ஜெபமாலை

வேதநாயக வேதசாஸ்திரியார்

20. ஜெபமாலை

வீண்பத்திநாசம்

கழிநெடில்

1. மாசிலா மனத்தாய் ராசவிற் பனத்தாய்
மகிமையின் கிருபையா சனத்தாய்
வலியமா சனத்தாய் பெலிசெய்போ சனத்தாய்
மட்டிலா வலமைசேர் கனத்தாய்
தேசுறுந் திரத்தாய் பேசரும் பரத்தாய்
திரித்துவ ஏகதத் துவத்தாய்
செய்யசுந் தரத்தாய் துய்யமந் திரத்தாய்
திடவரத் தாய்திரு வுரத்தாய்
பாசமே யுதித்தாய் நேசமே கதித்தாய்
பரமசத் துவமகத் துவத்தாய்
பாததோத் திரத்தாய் வேதசாத் திரத்தாய்
பாத்தியன் கோத்திரநேத் திரத்தாய்
ஏசறப் படைத்தாய் ஆசறத் துடைத்தாய்
எரிநர கக்கத வடைத்தாய்
என்னுரு வெடுத்தாய் பொன்னகர் கொடுத்தாய்
எந்தையே யேசுநா யகனே

2. கல்லதைச் செம்பை வெள்ளியைப் பொன்னைக்
கடவுளென் றடிதொழ மாட்டேன்
களிமண்ணால் மிதியிட் டுருவெனக் குயவன்
காட்டிய கோலமுங் கருதேன்
வல்லிரும் புருக்கால் வெண்கலத் தகட்டால்
மற்றுள பஞ்சலோ கத்தால்
வார்த்ததும் அடித்து வைத்தது மான
வன்சிலை களையெலா மதியேன்
செல்லரிக் காத மரத்தினைத் தெரிந்து
சித்திர வேலைக டீர்ந்த
சிறந்தபொம் மைகள்பற் பலபடங் களையுஞ்
சிந்தையிற் கனவிலு நினையேன்
எல்லையில் லாவெவ்வி தங்களா யினமும்
இருத்திய சுருபங்க ளனைத்தும்
எனக்கினி யாகா துனக்கியான் அடிமை
எந்தையே யேசுநா யகனே

3. வாயிருந் தாலும் பேசிடா தூமை
வலியகண் ணிருந்துநோக் காது
வன்குகுட தற்குச் செவியிருந் தாலும்
வார்த்தைகேட் டறிந்துகொ ள்ளாது
காயமோ டிருகை உண்டெனுந்தொ டாது
காலிருக் கினுநட வாது
கடியமூக் கிருந்து முகர்ந்திடா ததனின்
கண்டமும் ஓசைகாட் டாது
தீயினிற் போட்டால் எரிந்துபோம் வைது
திட்டியும் பொறுமையா யிருக்குஞ்
செத்ததோர் பிணம்போல் வைத்திடங் கிடக்குந்
திருடன்வந் தெடுக்கினு மெடுப்பான்
நீயெனை விடுவி என்றறி வழிந்து
நீசவச் சிலைகளைப் பணியேன்
நின்னையே பணிவேன் என்னையாண் டருள்வாய்
நித்தனே யேசுநா யகனே

கதித்தல் = மிகுத்தல்; சத்துவம் = வலி; வெவ்விதம் = வேறு வேறு விதம்

4. குஞ்சினைத் திருடும் பருந்ததோ கருடன்
குலைக்குநாய் வயிரவ னூர்தி
குரங்கதோ அனுமார் பன்றியு மீனுங்
கூர்மமும் விஷ்டுணு வடிவந்
துஞ்சிடக் கடிக்கும் பாம்பதோ நாக
சுவாமிவிக் கினேசுரன் யானை
தோகையும் அனமுங் காகமுங் கிளியுந்
தூக்கிய தேவர்வா கனங்கள்
அஞ்சியே வளையிற் புகும்பெருச் சாளி
யானையைத் தூக்குமோ ஐயோ
ஆலிலை பதினா றாயிரம் பெண்கள்
அணைந்தவன் றனையெடுப் பதுவோ
வெஞ்சின மாடு நந்திகே சுரனோ
விபூதியும் அதினுட சாணி
வீணிழ வெனவே தோணினே னிதெலாம்
வேதனே யேசுநா யகனே

ஊர்தி = வாகனம்; கூர்மம் = ஆமை; தோகை = மயில்;
நந்திகேசுரன் = இடபவிக்கிரகம்

5. சூரியன் வடிவோ சந்திர னுடுவோ
தொகையிலா வான்பற வைகளோ
துன்னிய காற்றோ வன்னியோ முகிலோ
தோன்றிய பூமியோ மண்ணோ
பாரினி லூர்குஞ் சீவனோ செந்தோ
பற்பல நாலுகால் விலங்கோ
பசும்புலோ செடியோ அனந்ததா பரமோ
பயோததி நீந்துசங் கினமோ
ஏரியோ குளமோ ஆறதோ நதியோ
எண்ணிலா மலைகளோ சுனையோ
இடங்களோ விசேஷ தலங்களோ கோடி
இத்தனை இழவுமல் லாமற்
காரிய மெனவே நரகலை நீரைக்
கலந்த பெண்குறி யோடாண் குறியைக்
கடவுளென் றிருந்த மடையனா னையா
கருணைசெய் யேசுநா யகனே

உடு = விண்மீன்; வன்னி = தீ; முகில் = மேகம்; செந்து = உயிர்ப் பிராணி; தாபரம் = மரம்; பயோததி = சமுத்திரம்; சுனை = நீருற்று; நரகல் = மலம்

6. புல்லது தெய்வம் ஆகினால் மாடு
புசிப்பதற் கியலுமோ அலது
போற்றிய மாடு தெய்வமே யானாற்
புலையன் எப்படி அதைப்பு சிப்பான்
அல்லது மாட்டின் சாணியுந் தெய்வம்
ஆகினால் அடுப்பினி லெரிப்ப
ததமலோ அதனைச் சாம்பல தாக்க
அக்கினிக் குப்பெல னுளதோ
வல்லஅக் கினியும் பகவனே யானால்
மழையினால் அழிந்துபோ வாரோ
வருணமும் பகவ னாகினால் அதிலே
வாய்கைகால் கழுவவும் படுமோ
கல்விகற் றறிந்த நல்லவ ரிதனைக்
கண்டறி யார்களோ கண்டாற்
கதிதரு முனைவிட் டநீதவீண் பொருளைக்
கைதொழார் யேசுநா யகனே

7. ஊரினிற் பெயர்கொண் டிருந்துசெத் தவர்க்கும்
உளவுபோய் மடிந்தகா முகர்க்கும்
உயிர்விட வலிய நான்றுகொண் டவர்க்கும்
உகந்துதீய்ப் பாய்ந்தநீ லிகட்கும்
பாரினிற் கணவன் றனக்கடங் காமற்
பதைத்திட நஞ்சினைத் தின்றும்
படுங்கயத் தினிலும் ஆற்றினும் வீழ்கப்
பைசாசுரு வானபா விகட்கும்
போரினிற் படையிற் பட்டவீ ரருக்கும்
புராதனத் திருந்தமன் னவர்க்கும்
புலையர் சக்கிலியர் குறவர்க ளீனப்
புதரையர் கழுவிலே றிகட்குந்
தேரினுங் கோவிற் புறத்தினு நடக்குந்
தெருவினுஞ் சிலையடித் திருத்தித்
தேவனென் றிருந்த பாவியா னினியுன்
திருவுளம் யேசுநா யகனே

உளவு = வேவு; கயம் = குளம்

8. அரிசிவன் பிரம னைங்கர னாறு
முகன்சதா சிவன்மயே சுரனோ
டையனார் வீர பத்திர னிருளன்
அனுமந்தன் காலசங் காரன்
பொருதடி மாடன் கருப்பண னிடும்பன்
புத்தனார் காத்தவ ராயன்
பொம்மன்றொட் டியச்சின் னுடன்சக் கதேவி
பொன்னியங் காளிகங் காளி
பெரியமா காளி ரணபத்திர காளி
பேச்சிசா முண்டியுத் தண்டி
பில்லிவாய்க் குறளி ஏகரி வீரி
பிடாரிகாட் டேரிதூத் தேரி
எரிதழன் மாரி வராகியோங் காரி
எமகண்டி சாமளை துற்கை
இன்னமு மனந்தம் பேய்களைப் பணிந்த
ஏழைநான் யேசுநா யகனே

ஐங்கரன்=விநா யகன்

9. கள்ளுடன் சாரா யங்களைப் படைத்துக்
கடாக்களை ரணபெலி கொடுத்துக்
கனக்கமா டாடுகள் சேவல்கள் அடித்துக்
கடலின்மீன் வகைகளும் பொரித்துப்
பிள்ளையார்க் கேற்ற தோசைகள் வடைகள்
பிட்டுகள் வட்டதி ரசங்கள்
பெலத்தமோ தகங்கள் அவற்பொரி யுண்டை
பெரும்பணி யங்களிட் டெலிகள்
எள்ளுடன் பயறு கிழங்குகள் பழங்கள்
இனியபச் சரிசிதேங் காய்கள்
எண்ணெய்யோ நெய்யோ பால்களோ தயிரோ
எத்தனை விதங்களோ செய்துந்
தள்ளிநீ போடா குறைகளுண் டெனவே
சடுத்தமிட் டலறிநொந் திருக்குஞ்
சத்துரு பேயை முற்றினும் விட்டேன்
தயவுசெய் யேசுநா யகனே

10. காவடி சுமந்து தோளெலாந் தடித்துக்
கடும்பய ணங்களை நடந்து
கழுத்தினில் அரிகண்ட ங்களைப் போட்டுக்
கயிறுகள் செடில்குத் தியாடிக்
கூவியே தீயிற் குதித்துக்கொக் கரித்துக்
கொடியபந் தங்களாற் சுட்டுக்
கொண்டுகூத் தாடி உடம்பெலாங் கீறிக்
கோணியே வலித்துமா ரடித்து
யாவரு மறியத் தலையையுஞ் சிரைத்து
நடைவிளக் கேற்றியே தோளின்
நடுவினிற் சுட்டுச் செருப்பதிட் டடிக்க
ராமரா மாவெனக் கத்தி
மேவியங் கப்பிர தட்சண முருண்டு
விரதங்கள் நோன்புகள் பிடத்தும்
மெய்ப்பலன் காணா தப்பனே யடைந்தேன்
வினைதவிர் யேசுநா யகனே

11. வஞ்சகப் பாப்பான் றொட்டிய னாண்டி
வள்ளுவன் மற்றுள பேயர்
வழுத்திய குறிகோ டங்கிகள் கேட்டு
வாரமும் யோகமுந் தெரிந்து
சஞ்சல முறாதென் றெண்ணிமைந் தருக்குச்
சாதகம் எழுதிநாட் கணித்துத்
தக்கதோர் இராசிப் பலன்களும் பிரித்துச்
சடங்குகள் விதவிதஞ் செய்து
நெஞ்சினிற் பல்லி கத்தினும் அஞ்சி
நிமித்தமும் பொருத்தமுங் கண்டு
நெடுகிலும் வீண்சாத் திரங்களைப் பார்த்து
நிலையிலாப் பொய்களை நம்பிப்
பஞ்சமா பாவிக ளைக்குரு வென்று
பாழிலே பொருளெலாந் தோற்றுப்
பரதவித் துன்றன் சரணம்வந் தடைந்தேன்
பட்சம்வை யேசுநா யகனே

12. பிறந்தநாண் முதலாய்ச் சாகுநா ளளவும்
பிராமணர் பிதற்றிய பொய்யைப்
பிரியமாய்க் கேட்டுச் சுவாமியென் றவரைப்
பிசகற நம்பிவீழ்ந் திறைஞ்சிச்
சிறந்ததோர் கலியா ணங்களில் ருதுசாந்
தியங்களிற் சிறுவர்கள் பிறந்த
தினங்களிற் றிருநாட் களிற்பிதிர் இறந்த
திதிகளில் நன்மைதுன் மைகளில்
அறைந்தவர் சொன்ன படிக்கெல்லாங் கொடுத்தா
லயங்கள்சத் திரங்கள்சா வடிகள்
அனைத்தினும் அவரே முதன்மையாய் மறுமைக்
கவர்கையில் உண்டிகை பெற்றால்
இறந்தபின் பற்றிக் கொள்ளலா மெனவே
ஏய்த்ததாற் பேய்த்தன மாக
எண்ணிலாத் தானம் பண்ணியும் பலனொன்
றெய்தலை யேசுநா யகனே

13. தாடிகள் சடைகள் வளர்த்துருத் திராட்சத்
தாவடம் பலபல தரித்துத்
தண்டுடன் கமண்ட லங்களுங் கொண்டு
சாம்பலும் வீம்பதாய்ப் பூசி
ஆடிய மயிற்றோ கையது டன்காவி
ஆடையும் அயிணமுங் குறடும்
அங்கமாய்க் கொண்டு கவசகுண் டலமிட்
டரகரா வென்றுகூப் பிட்டு
காடுகள் மலைகள் கெபிகளிற் புகுந்து
கந்தமூ லங்களைப் பொசித்துக்
காயசித் தியதற் குடலையும் ஒறுத்துக்
கடுந்தவங் களையெலாம் புரிந்து
வாடியே யோகத் திருந்துமூச் சடக்கி
மவுனசா தனைகளுஞ் செய்தும்
வஸ்துவி னிலைகாண் பதற்கரி தெனவே
வந்தனன் யேசுநா யகனே

தண்டு = தண்டாயுதம்; கமண்டலம் = கெண்டி;
காவியாடை= காவி வஸ்திரம்; ஐணம் = மான்றோல்;
கவசகுண்டலம் = இருப்பு முதலியவற்றால் இயற்றிய கவசம்;
கந்தமூலம் = கிழங்கு

14. வானமும் புவியும் அனைத்தையும் படைத்த
மட்டிலாச் சருவவல் லபத்தின்
மகத்துவ தேவன் செகத்தினி லீனர்
வகுத்தமே னியில்இருப் பானோ
தானதா யிருந்தோன் ஒருவனோ ரண்டோ
சாற்றுவீர் சாத்திரி மாரே
சத்தியந் தப்பி அவரவர்க் கேற்ற
சாமிகள் செய்யவுந் தகுமோ
ஞானமுள் ளவர்கள் இல்லையோ நீதி
நடுவிலாத் தேசமோ கோகோ
நம்முட கையாற் சமைத்தவிக் கிரகம்
நமக்குநற் பதவியைத் தருமோ
ஏனிதைச் செய்தீர் பாதக மலவோ
இடர்வரும் பதனமென் றுரைக்க
என்றனை யிகழ்ந்தார் உன்றனை யடைந்தேன்
இரட்சியும் யேசுநா யகனே

15. ஆதிநா யகனே சோதிநா யகனே
அனந்தபே ரின்பநா யகனே
அரியநா யகனே பெரியநா யகனே
அர்ச்சய தேவநா யகனே
ஓதிநா யகனே நீதிநா யகனே
ஒப்பிலாப் பரமநா யகனே
உரிமைநா யகனே அருமைநா யகனே
உன்னத ஞானநா யகனே
போதநா யகனே நாதநா யகனே
புண்ணிய சொரூபநா யகனே
பொறுமைநா யகனே சருவநா யகனே
போற்றருங் கிருபைநா யகனே
வேதநா யகனே வேதநா யகன்பா
விளம்புசங் கீதநா யகனே
மிக்கநா யகனே முக்யநா யகனே
மேசியா யேசுநா யகனே

ஜெபமாலை 20 வரை செய்யுள் 238

Table of contents

previous page start next page