1. துங்கமிகும் வானாடும் புவியுந் தந்த
சோதிதிரி யேகபரா பரனைப் போற்றி
மங்களமாய்ச் சீயோனின் மாதை வந்து
மணம்புரியுங் கிறிஸ்தரசன் மகிமைக் காகச்
சங்கைமிகுந் திருவிளையாட் டூஞ்சல் பாடச்
சத்தியத்தின் அரூபியர் சகாயஞ் செய்வார்
செங்கையருட் டவிதுமைந்தா ஆடீ ரூஞ்சல்
தேவதிருச் சபைமகளோ டாடீ ரூஞ்சல்
2. அறுதினத்திற் சகலவஸ்தும் அமைத்த நாதன்
அதமேவை என்றிருமா னிடரைச் செய்து
மறுவதற்ற சிங்கார வனத்தில் வாழ்ந்து
மாறாத சீவமரக் கனியைத் தின்று
உறுதிபெற வைத்ததயை அறியார் பேயோ
டொழியாமற் காப்பதற்காய் உலகில் வந்த
திறமிகுத்த தவிதுமைந்தா ஆடீ ரூஞ்சல்
சீயோனின் றிருமகளோ டாடீ ரூஞ்சல்
3. அட்டசுபா வத்தினொரு தேவ னான
அனாதிபிதா நோவையைக்கொண் டருளிச் செய்த
கட்டளைகேட் டறம்புரியாத் தீயோர் தம்மைக்
கடிதான சலப்பிரவா கத்தில் மாய்த்து
எட்டுநரர் தமைக்காத்துப் பெருக்கி மீண்டும்
ஈடேற்ற மானிடவ தார மான
சிட்டர்தொழுந் தவிதுமைந்தா ஆடீ ரூஞ்சல்
சீயோனின் றிருமகளோ டாடீ ரூஞ்சல்
4. கல்தேயர் தேயத்திருந்த ஆபிர காமைக்
கருணையுடன் வரவழைத்துக் கானான் தேசத்
தெல்லையெல்லாம் உம்பிளிக்கை யாக நல்கி
எகிப்பதிற் பார்வோனைக் கடலிற் றாழ்த்தி
வல்லமையாய் இஸராவேற் சாதி போற்ற
மகத்துவத்தின் ஆசனத்தில் இருந்து வாழுஞ்
செல்வமிகுந் தவிதுமைந்தா ஆடீ ரூஞ்சல்
சீயோனின் றிருமகளோ டாடீ ரூஞ்சல்
5. அற்புதமாய்த் துதர்கள்எக் காள மூத
அக்கினியின் நடுவிலெழுந் தருளிச் சீனா
வெற்பதிர இடிமுழங்கச் சனங்கள் கேட்க
வேதமெல்லா மோசேசுக் கருளிச் செய்து
கற்பலகை தனிலெழுதித் தந்த பத்துக்
கற்பனையூ டொழுகாரைக் காக்க வந்த
சிற்பரம தவிதுமைந்தா ஆடீ ரூஞ்சல்
சீயோனின் றிருமகளோ டாடீ ரூஞ்சல்
6. ஆட்டிடையிற் கிடந்தவனைக் கழுதை தேடி
அலைந்தவனைக் கொண்டுபல துயரஞ் செய்து
கோட்டியெல்லாங் கொண்டதிற்பின் இஸரா வேலின்
கொற்றவனென் றோங்கஅவன் குலத்தின் மேவி
மாட்டிடையிற் பெத்தலகேம் நகரத் தூடு
வானவரும் பூதலரும் வணங்க வந்த
தேட்டமிகுந் தவிதுமைந்தா ஆடீ ரூஞ்சல்
சீயோனின் றிருமகளோ டாடீ ரூஞ்சல்
7. மன்னுதந்த விட்டமிட்டுத் துகிர்க்கா னாட்டி
மாற்றுயர்ந்த பொற்றகட்டாற் பலகை சேர்த்து
மின்னுமுத்தின் வடம்பூட்டி யுலவி யாட
விரும்பாமற் றரித்திரன்போல் வேடங் கொண்டு
முன்னணையிற் பிறந்துபுல்லிற் றவழ்ந்து கந்தை
மூடியெமை நாடிவந்த முறைமை பார்த்தாற்
சின்னமென்ன தவிதுமைந்தா ஆடீ ரூஞ்சல்
சீயோனின் றிருமகளோ டாடீ ரூஞ்சல்
8. மாசில்லாப் பாலகனாய் பிறந்தெட் டாநாள்
மகிமையுடன் சுன்னத்துப் பண்ணப் பட்டு
யேசுவெனப் பெயர்தரித்து முப்ப தாண்டில்
இஸ்நானமுற்றுப் பேயின்சோ தனையை வென்று
நேசர்களைத் தெரிந்துலகஞ் சுற்றி வேத
நெறியுரைத்தற் புதம்புரிந்து நெடும்பா டுற்ற
தேசுலுவுந் தவிதுமைந்தா ஆடீ ரூஞ்சல்
சீயோனின் றிருமகளோ டாடீ ரூஞ்சல்
9. அந்தமிகும் பரிசுத்த ரூபி யாலே
அற்புதமாய்க் கெற்பமதாய் உற்ப வித்துச்
சுந்தரஞ்சேர் கன்னிமரி இடத்திற் றோன்றித்
தோன்றல்பொந்திப் பிலாத்துவின்கீழ்ப் பாடு பட்டு
நிந்தையுடன் குருசிலறை யுண்டு மாண்டு
நிலத்தடக்கப் பட்டுயிர்த்து நித்திய காலஞ்
சிந்தைமகிழ் தவிதுமைந்தா ஆடீ ரூஞ்சல்
சீயோனின் றிருமகளோ டாடீ ரூஞ்சல்
10. ஆதியதம் வினையகல ஒலிவக் காவில்
ஆத்துமத்தில் அரோகரவா தைகள் பட்டுக்
காதகராற் கட்டுண்டுகு ருக்களின் கிர
கத்திலக்கியா னத்துரைமுன் கபால வெற்பில்
வாதையுறப் பாடுபட்டுக் குருதி சிந்தி
மரித்தடக்கப் பட்டுயிர்த்து வான்போ யாளுந்
தீததில்லாத் தவிதுமைந்தா ஆடீ ரூஞ்சல்
சீயோனின் றிருமகளோ டாடீ ரூஞ்சல்
11. பாருலகை நடுக்கேட்கக் கடைசிக் காலம்
பராபரனின் வலப்பாகத் திருந்து வந்து
நேருடனே அவரவர்தங் கிரியைக் கேற்க
நித்தியசம் பாவனைகள் அளித்துச் சாலே
மேரதனிற் கன்னியாஸ்தி ரிமார் போற்ற
வேதநா யகன்பாட விருப்புற் றோங்குஞ்
சீருயருந் தவிதுமைந்தா ஆடீ ரூஞ்சல்
சீயோனின் றிருமகளோ டாடீ ரூஞ்சல்
சாலேமேரு= சாலேம் பருவதம்
ஜெபமாலை 27 வரை செய்யுள் 389