பிரார்த்தனைச் சமுதாய விண்ணப்பம்
விருத்தம்
மனந்தனின் மகிழ்ந்தறு தினந்தனி லகண்டமும்
வனைந்து வளமுந்தரு பரா
சனந்தனை இனந்தனை யுகந்தக மிகுந்தொரு
சடந்தனை அடைந்தொழி வேனோ
கனந்தரும் அனந்தனுன் மகன்றனை விடுந்தயை
கனிந்திரு தயங்குளி ரவே
தினந்தின நினைந்தடி பணிந்தறி வுடன்பல
செபஞ்செய வரந்தரு வையே
1. அத்தியந்த திரித்துவ ஏகவஸ்
தான தந்தையர்க்கும் - ஓ
ரனாதி மைந்தனுக்கும் பரிசுத்த
அரூபிக்குந் தோத்திரமே
2. நித்தியம் நித்தியந் துத்தியம்நீ
டூழி காலமெலாங் - கன
நிர்த்தனம் வந்தன மங்களார்த்தனம்
நீடுசங் கீர்த்தனமே
3. கிருபை யாவத்துக்குஞ் சுயாதிபத்திய
ராயகிரி டாதிசயா - சுவாமி
கிருபையா யிருமெய் கிறிஸ்துவேகிருபை
யாயிரு மெஞ்சுவாமியே
4. பொறுமை வானத்துக்கு முக்கியநேய
யூலோக தயாநிதியே - உமக்குப்
புண்ணியம் பிரஸ்தாப மகிழ்ச்சி
புகழ்ச்சி மிகுந்துதியே
5. பரமண்டலத்தி யங்கும்பரம
பிதாநற் பராபரனே - இந்தப்
பாரின் ரட்சகராய் வைகியசுத
னான பராபரனே
6. எங்கள் பேரில் இரங்குமிரங்கும்
இரங்கும் அருட்கிருபையே - நித்திய
சங்கையுங் கனமுந் துதியுமுன்
சரண் சரணங்களுக்கே
7. அருள்கொண் டெங்கும் வயங்கும்பரிசுத்
தரூபிப் பராபரனே - மூன்றொன்
றானமெய்ப் பரிசுத்த திரித்துவ
அனாதிப் பராபரனே
8. எங்கள்பேரில் இரங்குமிரங்கும்
இரங்கும் அருட்கிருபையே - நித்திய
9. தங்குபாரின் சருவசீவாத்தும
தயாபர கர்த்தாவே - தீங்கிற்
றப்புவித்தெமை ரட்சைசெய்தருளும்
சரண்சரண் உன்றனக்கே
10. எங்கள்பேரில் இரங்குமிரங்கும்
இரங்கும் அருட்கிருபையே - நித்திய
11. சகலபாவங்கள் மோசங்கள் பேயின்
சதிசற்பனை கண்ணிகள் - அசுப்பிற்
சடுதியில் வருந்துன் மரணம்பெரு
வாரிக் காய்ச்சலுக்கும்
12. எங்களை விலக்கிரட்சித் தேற்றும்
இரக்கப் பராபரனே - நித்திய
13. இகல்பஞ்சமுபுத் தங்கொலைகள்கல
கம்பிரிவி னைகளுக்கும் - வல்
லிடிபெருஞ்சுழல் அக்கினிவெள்ளம்
எழும்நித்திய சாவுக்குமே
14. எங்களை விலக்கிரட்சித் தேற்றும்
இரக்கப்பராபரனே - நித்திய
15. எவ்வித விஷப்பூச்சிகள் துஷ்டமிரு
கங்களெலா வினைக்கும் - நாங்கள்
இன்னதென் றறியாதுன்பசேத
இடுக்கண்கள் யாவுக்குமே
16. எங்களை விலக்கிரட்சித் தேற்றும்
இரக்கப்பராபரனே - நித்திய
17. தூயவுன்றன் மனுடவதாரத்தி
னாலுப வாசத்தினாற் - பட்ட
சோதனைமர ணாவஸ்தைசிந்தின
சோரி வேர்வையினால்
18. எங்களின் மரணத்தறுவாயிலும்
ஞாயத் தீர்ப்பினிலும் - உவந்
தெம்மைரட்சித் தனுக்கிரகஞ்செய்யும்
இரக்கமுள்ள கர்த்தரே
19. மாயவேகுரு சிலறையுண்டனின்
வாதை மரணத்தினால் - தேவரீர்
மகிமையா யுயிரோடெழுந்துபர
மண்டல மேறினதால்
20. எங்களின் மரணத்தறுவாயிலும்
ஞாயத் தீர்ப்பினிலும் – உவந்து
வேறுதரு
21. உன்னதத் துயர்ந்த பரனே தேவரீர்
உமது திருச்சபையைத் தற்காக்கவும்
மன்னிய போதகரை யுன்றன் ஊழியத்தில்
வசனத்திற்றூய் தொழுக்கி னிலைப்படுத்தவும் - ஏழை
22. வேதப்புரட்டு களனைத்தையும் இடறலையும்
விலக்கித் தடுத்து வழிதப்பியலைந்து
சேதமுற்ற யாவரையும் வசப்படுத்தித்
தீமருளை எங்கள்சரண்கீழ் நசுக்கவும் - ஏழை
23. உமதறுப்புக் குண்மையான பரிசாரகரை
யுவந்தனுப்பித் தேவவசனம் பலிக்கவே
அமலாவுன் அருபியையும் பெலத்தையும்
அன்பாய் அனுக்கிரகஞ் செய்தருளவும் - ஏழை
24. அல்லலுற்றுத் திடனற்ற பேர்யாவரையும்
ஆதரித்துத் தேற்றிக் கிறிஸ்தவராகிய
எல்லாவி ராசர்களுக்கும் பிரபுகட்கும்
ஏற்ற சமாதானம் ஒருமையைத் தரவும் - ஏழை
25. எங்கள் மாநாட்டிற்கு மெய்ச்சமாதான
னத்தையுஞ் சுகராசரிக்கத்தையுந் தந்து
சங்கையுள்ள துரைகளையு மூப்பரையுஞ்
சபைபள்ளிக் கூடங்களைத் தற்காக்கவும் - ஏழை
26. பரிசுத்த நின்னூழியத்தில் எங்கடமைப்
பலப்படுத்தி எந்நாளும் நிலைப்படுத்தவும்
பரிசுத்தனின் சுவிசேடம் பிரசித்தம்
பண்ணப்படவுங் கனத்தோ டெண்ணப்படவும் - ஏழை
27. கடினமன யூதரையுஞ் சகலபொய்ம்மதக்
காரரையுந் துற்சமையக் கியானரையுமே
திடமுடன் றிருப்புஞ்செயலைச் செய்துநடந்
தேறப்பண்ணவுஞ் சபையிற் சேரப்பண்ணவும் - ஏழை
28. அவதிக ளிக்கட்டிடைஞ்சல்கள் அனுபவிக்கும்
யாவருக்கு மெய்ச்சகாயராய்த் தென்படவும்
உவரி யாத்திரைப்பண்ணுவோர் ஊர்ப்பயணத்
தோர்கள னைவோர்களையுங் காப்பாற்றவும் - ஏழை
29. தீதறக் கற்பவதிகட்குச் சந்தோஷமான
சேயர்பெறும் பேறதனைக் கட்டளையிடவும்
ஆதரித்துப் பிள்ளைகளையும் வியாதிக்காரர்
யாவரையும் பார்த்துக்கொண்டு பராமரிக்கவும் - ஏழை
30. குற்றமற்றுக் காவற்பட்டோர் தம்மையருள்
கூர்ந்தகலவும் விடுதலையாக்கவும்
அற்றிய விதவைகளையுந் தாய்தகப்பன்
அற்ற பிள்ளைகளையுங் கண்டாதரிக்கவும் - ஏழை
31. தங்கிய பொறுமையாகப் பூவிலுற்ற
சகலமனுஷருக்குந் தானிரங்கவும்
எங்களுப காரிகட்கெல்லாங் கிருபையுடன்
ஏற்றநித்திய பலன்களைக் கொடுக்கவும் - ஏழை
32. பகைக்கின்ற பேர்க்குமெங்களை மிகத்துன்பப்
படுத்துகின்றோர் தூஷணம் பண்ணுகின்றோர்க்கும்
உகப்புடனே மன்னித்துவிட்டவர்கள்
உளத்தைத் திருப்பி வசப்படுத்தவென்றும் - ஏழை
33. நிலத்தின் பயிர்களை அன்பாய்க் கட்டளையிட்டு
நிதமும் பிழைக்கச்செய்து காப்பாற்றவும்
விலக்கி விடாது தயவாய் எங்களுட
விண்ணப்பங்களை யெல்லாங் கேட்டருளவும்
ஏழைப் பாவிகளான பேதை யடியேன்களும்மை
வேண்டிக்கொள்ளுகிறோம் சுவாமியே
34. மெய்யான பராபரன்றன் மைந்தனான
மெய்க்கிறிஸ்துவே யிரக்கமுள்ள கர்த்தரே
வையகத்தின் பாவத்தையெல்லாஞ் சுமந்தொழிக்கும்
வளமைமகத்துவத்தெய் வாட்டுக்குட்டியே
35. வையகத்தின் பாவத்தையெல்லாஞ் சுமந்தொழிக்கும்,
வளமைமகத்துவத் தெய்வாட்டுக்குட்டியே வையகத்தின்
பாவத்தையெல்லாஞ் சுமந்தொழிக்கும் வளமைமகத்துவத்
தெய்வாட்டுக்குட்டியே
அடியாரைக் கேட்டருளும் நின்சமா
தானத்தைக் கட்டளையிட்டன்புகூரும்
36. ஆகிறிஸ்துவே எங்களைக் கேட்டருளும்
அன்பாய்த் திருமுத்தை ஏறெடுத்தொளிரும்
ஓகிறிஸ் துமக்கபையமே சதாநித்திய
ஊழியோ டூழியுமக் கோலோலமே
கிருபையாயிருஞ் சுவாமியே கிறிஸ்துவே
கிருபையாயிருஞ் சுவாமி கிருபையாயிரும்
2. கா. ஜெபமாலை 2 வரை செய்யுள் 48
உரை
சுவாமியே கிருபையாயிரும்!
கிறிஸ்துவே, கிருபையாயிரும்!
சுவாமியே, கிருபையாயிரும்!
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய பராபரனே,
எங்கள்மேல் இரங்கும்!
உலகத்தின் இரட்சகராயிருக்கிற சுதனாகிய பராபரனே,
எங்கள்மேல் இரங்கும்!
பரிசுத்த ஆவியாகிய பராபரனே, எங்கள் மேல் இரங்கும்!
பரிசுத்த திரியேக பராபரனே, எங்கள் மேல் கிருபை கூறும்!
தயாபரராகிய கர்த்தாவே, எங்களைத் தப்பவிடும்!
தயாபரராகிய கர்த்தாவே எங்களை இரட்சியும்!
சகல பாவங்களுக்கும்,
சகல மோசங்களுக்கும்,
பிசாசின் கற்பனைகளுக்கும், கண்ணிகளுக்கும்,
அசுப்பான துன்மரணத்துக்கும்,
பெருவாரிக் காய்ச்சலுக்கும், பஞ்சத்துக்கும்,
யுத்தத்துக்கும், கொலைகளுக்கும்,
கலகத்துக்கும், பிரிவினைகளுக்கும்,
இடிச் சேதத்துக்கும், பெருங் காற்றுக்கும்,
அக்கினிச் சேதத்துக்கும், பெரு வெள்ளத்துக்கும்,
எல்லா விஷப் பூச்சிகளுக்கும், துஷ்ட மிருகங்களுக்கும்,
நித்திய மரணத்துக்கும்
எங்களை விலக்கமாய்க்காரும்!
கிருபையுள்ள பராபரனே!
உம்முட பரிசுத்த மனித அவதாரத்தினாலும்,
உம்முட உபவாசத்தினாலும், சோதனையினாலும்,
உம்முட மரண அவஸ்தையினாலும், இரத்த வேர்வையினாலும்
தேவரீர் சிலுவையில் அறையுண்டடைந்த மரணத்தினாலும்,
தேவரீர் மகிமையாய் உயிர்த்தெழுந்து பரமண்டலத்துக்கு ஏறினதினாலும்,
எங்கள் மரணவேளையிலும், நியாயத்தீர்ப்பின் நாளிலும்
எங்களை இரட்சியும்!
கிருபையுள்ள கர்த்தரே!
தேவரீர் உமது பரிசுத்த சபையை ஆண்டு காப்பாற்றவும்,
சபையின் போதகராகிய உம்முட ஊழியக்காரரை ஆரோக்கியமான வசனத்திலும்,
பரிசுத்த நடக்கையிலும் நிலைப்படுத்தவும்,
சகல வேதப் புரட்டுகளையும் இடறல்களையும் மறித்துத் தடுக்கவும்,
வழிதப்பி மோசம் போனவர்களை எல்லாம் திருப்பவும்,
சாத்தானை எங்கள் பாதத்தின் கீழ்நசுக்கிப் போடவும்,
உமது அறுப்புக்கு உண்மையான வேலையாட்களை அனுப்பவும்,
தெய்வ வசனம் பலிக்கும்படிக்கு உம்முட ஆவியையும் பெலத்தையும் கூடக் கட்டளையிடவும்,
துக்கப்பட்டு, திடனற்றிருக்கிற அனைவரையும் ஆதரித்துக் தேற்றவும்,
கிறிஸ்தவர்களாகிய சகலராசாக்களுக்கும் பிரபுக்களுக்கும் உமக்குள் சமாதானத்தையும் ஒருமையையும் தரவும்,
எங்கள் மாநாட்டிற்கு சமாதானத்தையும் சுகராசரிக்கத்தையும் கட்டளையிடவும் எங்கள் துரைகளையும் மூப்பரையும் பள்ளிக்கூடங்களையும் சபையையும் ஆசீர்வதித்துத் தற்காக்கவும்,
எங்களை உம்முடைய பரிசுத்த ஊழியத்தில் நிலைப்படுத்திப் பெலக்கப்பண்ணவும்,
உம்மடைய பரிசுத்த சுவிசேஷம் பிரசித்தப்பண்ணப்பட யூதரையும், சகல பொய்ம் மதக்காரரையும், அக்கியானிகளையும் திருப்பும் வேலையை நடந்தேறப்பண்ணவும்,
அவதியையும் இக்கட்டையும் அனுபவிக்கிற யாவருக்கும் சகாயராய்த் தென்படவும்,
யாத்திரையும் பயணமும் பண்ணுகிற யாவரையும் காப்பாற்றவும்,
கெர்ப்பவதிகளுக்குச் சந்தோஷமான பேறைக் கட்டளையிடவும்,
சகல பிள்ளைகளையும், வியாதிக்காரரையும் பார்த்துக் கொண்டு பராமரிக்கவும்,
குற்றமில்லாமல் காவற்பண்ணப்பட்டவர்களை நீங்கலும் விடுதலையுமாக்கவும்,
சகல கைம்பெண்சாதிகளையும் தாய்தகப்பனில்லாத பிள்ளைகளையும் ஆதரிக்கவும்,
சகல மனிதருக்கும் இரங்கவும்,
எங்கள் உபகாரிகளுக்கெல்லாம் கிருபையுள்ள நித்திய பலன்களைக் கொடுக்கவும்,
எங்களைப் பகைக்கிறவர்களுக்கும், துன்பப்படுத்துகிறவர்களுக்கும்,
தூஷணிக்கிறவர்களுக்கும் மன்னித்து, அவர்கள் மனதைத் திருப்பவும்,
நிலத்தின் பயிரைக் கட்டளையிட்டுக் காப்பாற்றவும்,
எங்கள் விண்ணப்பங்களைக் கேட்டருளும், ஏழைப்பாவிகளாகிய அடியார் உம்மை வேண்டிக் கொள்ளுகிறோம் சுவாமி.
பராபரனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவே,இரக்கமுள்ள கர்த்தரே, அடியாரைக் கேட்டருளும்!
உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தெய்வ ஆட்டுக்குட்டியே, எங்களுக்கு இரங்கும்!
உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தெய்வ ஆட்டுக்குட்டியே, எங்களுக்கு இரங்கும்!
உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தெய்வ ஆட்டுக்குட்டியே, உம்முடைய சமாதானத்தை எங்களுக்குக் கட்டளையிடும். ஆ, கிறிஸ்துவே, எங்களைக் கேட்டருளும்!
சுவாமி, கிருபையாயிரும்!
கிறிஸ்துவே, கிருபையாயிரும்!
சுவாமி, கிருபையாயிரும்! ஆமென்