ஜெபமாலை

வேதநாயக வேதசாஸ்திரியார்

17. ஜெபமாலை

உபவாச நாளின் தேவாரம்

1. திருக்க ருணைப்பிரானே
திவ்வியபி தாவின்மைந்தா
உருக்கமோ டுலகைமீட்க
உன்னதத் திருந்துவந்தோய்
குருக்களும் பகைவரானார்
கோவிலும் வேறதாயிற்
றிரக்கமே எங்கேநின்றாய்
எம்மையா ளேசுநாதா

2. அடுக்கடுக் காகவானத்
தண்டகோ ளங்கண்முட்ட
உடுக்களை நிரப்பிவைத்த
ஒப்பிலாக் கருணைத்தேவே
கொடுக்கவும் வகையற்றாயோ
குருசினில் எழுந்தகோவே
இடுக்கணுற் றுடைந்தோமையா
எம்மையா ளேசுநாதா

3. அத்தனேஅ னாதிவாழ்வே
அருமைரட் சகனேஐயா
மெத்தவுந் துயரப்பட்டோம்
வியாகுலம் அடைந்தோமுன்றன்
சித்தமே இரங்கொணாதோ
திருமுகம் நோக்கொண்ணாதோ
எத்தனை தரங்கூப்பிட்டோம்
எம்மையா ளேசுநாதா

4. ஒப்பிலாக் கிருபையோனே
யுன்றனக் கபையம்நாங்கள்
அப்பனே கைவிடாதே
ஆபத்துப் பெருகிற்றையா
கப்பலிற் றூங்கிறாயோ
கனக்கநித் திரைகொண்டாயோ
எப்பொழு தெழுந்திருப்பாய்
எம்மையா ளேசுநாதா

5. கங்குலும் பகலுமாகக்
கவலைகொண் டடியார்எல்லாம்
பங்கமா யுலகந்தூற்றப்
பாடுகள் மிகப்பட்டெங்கள்
சங்கையை இழந்தோம்பின்னுஞ்
சாதியி னலமுமற்றோம்
எங்கேபோ யிருந்தாயையா
எம்மையா ளேசுநாதா

6. வல்லமை யிலையோஎங்கள்
வறுமைகண் டறிந்திலாயோ
அல்லது மனதில்லாயோ
அடியர்மேல் அன்பிலாயோ
கல்லறைக் கிடமுமற்றுக்
காட்டினுக் ககற்றப்பட்டோம்
இல்லையோ இரக்கமையா
எம்மையா ளேசுநாதா

7. தன்னையே பெலியிட்டிந்தத்
தரணியைப் புரக்கவந்த
உன்னதப் பிதாவின்மைந்தா
உன்னைவிட் டெங்கேபோவோம்
பின்னொரு மீட்பனுண்டோ
பெற்றவ னீயோவேறோ
என்னையா கவலையற்றாய்
எம்மையா ளேசுநாதா

8. அண்ணலே கிருபைகூரும்
அன்னிய ரானோம்நாங்கள்
கண்ணிலே கரிப்பாரில்லைக்
கடூரமாய்த் துரத்தப்பட்டோம்
பண்ணிய கொடூரமெத்தப்
பட்டபா டனேகமுண்டு
எண்ணியு முடியாதையா
எம்மையா ளேசுநாதா

9. காட்டிலே சிதறிப்போனோம்
கடூரமாய் அடிக்கப்பட்டோம்
கேட்டுரு கினவரில்லைக்
கேள்விகேட் பாருமில்லைப்
பாட்டினுக் குயர்ந்ததேவே
பாவிகள் பட்டபாடு
ஏட்டினும் அடங்காதையா
எம்மையா ளேசுநாதா

10. சங்கைபோர்ந் திலங்குதஞ்சைச்
சுவார்ச்சையர் சபைகள்நாங்கள்
மங்கியே துயரத்தாலே
வாடினோம் இரக்கங்காணோந்
தங்களைத் தங்கள்வீட்டைத்
தங்கள்பிள் ளைகளையன்றி
எங்களை நினைப்பாரில்லை
எம்மையா ளேசுநாதா

11. ஆதரவ ருளியெங்கள்
ஆபத்தை நீக்கிமேலுஞ்
சாதியி னிடறலன்றிச்
சபையெலாந் தழைக்கச்செய்து
வேதநாய கன்பாட்டெங்கள்
விண்ணப்பங் களைக்கேட்டன்பாய்
ஏதமே பொறுத்தெந்நாளும்
எம்மையா ளேசுநாதா

புதுக் குருமார் தமிழ்ச் சனங்களுக்குச் செய்த கொடுமையைப்
பற்றிப் பராபரனை நோக்கிக் கூப்பிட்ட முறைப்பாடு - 1834

ஜெபமாலை 17 வரை செய்யுள் 204

Table of contents

previous page start next page