ஜெபமாலை

வேதநாயக வேதசாஸ்திரியார்

13. ஜெபமாலை

கிறிஸ்துவின் தாழ்மை

1. தேவனானநீ மனுடனாகினை
திறமையானநீ சிறுமையாகினை
ஆவியானநீ சீவியாகினை
அருவமானநீ உருவமாகினை
பாவியாகினை தாழ்விலாதநீ
பாடதாகினை ஆடதாகவே
வீவிலாதநீ சாவுமாகினை
வேதநாயகா வேதநாயகா

2. உடுகணுற்றசாஸ் திரிகள்தேடவும்
உகம்வனைந்தநீ அமுததுண்கவும்
இடையர்வந்துகண் டடிதுதிக்கவும்
இரவிலேகுளிர் பனிமிகுக்கவும்
படிசிரிக்கநீ யழுதுகொண்டதும்
பரமசேனகள் பாடினின்றதும்
விடையின்முன்புவந் ததுவுமென்சொலாய்
வேதநாயகா வேதநாயகா

உடு = நட்சத்திரம்; உகம் = பூமி

3. மக்கண்மக்களும் எக்குலத்தரும்
மண்ணுளோர்களும் விண்ணுளோர்களுந்
தக்கபாதலத் தோரும்யாவருஞ்
சருவலோகமுஞ் சகலபேர்களும்
ஒக்கநின்றுகொண் டதிசயிக்கவே
உலகம்யாவையும் உண்டுசெய்தநீ
மிக்கவெட்கமற் றழுவதென்சொலாய்
வேதநாயகா வேதநாயகா

4. கல்லகத்தினர் கொல்லவெண்ணினாற்
காட்டகத்திடை மாட்டகத்திலுன்
வல்லபத்தினால் என்னசெய்யலா
மனம்விடாதெகிப் பத்திலேகுவாய்
புல்லகத்தரி யாதுபோர்த்தவே
போலிமாதிடஞ் சீலையேதுதான்
வெல்லைவூர்நமக் கெல்லையற்றதே
வேதநாயகா வேதநாயகா

வெல்லை = பெத்தலேகேம்

5. நித்திரைக்கெனத் தாயராட்டியும்
நீயழுங்குர லேமிகுப்பதென்
எத்ததிக்குநீ கூவிவாடினும்
ஏழைமாதிடம் ஏததுண்டுதான்
பெத்தலேமினில் உற்றபேரவர்
பெருமைக்கண்டுனக் கருமைசெய்யவே
மெத்தவுந்துயில் விழிகொள்ளப்பனே
வேதநாயகா வேதநாயகா

6. மனதிலேகொடும் பகையதாயுனை
வஞ்சகர்வியா ழத்தும்வெள்ளியுங்
கனவுபத்திர முறவதைத்ததுங்
கடினநிந்தைகள் படிறுசொன்னதும்
முனிவதாகமுக் காடதிட்டதும்
முழுதும்வேணகோ ரணிகள்கொண்டதும்
வினையமோநரர் செய்தபாவமோ
வேதநாயகா வேதநாயகா

7. தள்ளிவீக்கியுன் றனைவளைந்துமே
தறுகணர்க்குழா மிகவடித்தபின்
முள்ளுவன்கடு முடியழுத்தியே
முகமதிற்கறை படவுமிழ்ந்திடக்
கள்ளனொக்கவே தூடணிக்கினுங்
கருணையாளனீ சினமிலாமலே
வெள்ளையப்பனாய் மனமெடுத்தையோ
வேதநாயகா வேதநாயகா

8. தந்தைமைந்தனீ இந்தவேடமாய்ச்
சார்ந்ததேவினை யாவும்தீர்ந்ததே
உந்தன்ராச்சியம் எந்தன்ராச்சியம்
உனதுசெல்வம தெனதுசெல்வமே
சொந்தம்நீயெனக் குன்றனுக்குநான்
சொல்லவேறெனக் கில்லையையனே
விந்தையீதெலாம் உன்றனுண்மையே
வேதநாயகா வேதநாயகா

9. அருமையாளனீ உரிமைநாதனீ
அருளுசெல்வநீ அதிகவாழ்வுநீ
பெருமைஞானிநீ கருணைநண்பநீ
பெற்றதாயுநீ உற்றதந்தைநீ
தருமமந்திர குருவுமாகிநீ
தருணமானபோ துதவுதோழனீ
விரிவுசத்திய வேதம்யாவுநீ
வேதநாயகா வேதநாயகா

10. எண்ணுமாகினை இறையுமாகினை
ஏகமாகினை யாகமாகினை
கண்ணுமாகினை வழியுமாகினை
கதியுமாகினை பதியுமாகினை
பண்ணுமாகினை பாவுமாகினை
பரமுமாகினை வரமுமாகினை
விண்ணுமாகினை வெளியுமாகினை
வேதநாயகா வேதநாயகா

11. ஆதிநாயகா நீதிநாயகா
அளவில்லாதமெஞ் ஞானநாயகா
சோதிநாயகா இயேசுநாயகா
சொருபநாயகா அருபநாயகா
சாதிநாயகா தேவநாயகா
சருவநாயகா பொறுமைநாயகா
வேதநாயகா என்றெனக்கருள்
வேதநாயகா வேதநாயகா

ஜெபமாலை 13 வரை செய்யுள் 144

Table of contents

previous page start next page