிகை உன்மக னென்றுங்
கருதியன் மாதா வென்றுசீ டனுக்குங்
கட்டளை யிட்டனை யாறு
கொண்டுதா சொன்பத ளவுல கெங்கும்
கொடுமிருள் சூழ்ந்தொளி மறையக்
கூறியே யேலி ஏலிலா மாசபத்
தானியா வென்றுகூப் பிட்டே
விண்டதென் பரனே என்பர னேகை
விட்டதே தெனையுநீ யென்க
விரைந்தெலி யாவை அழைக்கிறா னென்றார்
விகடமா யேசுநா யகனே

மரணம்

22. அப்புற மியாவு முகிந்ததென் றறிந்தே
அருந்தகை யுண்டென வெழுதி
அறைந்தது நிறைவே றிடப்புகன் றாயந்
நேரமோர் சேவக னோடிச்
சிப்பிசேர் கடற்கா ளான்றனை எடுத்துச்
சென்றுமுன் காடியா னிரப்பிச்
செடியெனும் ஈசோப் புடனதை சேர்த்துத்
திகிரியின் கோல்மிசை பூட்டித்
தப்பிலான் றனக்குக் குடித்திடக் கொடுக்கச்
சனங்களோ பொறுஎலி யாத்தான்
தனித்திவன் றன்னை இரக்கிரட் சிக்கச்
சார்வனோ பார்ப்பமென் றமர்த்தக்
கைப்புறு காடி கொண்டபின் முகுந்த
தென்றுமா சத்தமே காட்டிக்
கந்தனைச் சாய்த்துன் ஆவிவிட் டிறந்த
கடவுளே யேசுநா யகனே

புதுமை

23. திடீரெனத் தேவா லயத்திரை கிழிந்து
திடமுள பூமியும் அதிர்ந்து
சிலைமலை பிளந்து கல்லறை திறந்து
செத்தவர்ச் செயர்களும் எழுந்து
வடிவுடன் கிறிஸ்தங் குயிர்த்தபின் எருச
லேமினில் வந்துகாண் பிக்க
வயங்கின தனைத்துஞ் செர்வைகா ரனுங்காத்
திருந்தமற் றவர்களுங் கண்டு
துடியதாய்ப் பயந்து கடவுளின் மகிமை
சொல்லிமெய் யாகவிம் மனிதன்
சுத்தனும் பரம சுதனுமே என்றார்
சூழ்ந்தவர் தங்கள்மார் புகளிற்
படீரென அடித்துத் திரும்பினர் சகல
பழக்கமா னவர்களுங் கலிலேப்
பதியின்மா தர்களுந் தூரநின் றழுது
பார்த்தனர் யேசுநா யகனே

கம் = தலை; வயங்கின = நடந்த

விலாக் காயம்

24. பாதக யூதர் சிலுவையில் அறையப்
பட்டவர் உடல்களோ தொங்கப்
படாதுசா பதிலென் றதிபனுக் கறைந்து
பதறிடச் சேவகர் வந்து
தீதுசெய் கள்ளர் இருவரின் கணைக்கால்
எலும்பினைச் சிதைவுற முறித்தார்
தேவனோ முதலே மரித்ததால் அவர்பாற்
சேரலை யாகிலும் ஒருவன்
கோதுடன் ஈட்டி யால்விலா வதனைக்
குத்தினான் உதிரமுஞ் சலமுங்
குபீரெனப் பொங்கக் கண்டவன் சாட்சி
கூறினான் அஸ்தமா னத்தில்
நீதிசேர் அறிமத்தி யாவின்யோ சேப்பு
நேயனின் சடமதை இறக்க
நிருபனாம் பிலாத்தின் விடையது வாங்கி
நீங்கினான் யேசுநா யகனே

அடக்கம்

25. நீங்கியோ சேப்போர் பிடவையுங் கொண்டு
நேடியன் றிரவினில் வந்த
நீக்கோதே முந்தா னூறுறாத் தல்போல்
நிறுத்தவெண் கரியபோ ளத்தை
வாங்கிவந் துடனே இருவருங் கூடி
மனுமகன் சடந்தனை இறக்கி
வள்ளிய பிடவை யாலதைச் சுற்றி
வாசவர்க் கங்களைத் திமிர்ந்து
தீங்குசெய் கொல்க தாமலை அதில்யோ
சேப்பமுன் வெட்டிவைத் திருந்த
தெளிவுள்ள புதுக்கல் லறையில்வைத் ததின்வாய்
திரண்டதோர் பெரியகற் புரட்டிப்
பாங்குடன் வைத்தே கினரதைப் பெண்கள்
பார்த்துநின் றெழமறைப் படியே
பலதுவே லைகளும் ஒழிந்திருந் தார்சா
பத்துநாள் யேசுநா யகனே

வள்ளிய பிடவை = துய்ய வஸ்திரம்

கல்லறைக் காவல்

26. துட்டராங் குருக்கள் பினும்பிலாத் திடப்போய்த்
துடியதாய் மூன்றுநா ளடவிற்
றுலங்கிட வுயிர்ப்பே னென்றவ்வெத் தனுமே
சொன்னதை நினைக்கிறோம் அதனாற்
கட்டியே யவன்கல் லறையதைக் காக்கக்
கற்பியும் அல்லவென் றாலோ
கங்குலில் அவன்சீ டாக்கள்வந் தவனைக்
களவுசெய் தேகியே சனத்தைத்
தெட்டியே மரித்தோ ரிடத்திருந் தெழுந்தான்
திறமெனச் செப்புவர் அப்போ
செய்கும்எத் ததுமுந் தினதிலும் கொடிதாய்த்
தீருமென் றிடப்பிலாத் தவர்க்குப்
பொட்டணப் போய்நீர் அறிந்தநேர் காவற்
புரியுமென் றிடவும்உக் களமே
போட்டிசை வாய்க்கல் லறையின்முத் திரையும்
போட்டனர் யேசுநா யகனே

உக்களம்=இராக்காவல்

உயிர்த்தல்

27. வண்மையிவ் விதமாய் பாடுறக் குருசின்
மரித்தடக் குண்டமூன் றாநாள்
மகிமையா யெழுந்து நாற்பது நாளாய்
மண்டலத் திருந்துமா தவருக்
குண்மையாய்ப் பத்து விசைபல விடத்தில்
உயர்தரி சனையது நல்கி
ஓங்கிய வேத நூல்களை யுணர்த்தி
உச்சிதப் புதுமையுங் காட்டி
வெண்முகி லதனில் எழுந்துவா னவன்பால்
மேவிவீத் திருந்துபத் தாநாள்
வித்தகப் பரிசுத் தாவியைச் சீடர்
மேலுற அனுப்பிமீண் டினியுந்
திண்மைசேர் பெலத்தாற் கடையுக மதனில்
திரும்பவந் தவரவர் செய்த
செயற்படி தீர்வை இடச்செயும் பரம
திரித்துவ யேசுநா யகனே

நடுத் தீர்வை

28. வல்லமை யாய்மே காசனத் தெழுந்து
வானவர் படையெலாஞ் சூழ்க
வலியஎக் காளத் ததிரொலி யதனால்
மரித்தயா வர்களையும் எழுப்பித்
தொல்லுல கதனிற் சீவனோ டிருக்குந்
தொகையிலாப் பெயரையுங் கூட்டித்
தூதரை விடுத்தா காயமண்ட லத்திற்
றொகுத்திரு வகுப்பையுஞ் சேர்த்து
நல்லவர் களைத்தம் வலதுபா ரிசத்தில்
நாட்டிவா னிராச்சியம் அளித்து
நலிவுறும் பாவிக ளையிடத் துய்த்து
நரகபா தாளமே வீழ்த்தி
எல்லையில் லாதம கத்துவ நவப்பு
தெருசலேம் பட்டணத் தெழுந்தென்
றூழியும் வேத நாயகன் பாட
இன்புறும் யேசுநா யகனே

ஜெபமாலை 24 வரை செய்யுள் 352

Table of contents

previous page start next page