ஜெபமாலை

வேதநாயக வேதசாஸ்திரியார்

6. ஜெபமாலை

தேவலட்சணம்

ஆசிரியவிருத்தம்

1. ஆதியே யாதிமுன் அனாதியி லனாதியே
அரூபியே சுயசொரூபியே
ஆசையே யருள்ஞான பூசையே யோசையே
அருமையே மனதொருமையே
ஓதியநி தானமறை யுத்தியே புத்தியே
உண்மையே கனவண்மையே
உச்சிதப் பதவியே நிச்சயத் துதவியே
உயர்கேண்மை யேஆண்மையே
சோதிநிதி யேவான சூட்சியே காட்சியே
சுவிசேட சபைசாட்சியே
தூய்மையே வாய்மையே தொன்மையே நன்மையே
சுகசீவியச் செவ்வியே
சாதிகள்சு யாதிபதி யேகனதி யேதேவ
சத்தியத் துறுதிதருவாய்
தாதையாகிய வஸ்து வேதமாளிகை ரஸ்து
சாமியேசுக் கிறிஸ்துவே

அனாதியிலனா = துவக்கமில்லாமையிற் பராபரன் தமது பெயரின்படி அனாதியாயிருக்கிறார்
பதவி = கதி; கேண்மை = நட்பு; தூய்மை=சுத்தம்; செவ்வி = அந்தம்; கனதி = கனம்

2. ஞானமே கருணையா னந்தமே சொந்தமே
நந்தர்கள் கணாபந்தமே
நாதாந்த மேய்ந்தமே தொந்தமே தந்த
னந்தமே தருசந்தமே
மோனமே பிரதான மேதிவிய பானமே
முக்கியமே மிகுசக்கியமே
மூலமே யோலமே சீலமே கோலமே
மோக்கிஷ பக்கிஷபொக்கிஷமே
மானமே யபிமான மேயதின மேபுதின
மார்க்கமே கனதீர்க்கமே
மாணிக்க மேமுத்த மேபத்த மேசீவ
மாமகுட மேகனகமே
தானமே பேரின்ப மேதம்ப மேதேவ
சத்தியத் துறுதிதருவாய்
தாதையாகிய வஸ்து வேதமாளிகை ரஸ்து
சாமியேசுக் கிறிஸ்துவே

நந்தர் = இடையர்; கணாபந்தம் = கூட்டத்திணுறவு;
சக்கியம் = அன்பு; தம்பம் = தூண்

3. தேவாதி தேவேஅ னாதிவாழ் வேநித்திய
சீவகா வேயுவாவே
செய்யபூ வேஞான பாவே யமாவே
திவியபிதா வேநமாவே
ஏவாள்சு தாவேகு தாவேயீ சாவேயிஸ்ப்
பிரீத்துவே மேசையாவே
ஏகதா தாவேபு றாவேசொ ரூபே
எனாவினா வேமனாவே
ஆவாவை யாவேஅ லாவே யுலாவே
அவாவேஅல் லேலூயாவே
அல்பாவே ஒமேகா வேரட்சி யும்ஒச
னாவேஅ டர்ந்துவாவே
தாவீது கோவேச காவேச மாவே
தயாலுவே யேயோவாவே
தாதையாகிய வஸ்து வேதமாளிகை ரஸ்து
சாமியேசுக் கிறிஸ்துவே

உவா = நிறைவு; அமா = அம்மா, அழகிலழகு; நமா = வணக்கம்; குதா = அல்லா; அவா = ஆசை; சகா = தோழன்; சமா = வகுப்பு

4. ஆதிமுடி யாமறையின் ஆமனடி யாவரூபி
யாவுரூபி யாசொரூபியா
ஆசரணை யாவடிமை யாதரியை யாகருணை
யாகிருபை யாபொறுமையா
வேதமறை யாதிறமை யாமுறைமை யாமரண
வேளைவரு வாய்முனமெயா
மேசையா வேசையா வாசாரி யாவலமை
மேவுகலி லேநசரையா
ஓதுமுரை யாதரும நீதிநெரி யாஉரிமை
யாவருமை யாபெருமையா
ஓசகா யாநியாயா வுபாயா செயா
ஒல்லியா அல்லேலூயா
சாதிநே யாபுயசு யாவலமை யாதயா
தலைமையா பரமராயா
தாதையாகிய வஸ்து வேதமாளிகை ரஸ்து
சாமியேசுக் கிறிஸ்துவே.

ஒல்லியான் = கடவுள்;சுயா = சொந்தம்

5. அனையுநீ மனையுநீ அருளுநீ பொருளுநீ
அணிகலப் பொக்கிடமுநீ
அறமுநீ திறமுநீ சூட்சாதி சூட்சநீ
ஆனந்த ஆச்சரியநீ
மனமும் விற்பனமுநீ நினைவு முற்பனமுநீ
வாணிபமும் ஆணுவமுநீ
மந்திரநீ தந்திரநீ சிந்தையின் கருமநீ
மரபுநீ யாதரவுநீ
கனமுநீ தனமுநீ நயமு நிச்சயமுநீ
காரணமும் ஆரணமுநீ
கதியுநீ மதியுநீ தெரிவுநீ பரிவுநீ
கருணைகுரு குலதெய்வநீ
சனமுநீ யினமுநீ சகலசாம் பிராச்சியநீ
சத்தியத் துறுதிதருவாய்
தாதையாகிய வஸ்து வேதமாளிகை ரஸ்து
சாமியேசுக் கிறிஸ்துவே

அணிகலம் = ஆபரணம்; தந்திரம் = உபாயம்;
சாம்பிராச்சியம் = சக்கரவர்த்தித்தன்மை

6. அப்பனீ யையனீ அண்ணனீ தம்பிநீ
அண்ணாவியுங் குருவுநீ
அன்பனீ நண்பனீ என்பிராண நாயகனும்
ஆண்டவனு மீண்டவனுநீ
ஒப்புரவுனீ திறவனீ குரவனீ யுயிர்க்
குதவிய வயித்தியனுநீ
உரியபிணை யாளிநீ அரியமத் திஸ்தனீ
உத்தமா சாரியனுநீ
செப்புமுன் றூதனீ யாயனீ நாயனீ
சேனாபதித் தலைவனீ
செங்கோலி ராசனீ என்பாவ நாசனீ
தேவதே வப்பிரபுநீ
தப்பிலா மெய்ப்பரம ரட்சகனு நீதேவ
சத்தியத் துறுதிதருவாய்
தாதையாகிய வஸ்து வேதமாளிகை ரஸ்து
சாமியேசுக் கிறிஸ்துவே

திறவன் = வலியவன்; குரவன் = குரு

7. பொரும்படைக் காயுதம் வானத்தின் அப்பம்
புராதனமனா தங்கிவாழ்
பொன்னரண் மனையெனைச் சோடிக்கும் உடைசீவ
புட்கரங் கருணாகரங்
கருங்கட லில்வழி தோற்றிய சமுக்காமரக்
கலமெழ நடத்துசுக்கான்
காற்கொந்த ளிப்பினங் கூரஞ் சலப்பிரவா
கத்தில்அக்க ரைசெல்வங்கம்
அரும்பிணிக் கவிழ்தம் இராவி னட்சத்திரம்
அரியசீ வனின்விருட்சம்
அன்பான போசனஞ் செல்வபூங் காவனம்
ஆனந்த தீவிதாட்சி
தருஞ்சுகந் தம்படர் குளிர்ந்த பூஞ்செடியுநீ
சத்தியத் துறுதிதருவாய்
தாதையாகிய வஸ்து வேதமாளிகை ரஸ்து
சாமியேசுக் கிறிஸ்துவே

சீவபுட்கரம் = சீவதண்ணீர்; மரக்கலம் = கப்பல்; கால் = காற்று;வங்கம் = மரக்கலம்; தீவிதாட்சி = முந்திரிகை

8. துக்கத்தில் ஆறுதலென் வாழ்விற் களிப்புநீ
துன்பத்தி லெனதின்பநீ
தொறுவும் வேலையின் அலுவல்பகலி லென்சிந்திப்பு
தூக்கத்தி லென்சொர்ப்பனம்
பக்கத்தி ராவினில் அடைக்கலம் இருளதிற்
பகவத்தி யெனதுசத்தி
படுகுறை யிலைசுவ ரியங்கசப் பினிலமுது
பலதாழ்வி லெனதுவாழ்வு
மிக்கபெல யீனத்தி லென்பெலன் றொய்வுற்ற
மெலிவதனி லெனதுவலிமை
விழிப்பிற் குறிப்புற வின்ஞான பானந்தீ
விமோசனம் பவநாசனம்
தக்கயோக் கியமனோக் கியசலாக் கியமுநீ
சகலபாக் கியமுநீயே
தாதையாகிய வஸ்து வேதமாளிகை ரஸ்து
சாமியேசுக் கிறிஸ்துவே

தொறுவல் = தொழிற் பயில்வு; பகவத்தி = தீவட்டி

9. ஞானதம் ஆரகஞ் சிந்தும் ஆபேல்பேழை
நல்கியுயிர் காத்தநோவா
நற்கோத்திர ஆபிரகாம் பொறுதியுறுதி கொள்யோபு
ராசகுரு மெல்கிசேதேக்
கானாதி யந்தஞ் சுதந்தர வீசாக்குயூ
தாச்சிங்க மந்திரியோசேப்
அடுஞ்சிறை விடுத்தமோ சேசுமுன் பிரதான
ஆசாரியான ஆறோன்
சேனாதி பன்யோசு வாபெலிஸ்த ரையெலாஞ்
சிதறடிக்குஞ் சீம்சோன்
செயபராக் கிரமதா வீதுனத சாலமோன்
தீர்க்கனெலி யாவுக்கிரன்
தானாக மீனாணை யானயோ னாஞான
தானியேல் இம்மானுவேல்
தாதையாகிய வஸ்து வேதமாளிகை ரஸ்து
சாமியேசுக் கிறிஸ்துவே

ஆரகம் = இரத்தம்; மீனாணை = மீனடையாளம்

10. ஒருதெய்வ நீயுன் சுவாப மோதானாய்
அனாதியாய் உடலிலாமை
ஓங்கும் பிதாச்சுதன் பரிசுத்த ரூபியென்
றுனதுதிரி யேகமகிமை
அறியவுன் றிருலட்ச ணத்தாதி யந்தமில்
லாதவன் மாறாதவன்
அனையச ருவத்துக் கும்வல்ல வனெல்லாம்
அறிந்தஅள வற்றஞானன்
பரவியெங் குநிறைந் தோன்மிக்க சத்தியன்
பரிசுத்த னீதியுடையோன்
பக்கிஷ முங்கிருபை யுமுள்ள வன்றொழிலோ
படைத்தளித் துவனிப்பவன்
தருமாதி வினைதீர உருவாகி யரிதான
சகலபா டேற்றததீகந்
தாதையாகிய வஸ்து வேதமாளிகை ரஸ்து
சாமியேசுக் கிறிஸ்துவே

உவனித்தல் = தூய்தாக்கல்

11. அந்தரநி ரந்தர துரந்தர சுதந்தர
அனந்தர சுதாரிதாரி
ஆரியவ தாரியச ரீரியுப காரிஅதி
காரிஆ சரிஅகாரி
மந்திரப யங்கர பரம்பர கருணாம்பர
வசந்தசாந் திரநரேந்திர
மாதிரத யாபரப ராபரகிரு பாகர
மனோகர பதாரதீர
சுந்தரச வுந்தரகு ணேந்திரதெய் வேந்திர
சுகமங்களகல் யாணிபாணி
சுயாதிப சயாதிப தயாதிப நியாதிப
சுகாதிப சொரூபிரூபி
தந்திரவி யந்தர மடங்களத டங்குறு
தடாரி சங்காரிகோரி
தாதையாகிய வஸ்து வேதமாளிகை ரஸ்து
சாமியேசுக் கிறிஸ்துவே

எ-து. அந்தர = ஆகாயம்; நிரந்தர = நெருக்கம்; துரந்தர = வல்லபம்; சுதந்தர= உரிமை; அனந்தர சுதாரி = அளவில்லா அரசரினுதாரி; தாரி = உடையோன்; ஆரி = மேன்மை; அவதாரி = மனுடவதாரி; அசரீரி = அரூபி; உபகாரி = ஈகையாளன்; அதிகாரி = அதிபதி; ஆசரி = ஆசாரி; அகாரி = கடவுள்; மந்திர = ஆலோசனை; பயங்கர = அச்சம்; பரம்பர = வமிச பாரம்பரை; கருணம்பர = கிருபா சமுத்திரம்; வசந்த = சுகந்தம்; சாந்திர = மிகுதி; நரேந்திர = அரசன்; மாதிர = மலை; தயாபர = கிருபை யுடையோன்; பராபர = கடவுள்; கிருபாகர = கிருபை யுடைய; மனோகர = சந்தோஷம்; பதார = தெப்பம்; தீர = மனத் தைரியம்; சுந்தர = அழகு; சவுந்தர = அழகு; குணேந்திர = குணமுள்ள ராசா; தெய்வேந்திர = தேவராசன்; சுகமங்கள = நல் வாழ்த்து; கலியாணி= கலியாணமுடையோன்; பாணி = கீதம்; சுயாதிப = சக்கரவர்த்தி; சயாதிப = வெற்றி யுடையவன்; தயாதிப = கிருபை யுடையோன்; நியாதிப = நீதியுடையோன்; சுகாதிப = வாழ்ந்திருக்கின்றவர்; சொரூபி = சுரூபி; ரூபி = உரூபி; தந்திர = உபாயம்; வியந்தர = பிசாசம்; மடங்கள் = மூடத்துவம்; அடங்குறு = அடங்கப்பண்ணும்; தடாரி = பேரிகை; சங்காரி = சங்கரிக்கிறவர்; கோரி= விரும்புதல்

12. துங்காஅ னங்காபிர சங்காத ரங்கா
துரந்தர புரந்தரீகா
தூதாஅ தீதாவி னோதாஎ னாதா
சுமுத்திரமித் திரசமுத்திரா
அங்காநி சங்காதி கந்தாசு கந்தா
அகண்டபர மண்டலாதிபா
ஆசாவு லாசாசரு வேசாந ரேசா
அனந்தயோ சனைவிலாசா
புங்காந லங்காவ ணங்காம ணங்கா
புகழ்த்துசொற் பிரவடீகா
புராணாகல் யாணாபிர தானாநி தானா
புராதனா கிருபாசனா
தங்காதி சங்காதி ரித்துவகாத் திராவேத
சாஸ்திரி வழுத்துதோத்திரா
தாதையாகிய வஸ்து வேதமாளிகை ரஸ்து
சாமியேசுக் கிறிஸ்துவே

எ-து. துங்கா = உயர்ந்தவனே; அனங்கா = சரீரமில்லானே; பிரசங்கா = வியாக்கியானியே; தரங்கா = கடலே; துரந்தர = வல்லபா; புரந்தரீகா= காக்கிறவனே; தூதா = சமாதானம் பேசுவோனே; அதீதா = எட்டாதவனே; வினோதா = அதிசயமானவனே; எனாதா = என்னாதனே; சுமுத்திர = நிதான; மித்திர = சிநேக; சமுத்திரா = சமுத்திரமே; அங்கா = வேதாங்கமே; நிசங்கா = இணக்கமே; திகந்தா = திக்கின் முடிவே; சுகந்தா = நறுமணமே; அகண்ட = எல்லா; பரமண்டலாதிபா = பரமண்டலங்களினரசே; ஆசாவுலாசா = ஆமரணத்தைப் பாக்கியமாக்கினவா; சருவேசா = சருவேசுரா; நரேசா = இராசாவே; அனந்த = அளவிலாத; யோசனை = ஆலோசனை; விலாசா = விலாசமே; புங்கா = உயர்ந்தவனே; நலங்கா = நல்ல சரீரனே; வணங்கா = மற்றொருவர்க் கடங்காத; மணங்கா = ஆட்டுக் குட்டியே; புகழ்த்து சொற்பிரவடீகா = புகழ்ச்சி சொற்களின் பேரழகே; புராணா = சுவிசேட புராணா; கலியாணா = கலியாண சோபனா; பிரதானா = விசேடமானவா; நிதானா = நிச்சயமானவா; புராதனா = பழமையானவனே; கிருபாசனா = கிருபையினாசனனே; தங்காதி சங்கா = தங்கிய ஆதிச் சங்கத்தானே; திரித்துவ = திரித்துவமே; காத்திரா = காத்திரமானவனே; வேத சாஸ்திரி = வேதநாயக சாஸ்திரி; வழுத்து = துதிக்கும்; தோத்திரா = தோத்திரமே

13. காலமே வாமிகத் தாமதஞ் செய்யாது
கடுசீக்கிரம் விரைவாகவா
கவனமாய்ச் செய்திகளெ லாத்தையுங் கேளுனது
காதுசாய்த் துறுதியாய்க்கேள்
வேலையிலென் னலுவலாய் நில்லுபத் திரமாயென்
வீட்டை முழுதுங்காத்திரு
வெளியினான் போகையிற் கூடவா மீள்கின்ற
வேளையு மெனைப்பின்றொடர்
சோலிவைக் காதெனக் காகவேண்டி யதெலாஞ்
சுறுசுறுப் புடனுடனேசெய்
தூங்காதி ராப்பகற் கண்விழிப் பாய்நின்று
சொன்னபடி யெல்லாநட
சாலவே வேதநா யகனையுன் கவியென்று
சகலபேர்க்குஞ் சொல்லிவை
தாதையாகிய வஸ்து வேதமாளிகை ரஸ்து
சாமியேசுக் கிறிஸ்துவே

சோலி = தொந்தரை; சுறுசுறுப்பு = விரைவு

செபமாலை 6 வரை செய்யுள் 65

Table of contents

previous page start next page